
ராகுல் காந்தி பேரணியில் பாகிஸ்தான் கொடி கொண்டுவரப்பட்டது என்று ஒரு வீடியோ சமூக ஊடகங்களில் பகிரப்பட்டு வருகிறது. இது பற்றி ஆய்வு செய்தோம்.
தகவலின் விவரம்:

உண்மைப் பதிவைக் காண: Facebook I Archive
இந்திய யூனியன் முஸ்லிம் லீக் கட்சியினர் பேரணியாக வரும் வீடியோ பகிரப்பட்டுள்ளது. நிலைத்தகவலில், “இராகுல் காந்தி பாதையாத்திரையில் பாக்கிஸ்தான் கொடி 😥😥 அடுத்த பிரிவினை கண்டிப்பாக உண்டு ஹிந்து சொந்தங்கள் எல்லாம் போருக்கு தாயார் ஆகுங்கள்” என்று குறிப்பிடப்பட்டிருந்தது.
இந்த பதிவை Siva Ramesh என்ற ஃபேஸ்புக் ஐடி கொண்டவர் 2022 அக்டோபர் 3ம் தேதி பதிவிட்டுள்ளார். இதைப் பலரும் பகிர்ந்து வருகின்றனர்.
உண்மை அறிவோம்:
பாகிஸ்தான் கொடிக்கும், இந்திய தேசிய முஸ்லிம் லீக் கட்சிக் கொடிக்கும் வித்தியாசம் தெரியாமல் சமூக ஊடகங்களில் வதந்தி பரப்புவது தொடர்கிறது. 2019 நாடாளுமன்றத் தேர்தலின் போதும், 2021 சட்டமன்ற தேர்தலின் போதும், அதைத் தொடர்ந்து பல முறையும் இந்திய யூனியன் முஸ்லிம் லீக் கட்சிக்கொடியை பாகிஸ்தான் கொடி என்று விஷமத்தனமாக சமூக ஊடகங்களில் சிலர் வேண்டுமென்றே பகிர்ந்து வருவதைக் காண முடிகிறது.
அந்த வகையில் இந்திய யூனியன் முஸ்லிம் லீக் கொடியுடன் பேரணியாக வரும் வீடியோ சமூக ஊடகங்களில் பகிர்ந்து வருகிறது. ராகுல் காந்தி பேரணியில் இந்தியாவை துண்டாட தூண்டும் வகையில் பாகிஸ்தான் கொடி கொண்டு வரப்பட்டது என்று பலரும் இந்த வீடியோவை பகிர்ந்து வருகின்றனர். வீடியோவில் உள்ளவர்கள் கையில் இருப்பது பாகிஸ்தான் கொடி இல்லை என்பதை உறுதி செய்வதற்கான ஆய்வை நடத்தினோம்.

முதலில் இந்திய யூனியன் முஸ்லிம் லீக் கட்சியின் கொடியைத் தேடி எடுத்தோம். அது அக்கட்சியின் ட்விட்டர் பக்கத்தில் நமக்கு கிடைத்தது. முழுவதும் பச்சை நிற கொடியில் சற்று சிறியதாக வெள்ளை நிறத்தில் பிறை – நட்சத்திர சின்னம் பொறிக்கப்பட்டிருந்தது. கொடிக் கம்பத்துக்கு மிக நெருக்கமாகக் கொடிக் கம்பத்தைப் பார்த்தபடி பிறை – நட்சத்திரம் பொறிக்கப்பட்டிருந்தது.
அடுத்ததாகப் பாகிஸ்தான் நாட்டின் தேசியக் கொடியை பார்த்தோம். வெள்ளை நிற செங்குத்து பட்டையுடன் கொடியின் முக்கால் பாகத்துக்கு மேல் பச்சை நிறத்துடன் கொடி இருக்கிறது. பச்சை நிற பகுதிக்குள் மிகப் பெரியதாக பிறை மற்றும் நட்சத்திர சின்னம் பொறிக்கப்பட்டிருந்தது. கொடிக் கம்பத்திற்கு வெளியே பார்த்தபடி பிறை – நட்சத்திரம் பொறிக்கப்பட்டிருந்தது.

இதன் மூலம் பேரணியாக வந்தவர்கள் இந்திய யூனியன் முஸ்லிம் லீக் கட்சிக் கொடியைத் தான் சுமந்து வந்தனர் என்பது உறுதியாகிறது. இதன் அடிப்படையில், ராகுல் காந்தியின் இந்திய ஒற்றுமை யாத்திரையில் பாகிஸ்தான் கொடி பயன்படுத்தப்பட்டது என்றும், இந்தியாவைத் துண்டாட முயற்சி மேற்கொள்ளப்படுகிறது என்று பரவும் தகவல் தவறானது என்று உறுதி செய்யப்படுகிறது.
முடிவு:
இந்திய ஒற்றுமை பயணத்தில் பாகிஸ்தான் கொடி கொண்டுவரப்பட்டது என்று பரவும் தகவல் தவறானது என்பதை தகுந்த ஆதாரங்கள் அடிப்படையில் ஃபேக்ட் கிரஸண்டோ தமிழ் உறுதி செய்துள்ளது. எனவே, நமது வாசகர்கள், இத்தகைய தவறான செய்தி, புகைப்படங்கள், வீடியோ போன்றவற்றை உறுதி செய்யாமல் மற்றவர்களுக்குப் பகிர வேண்டாம் என கேட்டுக் கொள்கிறோம். வாசகர்கள் தங்களுக்கு சந்தேகம் என்று தோன்றும் தகவல், பதிவு, புகைப்படம், வீடியோவை எங்களது வாட்ஸ் ஆப் எண்ணிற்கு (+91 9049053770) அனுப்பினால், அதுபற்றி ஆய்வு செய்து உண்மை விவரத்தை வெளியிடுகிறோம்.
சமூக ஊடகங்களில் எங்களை பின் தொடர விரும்பினால்…
Facebook I Twitter I Google News Channel

Title:ராகுல் காந்தி பேரணியில் பாகிஸ்தான் கொடி பயன்படுத்தப்பட்டதா?
Fact Check By: Chendur PandianResult: False
