பலுசிஸ்தான் மக்கள் பா.ஜ.க கொடியுடன் கொண்டாட்டத்தில் ஈடுபட்டனரா?

அரசியல் | Politics இந்தியா | India சமூக ஊடகம் | Social

பாகிஸ்தானின் பலுசிஸ்தான் மக்கள், இந்தியப் பிரதமர் மோடி தங்களுக்கு சுதந்திரம் பெற்றுத் தருவார் என்று பா.ஜ.க கொடியுடன் கொண்டாட்டம் மேற்கொண்டதாக ஒரு வீடியோ சமூக ஊடகங்களில் பகிரப்பட்டு வருகிறது. இது பற்றி ஆய்வு செய்தோம்.

தகவலின் விவரம்:

உண்மைப் பதிவைக் காண: Facebook I Archive

இஸ்லாமிய பெண்கள் பாட்டுப் பாடும் வீடியோ பகிரப்பட்டுள்ளது. அதில் ஒருவர் பாஜக கொடியை வைத்துள்ளார். ஒருவர் மோடி முகமூடி அணிந்து வருகிறார். நிலைத் தகவலில், “பாகிஸ்தானில் பாஜக கொடி……. பாகிஸ்தானில் உள்ள பலுசிஸ்தானில் மோடி ஆட்சிக்கு வந்து சுதந்திரம் பெற்றுத் தருவார் என நம்பும் மக்களின் கொண்டாட்டம்” என்று குறிப்பிடப்பட்டுள்ளது. இந்த வீடியோவை, Kavitha Srikanth Aranthangi என்ற ஐடி கொண்டவர் 2022 மே 7ம் தேதி பதிவிட்டுள்ளார். பலரும் இதை பகிர்ந்து வருகின்றனர்.

உண்மை அறிவோம்:

பாகிஸ்தானிலிருந்து தனி நாடாக வேண்டும் என்று பலுசிஸ்தானில் போராட்டங்கள் நடந்து வருகின்றன. இந்த நிலையில் தங்களுக்கு இந்தியா சுதந்திரம் வாங்கித் தரும் என்ற நம்பிக்கையில் பலுசிஸ்தான் மக்கள் கொண்டாட்டங்களில் ஈடுபட்டு வருகின்றனர் என்று வீடியோ பகிரப்பட்டு வருகிறது.

Archive

இப்படி ஏதும் சமீபத்தில் அங்கு நடந்ததா, அது தொடர்பாக செய்தி ஏதும் வெளியாகி உள்ளதா என்று பார்த்தோம். அப்படி எந்த ஒரு செய்தியும் நமக்கு கிடைக்கவில்லை. எனவே, வீடியோவை புகைப்படங்களாக மாற்றி ரிவர்ஸ் இமேஜ் தேடலில் பதிவேற்றித் தேடினோம். அப்போது, பல்வேறு படங்களை மாற்றி மாற்றி தேடிய போது, இந்த வீடியோ 2019ம் ஆண்டில் இருந்து சமூக ஊடகங்களில் பகிர்ந்து வருவதைக் காண முடிந்தது. நாடாளுமன்ற தேர்தலில் பிரதமர் மோடி வெற்றி பெற்ற சூழலில் ஒருவர் இந்த வீடியோவை பகிர்ந்திருந்தார். அதில், நாட்டின் எல்லைப் பகுதியில் பிரதமர் மோடியின் வெற்றியைக் கொண்டாடும் மக்கள் என்று குறிப்பிட்டிருந்தார். 

Archive

மற்றொரு வீடியோ 2019 நாடாளுமன்றத் தேர்தல் முடிவுக்கு ஒரு மாதத்துக்கு முன்பு, நாடாளுமன்றத் தேர்தல் நடைபெற்ற சூழலில் பதிவேற்றம் செய்யப்பட்டிருந்தது. அதில், பாஜக-வுக்காக காஷ்மீரில் இஸ்லாமிய பெண்கள் பிரசாரம் மேற்கொண்டனர் என்று குறிப்பிடப்பட்டிருந்தது. இதன் அடிப்படையில் பல்வேறு கீ வார்த்தைகளைப் பயன்படுத்தித் தேடினோம். அப்போது காஷ்மீர் மாநிலம் அனந்தநாக் நாடாளுமன்றத் தொகுதியில் சோஃபி யூசூஃப் என்பவர் பா.ஜ.க சார்பில் வேட்புமனு தாக்கல் செய்தபோது எடுக்கப்பட்ட வீடியோ என்று ஜம்மு – காஷ்மீர் மாநில பா.ஜ.க இந்த வீடியோவை பதிவிட்டிருந்தது. 

Archive

ஜம்மு காஷ்மீர், அனந்த்நாக், சோஃபி யூசூஃப் என மேலும் சில கீ வார்த்தைகளை பயன்படுத்தித் தேடிய போது, சோஃபி யூசூஃப் வெளியிட்டிருந்த வீடியோவும் கிடைத்தது. அதில் வேட்புமனு தாக்கல் செய்ய சென்ற போது என்று அவர் குறிப்பிட்டிருந்தார். இதன் மூலம் இந்த வீடியோ பாகிஸ்தானில் எடுக்கப்பட்டது இல்லை, 2019 நாடாளுமன்றத் தேர்தலின் போது இந்தியாவின் காஷ்மீரில் எடுக்கப்பட்டது என்பது உறுதியானது. இதன் அடிப்படையில் நாம் ஆய்வுக்கு எடுத்துக்கொண்ட பதிவு தவறானது என்று உறுதி செய்யப்படுகிறது.

Archive

முடிவு:

பிரதமர் மோடி தங்களுக்கு சுதந்திரம் பெற்றுத் தருவார் என பாகிஸ்தானின் பலுசிஸ்தான் மக்கள் கொண்டாட்டத்தில் ஈடுபட்டனர் என்று பரவும் வீடியோ, 2019 நாடாளுமன்றத் தேர்தலின் போது காஷ்மீரில் எடுக்கப்பட்டது என்பதை தகுந்த ஆதாரங்கள் அடிப்படையில் ஃபேக்ட் கிரஸண்டோ தமிழ் உறுதி செய்துள்ளது. எனவே, நமது வாசகர்கள், இத்தகைய தவறான செய்தி, புகைப்படங்கள், வீடியோ போன்றவற்றை உறுதி செய்யாமல் மற்றவர்களுக்குப் பகிர வேண்டாம் என கேட்டுக் கொள்கிறோம். வாசகர்கள் தங்களுக்கு சந்தேகம் என்று தோன்றும் தகவல், பதிவு, புகைப்படம், வீடியோவை எங்களது வாட்ஸ் ஆப் எண்ணிற்கு (+91 9049053770) அனுப்பினால், அதுபற்றி ஆய்வு செய்து உண்மை விவரத்தை வெளியிடுகிறோம்.

சமூக ஊடகங்களில் எங்களை பின் தொடர விரும்பினால்…

Facebook I Twitter I Google News Channel

Avatar

Title:பலுசிஸ்தான் மக்கள் பா.ஜ.க கொடியுடன் கொண்டாட்டத்தில் ஈடுபட்டனரா?

Fact Check By: Chendur Pandian 

Result: False