
தமிழ்நாடு அரசின் கோபுர சின்னத்தை மாற்ற குழு அமைக்கப்படும் என்று உதயநிதி ஸ்டாலின் கூறியதாக ஒரு தகவல் சமூக ஊடகங்களில் வைரலாக பகிரப்பட்டு வருகிறது. இது பற்றி ஆய்வு செய்தோம்.
தகவலின் விவரம்:

அசல் பதிவைக் காண: Facebook I Archive
உதயநிதி ஸ்டாலின் புகைப்படத்துடன் கூடிய இணையதள செய்தி ஒன்றின் ஸ்கிரீன்ஷாட் பகிரப்பட்டுள்ளது. அதில், “தமிழக அரசின் கோபுர சின்னத்தை மாற்றுவது பற்றி குழு அமைக்கப்படும். தமிழக அரசின் (முத்திரை) சின்னத்தில் தற்போது ஸ்ரீவில்லிபுத்துர் கோவில் கோபுரம் உள்ளது. இதை குறிப்பிட்ட இந்துமதத்தை குறிப்பதால் மத சார்பற்ற குறியீடு சின்னமாக இடம் பெற வேண்டும் என பெரும்பான்மையோர் கோரிக்கை வைத்துள்ளனர். அதனடிப்படையில் தமிழக அரசின் சார்பில் குழு அமைத்து தற்போதுள்ள சின்னத்தின் மாற்றம் பற்றி குழு அறிக்கை அளிக்கும் – உதயநிதி ஸ்டாலின்” என்று இருந்தது.
நிலைத் தகவலில், “தமிழ்நாட்டின் முதல்வர் யார்? திமுகவில் உள்ளவர்களுக்குத் தெரியாது ஒற்றை குடும்ப அரசு என்று உங்கள் புகைப்படத்தைப் போட்டு கொள்ளுங்கள். தமிழகத்தின் கோபுர சின்னத்தை மாற்ற வேண்டுமாம் அது இந்து மதத்தை குறிப்பிடுகிறது உதயநிதி சொல்கிறார்” என்று குறிப்பிடப்பட்டு இருந்தது.
இந்த பதிவை Ashokadv என்பவர் 2021 ஜூலை 25 அன்று பகிர்ந்துள்ளார். இவரைப் போல பலரும் இதை ஷேர் செய்து வருகின்றனர்.

உண்மை அறிவோம்:
தமிழ்நாடு அரசின் கோபுரம் சின்னத்தை மாற்றுவதாக தி.மு.க தரப்பில் யார் கூறியிருந்தாலும் அது சர்ச்சையை ஏற்படுத்தியிருக்கும். அதிலும் குறிப்பாக உதயநிதி ஸ்டாலினே இப்படிக் கூறியிருந்தால் தமிழ்நாடு முழுக்க எதிர்ப்பு, கண்டனம் எழும்பியிருக்கும். பா.ஜ.க, இந்து அமைப்புகள் உதயநிதி ஸ்டாலினுக்கு எதிராக போராட்டத்தில் குதித்திருக்கும். ஆனால் அப்படி நடக்கவில்லை.

அசல் பதிவைக் காண: Facebook I Archive
தமிழ் தேசம் என்ற இணைய ஊடகத்தில் இந்த செய்தி வெளியானதாக தெரிகிறது. மேலும், இது தொடர்பாக சன் நியூஸ் தொலைக்காட்சியில் கூட நியூஸ் கார்டு வெளியிடப்பட்டது போன்று பலரும் சமூக ஊடகங்களில் பதிவிட்டு வருகின்றனர். எனவே, இது பற்றி ஆய்வு செய்தோம்.
தமிழ் தேசம் இணைய ஊடகத்தில் வெளியான செய்தியை பார்த்தோம். அதில் உதயநிதி ஸ்டாலின் கூறியதாக குறிப்பிட்டிருந்தனர், எங்கு, எப்போது கூறினார். பேட்டி அளித்தாரா, அறிக்கை அளித்தாரா, ட்வீட் வெளியிட்டாரா என எந்த ஒரு தகவலும் இல்லை.

அசல் பதிவைக் காண: tamildesam.tv I Archive
உதயநிதி ஸ்டாலின் பற்றி 2021 ஜூலை 20, 21ம் தேதி வெளியான செய்திகளை ஆய்வு செய்தோம். அவருடைய ட்விட்டர் பக்கத்தை பார்த்தோம். தமிழ்நாடு அரசின் கோபுரம் சின்னம் மாற்றப்படுவது பற்றி அவர் எந்த ஒரு பேட்டியோ, ட்வீட்டோ, அறிக்கையோ வெளியிட்டதாக எந்த ஒரு தகவலும் நமக்கு கிடைக்கவில்லை.
எனவே, உதயநிதி ஸ்டாலினின் அலுவலகத்தைத் தொடர்புகொண்டு இந்த செய்தி பற்றிக் கேட்டோம். நம்மிடம் பேசிய உதயநிதி ஸ்டாலினின் உதவியாளர், ‘’இந்த செய்தி பொய்யானது. உதயநிதி ஸ்டாலின் எந்த இடத்திலும் இப்படிக் கூறவில்லை”, என்றார். அவருக்கு இது தொடர்பாக வெளியான செய்தி மற்றும் சமூக ஊடகங்களில் பரவும் பதிவுகளை வாட்ஸ்அப் மூலம் அனுப்பினோம். அவற்றைப் பார்த்த அவர், இவை அனைத்தும் “FAKE” என்றார்.
சன் நியூஸ் தொலைக்காட்சியில் வெளியானது போன்ற நியூஸ் கார்டை ஆய்வு செய்தோம். ஜூலை 26ம் தேதி நியூஸ் கார்டு வெளியானதாக அதில் குறிப்பிடப்பட்டு இருந்தது. எனவே, சன் நியூஸ் தொலைக்காட்சியின் ஃபேஸ்புக், ட்விட்டர் பக்கங்களை ஆய்வு செய்தோம். அதில் அப்படி எந்த ஒரு நியூஸ் கார்டும் இல்லை.
எனவே, சன் நியூஸ் தொலைக்காட்சியின் டிஜிட்டல் பிரிவு நிர்வாகி மனோஜைத் தொடர்புகொண்டு பேசினோம். அவரும் ‘’இது போலியானது. எங்கள் நியூஸ் கார்டை எடிட் செய்து தவறான தகவலைப் பகிர்ந்துள்ளனர்” என்றார்.
இதன் அடிப்படையில் தமிழ்நாடு அரசின் கோபுரம் சின்னத்தை மாற்ற குழு அமைக்கப்படும் என்று உதயநிதி ஸ்டாலின் கூறியதாக பரவும் செய்தி பொய்யானது என்று உறுதி செய்யப்படுகிறது.
முடிவு:
தமிழ்நாடு அரசின் கோபுரம் சின்னத்தை மாற்ற குழு அமைக்கப்படும் என்று உதயநிதி ஸ்டாலின் கூறியதாக பரவும் செய்தி பொய்யானது என்பதை தகுந்த ஆதாரங்களுடன் ஃபேக்ட் கிரஸண்டோ தமிழ் உறுதி செய்துள்ளது. எனவே, நமது வாசகர்கள், இத்தகைய தவறான செய்தி, புகைப்படங்கள், வீடியோ போன்றவற்றை உறுதி செய்யாமல் மற்றவர்களுக்குப் பகிர வேண்டாம் என கேட்டுக் கொள்கிறோம். வாசகர்கள் தங்களுக்கு சந்தேகம் என்று தோன்றும் தகவல், பதிவு, புகைப்படம், வீடியோவை எங்களது வாட்ஸ் ஆப் எண்ணிற்கு (+91 9049053770) அனுப்பினால், அதுபற்றி ஆய்வு செய்து உண்மை விவரத்தை வெளியிடுகிறோம்.
சமூக ஊடகங்களில் எங்களை பின் தொடர விரும்பினால்…
Facebook I Twitter I Google News Channel

Title:தமிழ்நாடு அரசின் சின்னத்தை மாற்ற குழு அமைக்கப்படும் என்று உதயநிதி கூறினாரா?
Fact Check By: Chendur PandianResult: False
