
அயோத்தியில் தோண்டத் தோண்ட கிடைக்கும் புத்தர் சிலைகள் என்று இரண்டு புகைப்படங்கள் சமூக ஊடகங்களில் பகிரப்பட்டு வருகிறது. இது தொடர்பாக ஆய்வு செய்தோம்.
தகவலின் விவரம்:

உண்மைப் பதிவைக் காண: Facebook I Archive
தலை உடைக்கப்பட்ட புத்தர் சிலைகள் மற்றும் குகை ஒன்றில் புத்தர் சிலை இருக்கும் புகைப்படங்கள் ஃபேஸ்புக்கில் பதிவிடப்பட்டுள்ளது. நிலைத் தகவலில், “அயோத்தியில் தோண்ட தோண்ட கிடைக்கும் புத்தர் சிலைகள். ராமன் வரலாறு அல்ல புனையப்பட்ட கதை” என்று குறிப்பிடப்பட்டிருந்தது. இந்த பதிவை பலரும் சமூக ஊடகங்களில் பகிர்ந்து வருகின்றனர்.
உண்மை அறிவோம்:
அயோத்தியில் நிலத்தைத் தோண்டிய போது கிடைத்த புத்தர் சிலைகள் என்று கட்டிடத்திற்குள் வரிசையாக இருக்கும் தலைகள் உடைக்கப்பட்ட நிலையில் உள்ள புத்தர் சிலை புகைப்படத்தைப் பகிர்ந்துள்ளனர். அயோத்தியில் ராமர் கோவில் கட்டப்பட்டு திறக்கப்பட்டுவிட்டது. அப்படி இருக்க எங்கு நிலத்தைத் தோண்டினார்கள், எங்கு கண்டுபிடித்தார்கள் என்று எந்த தகவலும் இல்லாமல் பதிவிட்டுள்ளனர். எனவே, இந்த பதிவு தொடர்பாக ஆய்வு செய்தோம்.
முதலில் சமீபத்தில் அயோத்தியில் நிலத்தைத் தோண்டும் போது ஏதேனும் புத்தர் சிலை கண்டுபிடிக்கப்பட்டதா… அது தொடர்பாக செய்தி ஏதும் உள்ளதா என்று தேடிப் பார்த்தோம். ஆனால், நமக்கு அப்படி எந்த ஒரு செய்தியும் கிடைக்கவில்லை. நாம் ஆய்வுக்கு எடுத்துக்கொண்ட பதிவில் உள்ள புகைப்படத்தை கூகுள் லென்ஸ் தளத்தில் பதிவேற்றித் தேடினோம். 2020ம் ஆண்டிலிருந்து இந்த புகைப்படங்களைப் பலரும் சமூக ஊடகங்களில் பதிவிட்டு வந்திருப்பதைக் காண முடிந்தது.

உண்மைப் பதிவைக் காண: ancientpages.com I Archive
தொடர்ந்து தேடிய போது இந்த புத்தர் சிலைகள் ஆப்கானிஸ்தான் மற்றும் பாகிஸ்தானில் இருப்பதாக செய்திகள் கிடைத்தன. தலை உடைக்கப்பட்ட நிலையில் வரிசையாக உள்ள புத்தர் சிலை புகைப்படத்தை கூகுள் லென்ஸ் தளத்தில் பதிவேற்றித் தேடிய போது, அந்த சிலை பாகிஸ்தானில் தட்சசீலம் அல்லது தக்சீலா (Taxila) என்ற பகுதியில் உள்ளதாக 2016ம் ஆண்டு வெளியான அகழாய்வு தொடர்பான இணையதளத்தில் செய்தி வெளியாகி இருந்தது.

உண்மைப் பதிவைக் காண: popular-archaeology.com I Archive I aljazeera.com I Archive
குகைக்குள் புத்தர் சிலை இருக்கும் புகைப்படத்தைக் கூகுள் லென்ஸ் தளத்தில் பதிவேற்றித் தேடினோம். அந்த புகைப்படம் ஆப்கானிஸ்தானில் மெஸ் ஐநாக் (Mes Aynak) என்ற பகுதியில் உள்ளதாகவும் 2014ம் ஆண்டு இந்த புத்தர் சிலை கண்டுபிடிக்கப்பட்டதாகவும் popular-archaeology.com என்ற இணையதளத்தில் செய்தி வெளியாகி இருந்தது.aljazeera.com இணையதளத்தில் 2015ம் ஆண்டில் இந்த புத்தர் சிலை புகைப்படத்துடன் செய்தி வெளியிட்டிருந்தனர். இவை எல்லாம் இந்த புத்தர் சிலைகள் அயோத்தியில் கண்டுபிடிக்கப்பட்டவை இல்லை என்பதை உறுதி செய்கின்றன.
முடிவு:
அயோத்தியில் நிலத்தை தோண்டிய போது கிடைத்த புத்தர் சிலைகள் என்று பரவும் புகைப்படங்கள் ஆப்கானிஸ்தான் மற்றும் பாகிஸ்தானைச் சார்ந்தவை என்பதை தகுந்த ஆதாரங்கள் அடிப்படையில் ஃபேக்ட் கிரஸண்டோ தமிழ் உறுதி செய்துள்ளது. எனவே, நமது வாசகர்கள், இத்தகைய தவறான செய்தி, புகைப்படங்கள், வீடியோ போன்றவற்றை உறுதி செய்யாமல் மற்றவர்களுக்குப் பகிர வேண்டாம் என கேட்டுக் கொள்கிறோம். வாசகர்கள் தங்களுக்கு சந்தேகம் என்று தோன்றும் தகவல், பதிவு, புகைப்படம், வீடியோவை எங்களது வாட்ஸ் ஆப் எண்ணிற்கு (+91 9049053770) அனுப்பினால், அதுபற்றி ஆய்வு செய்து உண்மை விவரத்தை வெளியிடுகிறோம்.
சமூக ஊடகங்களில் எங்களை பின் தொடர விரும்பினால்…
Facebook I X Post I Google News Channel I Instagram

Title:அயோத்தியில் கிடைத்த புத்தர் சிலைகள் என்று பரவும் புகைப்படங்கள் உண்மையா?
Fact Check By: Chendur PandianResult: False
