பீகார் மக்கள் வீதியில் இறங்கிப் போராடத் தொடங்கிவிட்டதாக பரவும் வீடியோ உண்மையா?

False அரசியல் சார்ந்தவை | Political இந்தியா | India

வாக்குத் திருட்டுக்கு எதிராக பீகார் மக்கள் வீதியில் இறங்கி போராடத் தொடங்கிவிட்டனர் என்று இரண்டுக்கும் மேற்பட்ட வீடியோக்களை ஒன்று சேர்த்து ஃபேஸ்புக்கில் பதிவிட்டுள்ளனர். இது தொடர்பாக ஆய்வு செய்தோம்.

தகவலின் விவரம்:

உண்மைப் பதிவைக் காண: Facebook I Archive

ஒரு மைதானத்தில் ஆயிரக்கணக்கானோர் கூடியிருக்கும் வீடியோ மற்றும் இரவில் சாலையில் தீப்பந்தத்துடன் ஆயிரக்கணக்கானோர் ஊர்வலமாக செல்லும் வீடியோக்களை ஒன்று சேர்த்து ஃபேஸ்புக்கில் பதிவிட்டுள்ளனர். நிலைத் தகவலில், “தீப்பொறி பற்றி விட்டது. பீகார் மக்கள் வீதிகளில் இறங்கி விட்டனர். மகாராஷ்ட்ரா, தமிழ்நாடு, கேரளா ஒவ்வொரு மாநிலமாக இறங்கும்” என்று குறிப்பிடப்பட்டிருந்தது. இந்த வீடியோவை பலரும் சமூக ஊடகங்களில் பதிவிட்டு வருகின்றனர்.

உண்மை அறிவோம்:

பீகாரில் பாஜக கூட்டணி வெற்றி பெற்றதைத் தொடர்ந்து அங்கு மக்கள் போராட்டம் நடத்தி வருவதாக பலரும் சமூக ஊடகங்களில் பதிவிட்டு வருகின்றனர். பீகாரில் வீதியில் இறங்கி போராடும் மக்கள் என்று மூன்று வீடியோக்களை இணைத்து ஒன்றாக பதிவிட்டுள்ளனர். இதில் ஒரு வீடியோ தொடர்பாக ஏற்கனவே நம்முடைய ஃபேக்ட் கிரஸண்டோ தமிழில் கட்டுரை வெளியிட்டிருந்தோம். 

கடந்த ஆகஸ்ட் மாதம் பீகாரில் ராகுல் காந்தி யாத்திரை மேற்கொண்டார். அப்போது அவரைக் காண கூடிய கூட்டம் என்று அந்த வீடியோவை அப்போது பலரும் சமூக ஊடகங்களில் பதிவிட்டிருந்தனர். ஆனால் அது உண்மையில் மகாராஷ்டிராவில் நடந்த ஒரு நிகழ்ச்சியின் போது எடுக்கப்பட்ட வீடியோ என்று உண்மை கண்டறியும் ஆய்வு செய்திருந்தோம். அந்த கட்டுரையைக் காண இங்கே கிளிக் செய்யுங்கள். அந்த பழைய வீடியோவை இப்போது பீகாரில் வீதியில் இறங்கிப் போராடும் மக்கள் என்று தவறாகப் பதிவிட்டுள்ளனர்.

உண்மைப் பதிவைக் காண: Facebook I Archive

இதனுடன் சேர்க்கப்பட்டிருந்த கையில் தீ பந்தங்களுடன் மக்கள் பேரணியாகச் செல்லும் வீடியோ தொடர்பாக ஆய்வு செய்தோம். வீடியோ காட்சிகளைப் புகைப்படங்களாக மாற்றி கூகுள் லென்ஸ் தளத்தில் பதிவேற்றித் தேடினோம். அப்போது, அந்த வீடியோவும் இப்போது எடுக்கப்பட்டது இல்லை என்பது தெரியவந்தது. வாக்குத் திருட்டுக்கு எதிராக குரல் கொடுங்கள் என்று குறிப்பிட்டு இந்த வீடியோவை 2025 ஆகஸ்ட் 12ம் தேதியிலிருந்து பலரும் பதிவிட்டிருந்ததைக் காண முடிந்தது. பீகாரில் வாக்குத் திருட்டுக்கு எதிராக இளைஞர் காங்கிரஸ் சார்பில் தீ பந்தம் ஏந்தி பேரணி நடத்தப்பட்டதாக சில பதிவுகள் நமக்குக் கிடைத்தன. 

உண்மைப் பதிவைக் காண: Facebook I Archive

மற்றொரு தீப்பந்தம் ஏந்தி பேரணியாக சென்ற வீடியோ காட்சியை புகைப்படங்களாக மாற்றி கூகுள் லென்ஸ் தளத்தில் பதிவேற்றித் தேடினோம். அது ராஜஸ்தானில் எடுக்கப்பட்டது என்பது தெரியவந்தது. அந்த வீடியோவை செப்டம்பர் இறுதியில் பலரும் சமூக ஊடகங்களில் பதிவிட்டிருந்தனர். அதில், ராஜஸ்தானின் ஜலாவரில் பள்ளி விபத்தில் கொல்லப்பட்ட குழந்தைகளின் குடும்பங்களுக்கு நீதி கோரி ஜெய்ப்பூரில் தீப்பந்தம் ஏந்தி பேரணியாக சென்ற மக்கள் என்று குறிப்பிடப்பட்டிருந்தது. இதன் மூலம் இந்த மூன்று வீடியோக்களும் பீகார் சட்டமன்ற தேர்தலுக்கு முன்பாகவே வெளியாகி இருந்தது என்பது உறுதியானது.

இதன் மூலம் பீகார் தேர்தல் முடிவுகளுக்கு எதிராக அல்லது பீகார் வாக்குத் திருட்டுக்கு எதிராக பீகாரிகள் வீதிகளில் இறங்கிப் போராடத் தொடங்கினர் என்று பரவும் வீடியோ தவறானது என்பது உறுதியாகிறது. இந்த ஆதாரங்கள் அடிப்படையில் நாம் ஆய்வுக்கு எடுத்துக்கொண்ட பதிவு தவறானது என்பது உறுதியாகிறது.

முடிவு:

மகாராஷ்டிராவில் நடந்த கால்நடை பந்தயம், ராஜஸ்தானில் நடந்த பேரணி மற்றும் பீகாரில் 2025 ஆகஸ்டில் நடந்த வாக்குத் திருட்டு விழிப்புணர்வு பேரணியின் வீடியோக்களை தொகுத்து பீகாரில் மக்கள் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர் என்று தவறான தகவல் சேர்த்து பகிர்ந்திருப்பது ஆதாரங்கள் அடிப்படையில் ஃபேக்ட் கிரஸண்டோ தமிழ் உறுதி செய்துள்ளது. எனவே, நமது வாசகர்கள், இத்தகைய தவறான செய்தி, புகைப்படங்கள், வீடியோ போன்றவற்றை உறுதி செய்யாமல் மற்றவர்களுக்குப் பகிர வேண்டாம் என கேட்டுக் கொள்கிறோம். வாசகர்கள் தங்களுக்கு சந்தேகம் என்று தோன்றும் தகவல், பதிவு, புகைப்படம், வீடியோவை எங்களது வாட்ஸ் ஆப் எண்ணிற்கு (+91 9049053770) அனுப்பினால், அதுபற்றி ஆய்வு செய்து உண்மை விவரத்தை வெளியிடுகிறோம்.

சமூக ஊடகங்களில் எங்களை பின் தொடர விரும்பினால்…

Facebook I X Post I Google News Channel I Instagram

Avatar

Title:பீகார் மக்கள் வீதியில் இறங்கிப் போராடத் தொடங்கிவிட்டதாக பரவும் வீடியோ உண்மையா?

Fact Check By: Chendur Pandian 

Result: False

Leave a Reply