
பிரபல நடிகை சாய் பல்லவி திடீர் மரணம் என்று ஃபேஸ்புக், யூடியூபில் ஒரு பதிவு வைரலாக பகிரப்பட்டு வருகிறது. அது பற்றி ஆய்வு செய்தோம்.
தகவலின் விவரம்:

அசல் பதிவைக் காண: Facebook I Archive
“நடிகை சாய் பல்லவி திடீர் மரணத்தால் பெரும் சோகத்தில் தமிழகம் ரசிகர்கள் வேதனை” என்று இணையதள செய்தி ஒன்றின் லிங் ஃபேஸ்புக்கில் பகிரப்பட்டுள்ளது.
Anitha Sampath Followers என்ற ஃபேஸ்புக் பக்கம் இந்த பதிவை 2021 செப்டம்பர் 28ம் தேதி பதிவிட்டிருந்தது. பலரும் இதை ஷேர் செய்து வருகின்றனர்.
உண்மை அறிவோம்:
என் குடும்பத்திலும் நீட் (NEET Exam) தற்கொலை சோகம் நிகழ்ந்திருக்கிறது என்று திரைப்பட வெற்றிவிழா நிகழ்ச்சி ஒன்றில் நடிகை சாய் பல்லவி கூறியிருந்தார். இந்த நிலையில், நடிகை சாய் பல்லவி திடீர் மரணம் என்று செய்தி வெளியிடப்பட்டுள்ளது.
முன்னணி நடிகையான சாய் பல்லவி உயிரிழந்திருந்தால் அது மிகப்பெரிய செய்தியாக வெளியாகி இருக்கும். ஆனால், அப்படி எதுவும் இல்லாத சூழலில் இந்த செய்தி அதிர்ச்சியை ஏற்படுத்தியது. பொதுவாக யூடியூபில் பார்வையாளர்களைப் பெறுவதற்காக வித்தியாசமான, வில்லங்கமான தலைப்பு வைப்பார்கள். எனவே, என்னதான் சொல்கிறார்கள் என்று பார்க்க அந்த இணையதள லிங்கை ஓப்பன் செய்து பார்த்தோம்.

அசல் பதிவைக் காண: live50today.com I Archive
செப்டம்பர் 28, 2021 அன்று இந்த இந்த செய்தி வெளியிடப்பட்டு இருந்தது. அதில், “நடிகை சாய் பல்லவி திடீர் மரணத்தால் பெரும் சோகத்தில் தமிழகம் ரசிகர்கள் வேதனை. கதறியலும் குடும்பத்தினரும் பிரபலங்களும்” என்று தலைப்பிட்டிருந்தனர். கீழே செய்தியில் என்ன சொல்கிறார்கள் என்று பார்த்தோம். தலைப்பையே செய்தியாக வெளியிட்டு வேறு எந்த ஒரு விஷயத்தையும் குறிப்பிடவில்லை.
அதற்கு பதில் யூடியூப் லிங்க் ஒன்றை வழங்கியிருந்தனர். “நடிகை சாய் பல்லவி திடீர் மரணத்தால் பெரும் சோகத்தில் தமிழகம் ரசிகர்கள் வேதனை” என்று அந்த யூடியூப் வீடியோவுக்கு தலைப்பிடப்பட்டிருந்தது. அந்த வீடியோவில் என்ன சொல்கிறார்கள் என்று நிதானமாக கேட்டோம்.
அதில், “நீட் தேர்வு காரணமாக எனது குடும்பத்திலேயே ஒருவர் தற்கொலை செய்துகொண்டார். பெற்றோர்களும் நண்பர்களும் தான் மாணவர்களுடன் பேசி நம்பிக்கையை ஊட்ட வேண்டும் என்று சாய் பல்லவி கூறியுள்ளார். அது அவரது ரசிகர்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது” என்று குறிப்பிட்டிருந்தனர்.

அசல் பதிவைக் காண: YouTube Link
தலைப்பைப் பார்த்து பலரும் இந்த வீடியோவை காண வந்திருப்பதை காண முடிந்தது. வீடியோவை பார்த்த பிறகு சம்பந்தம் இல்லாத தலைப்பு வைத்திருப்பதற்காக வீடியோவை வெளியிட்ட நபரை திட்டிவிட்டு செல்கின்றனர்.

இதன் மூலம், யூடியூபில் பார்வையாளர்களை ஈர்க்க வேண்டும் என்பதற்காகத் தவறான செய்தியை வெளியிட்டிருப்பது உறுதியாகிறது. இதன் அடிப்படையில் நடிகை சாய் பல்லவி திடீர் மரணம் என்று பகிரப்படும் பதிவு தவறானது என்று உறுதி செய்யப்படுகிறது.
முடிவு:
நடிகை சாய் பல்லவி திடீர் மரணம் என்று பகிரப்படும் பதிவு தவறானது என்பதை தகுந்த ஆதாரங்களுடன் ஃபேக்ட் கிரஸண்டோ தமிழ் உறுதி செய்துள்ளது. எனவே, நமது வாசகர்கள், இத்தகைய தவறான செய்தி, புகைப்படங்கள், வீடியோ போன்றவற்றை உறுதி செய்யாமல் மற்றவர்களுக்குப் பகிர வேண்டாம் என கேட்டுக் கொள்கிறோம். வாசகர்கள் தங்களுக்கு சந்தேகம் என்று தோன்றும் தகவல், பதிவு, புகைப்படம், வீடியோவை எங்களது வாட்ஸ் ஆப் எண்ணிற்கு (+91 9049053770) அனுப்பினால், அதுபற்றி ஆய்வு செய்து உண்மை விவரத்தை வெளியிடுகிறோம்.
சமூக ஊடகங்களில் எங்களை பின் தொடர விரும்பினால்…
Facebook I Twitter I Google News Channel

Title:நடிகை சாய் பல்லவி மரணம் என்று அதிர்ச்சி கிளப்பிய யூடியூப் பதிவு!
Fact Check By: Chendur PandianResult: False
