பெங்களூருவில் கோவிலில் குண்டு வைக்க வந்த ஆர்.எஸ்.எஸ் ஏவிவிட்ட தீவிரவாதி கைது செய்யப்பட்டான் என்று ஒரு புகைப்படம் சமூக ஊடகங்களில் பகிரப்பட்டு வருகிறது. இது பற்றி ஆய்வு செய்தோம்.

தகவலின் விவரம்:

உண்மைப் பதிவைக் காண: Facebook I Archive

இஸ்லாமிய பெண் போல் ஆடை அணிந்த ஆண் ஒருவாின் புகைப்படத்துடன் வெளியான எக்ஸ் (ட்வீட்) பதிவை ஸ்கிரீன்ஷாட் எடுத்து பகிர்ந்துள்ளனர். அதில், "கோவிலில் குண்டு வைப்பதற்காக ஏவி விடப்பட்ட ஆர் எஸ் எஸ் தீவிரவாதி பெங்களூரில் கைது..." என்று குறிப்பிடப்பட்டிருந்தது. நிலைத் தகவலில், "சற்று முன்பு இஸ்லாமிய வேடத்தில் கலவரக் கபோதி மாட்டிக்கிட்டான் ஜெய் சிரி ராம்" என்று குறிப்பிடப்பட்டிருந்தது. இந்த பதிவு 2023 அக்டோபர் 19ம் தேதி ஃபேஸ்புக்கில் பதிவிடப்பட்டிருந்தது.

உண்மைப் பதிவைக் காண: twitter.com I Archive

உண்மை அறிவோம்:

இஸ்லாமிய பெண் போல வேடமிட்டு குண்டு வைக்க வந்த ஆர்.எஸ்.எஸ் ஆதரவாளர் கைது என்று சமூக ஊடகங்களில் பலரும் பதிவிட்டு வருகின்றனர். அப்படி எந்த ஒரு செய்தியும் 18, 19 அக்டோபர் 2023 ஆகிய தேதிகளில் வெளியாகவில்லை. உண்மையில் இப்படி ஒருவர் வெடிகுண்டுடன் பிடிபட்டிருந்தால் தேசிய அளவில் மிகப்பெரிய செய்தியாகி இருக்கும். இந்துத்துவா எதிர்ப்பு ஊடகங்களாவது இதை பெரிய அளவில் வெளியிட்டிருப்பார்கள். ஆனால், அப்படி எந்த ஒரு செய்தியும் கிடைக்கவில்லை. இதன் மூலம் இந்த தகவல் தவறானது என்பது தெளிவாகிறது.

இந்த பதிவில் உள்ள புகைப்படத்தை வைத்து சில ஆண்டுகளுக்கு முன்பு வதந்தி பரப்பப்பட்டது. இது பற்றி நம்முடைய ஃபேக்ட் கிரஸண்டோ தமிழிலேயே கட்டுரை வெளியிட்டுள்ளோம். அந்த கட்டுரையைத் தேடி எடுத்தோம். 2019ம் ஆண்டு டிசம்பர் 17ம் தேதி இந்த புகைப்படம் தொடர்பான கட்டுரையை வெளியிட்டிருந்தோம். 2019ம் ஆண்டு நாடு முழுக்க நடந்து வந்த குடியுரிமை திருத்தச் சட்டத்தை எதிர்த்து நடந்த ஆர்ப்பாட்டத்தைச் சீர் குலைக்க இஸ்லாமிய பெண் வேடத்தில் வந்த நபர் என்று அப்போது வதந்தி பரப்பப்பட்டிருப்பது தெரிந்தது.

இந்த புகைப்படத்தை சோமாலியா ஊடகங்கள் மற்றும் எகிப்து ஊடகங்கள் வெளியிட்டிருப்பதையும் அந்த கட்டுரையில் குறிப்பிட்டிருந்தோம். பழைய செய்தி என்ற அடிப்படையில் எகிப்து ஊடகம் இந்த புகைப்படத்துடன் 2017ல் செய்தி வெளியிட்டிருந்தது. குழந்தை கடத்தலில் ஈடுபட்ட நபர் கைது செய்யப்பட்டார் என்று அந்த செய்தியில் குறிப்பிடப்பட்டிருந்தது. இதை ஆதாரங்கள் அடிப்படையில் அப்போது உறுதி செய்திருந்தோம். அந்த கட்டுரையைக் காண இங்கே கிளிக் செய்யுங்கள்.

உண்மைப் பதிவைக் காண: sharkiatoday.com I Archive

நம்முடைய ஆய்வில் பெங்களூருவில் கோவிலில் வெடிகுண்டு வைக்க வந்த நபர் கைது என்று 2023 அக்டோபர் 19ல் எந்த செய்தியும் வெளியாகவில்லை. படத்தில் உள்ள நபர் எகிப்தைச் சார்ந்தவர் என்பது 2017ல் எகிப்து ஊடகம் வெளியிட்ட செய்தி மூலம் உறுதி செய்யப்பட்டுள்ளது. இதன் அடிப்படையில் நாம் ஆய்வுக்கு எடுத்துக்கொண்ட பதிவு தவறானது என்று உறுதி செய்யப்படுகிறது.

முடிவு:

பெங்களூருவில் குண்டு வைக்க வந்த ஆர்எஸ்எஸ் தீவிரவாதி என்று பரவும் படத்தில் உள்ள நபர் எகிப்தைச் சார்ந்தவர் என்பதை தகுந்த ஆதாரங்கள் அடிப்படையில் ஃபேக்ட் கிரஸண்டோ தமிழ் உறுதி செய்துள்ளது. எனவே, நமது வாசகர்கள், இத்தகைய தவறான செய்தி, புகைப்படங்கள், வீடியோ போன்றவற்றை உறுதி செய்யாமல் மற்றவர்களுக்குப் பகிர வேண்டாம் என கேட்டுக் கொள்கிறோம். வாசகர்கள் தங்களுக்கு சந்தேகம் என்று தோன்றும் தகவல், பதிவு, புகைப்படம், வீடியோவை எங்களது வாட்ஸ் ஆப் எண்ணிற்கு (+91 9049053770) அனுப்பினால், அதுபற்றி ஆய்வு செய்து உண்மை விவரத்தை வெளியிடுகிறோம்.

சமூக ஊடகங்களில் எங்களை பின் தொடர விரும்பினால்…

Facebook I Twitter I Google News Channel

Avatar

Title:RAPID FACT CHECK: பெங்களூருவில் குண்டு வைக்க வந்த ஆர்எஸ்எஸ் தொண்டர் கைது செய்யப்பட்டாரா?

Written By: Chendur Pandian

Result: False