
வறுமை காரணமாக மதம் மாற நினைப்பவர்கள் எங்களை அணுகினால் ரூ.50 லட்சம் மத்திய அரசிடமிருந்து பெற்றுத் தருவோம் என்று தமிழ்நாடு பாஜக தலைவர் அண்ணாமலை கூறியதாக ஒரு நியூஸ் கார்டு சமூக ஊடகங்களில் வைரலாக பகிரப்பட்டு வருகிறது. அது பற்றி ஆய்வு செய்தோம்.
தகவலின் விவரம்:

உண்மைப் பதிவைக் காண: Facebook I Archive
அண்ணாமலை புகைப்படத்துடன் கூடிய நியூஸ் கார்டு பகிரப்பட்டுள்ளது. அதில், “இந்துவாக நீடிக்க 50 லட்சம் பாஜக தரும். வறுமையின் காரணமாக சிலர் பணத்துக்காக மதம் மாறுகிறார்கள். அவர்கள் எங்களை அணுகினால் 50 லட்சம் ரூபாய் மத்திய அரசிடம் இருந்து பெற்று தருவோம் – பாஜக மாநில தலைவர் அண்ணாமலை” என்று இருந்தது.
இந்த பதிவை தினகரன் அரசு என்ற ஃபேஸ்புக் ஐடி கொண்ட நபர் 2022 ஜனவரி 25ம் தேதி பதிவிட்டுள்ளார். இவரைப் போல பலரும் இந்த நியூஸ் கார்டை தங்கள் ஃபேஸ்புக் பக்கத்தில் பதிவிட்டுள்ளனர்.

உண்மை அறிவோம்:
தமிழ்நாட்டில் கட்டாய மதமாற்றம் நடைபெறுவதாக தமிழ்நாடு பாஜக சார்பில் கூறப்பட்டு வருகிறது. வறுமை காரணமாக மதம் மாறுகிறார்கள் என்று பாஜக-வினர் விமர்சனம் செய்து வருகின்றனர். இந்த நிலையில், மதம் மாறுபவர்கள் எங்களை அணுகினால் மத்திய அரசிடம் இருந்து ரூ.50 லட்சம் பெற்றுத் தருவோம் என்று தமிழ்நாடு பாஜக தலைவர் அண்ணாமலை கூறியதாக பலரும் பகிர்ந்து வருகின்றனர்.
மதம் மாறுவதைத் தடுக்க ஒவ்வொருவருக்கும் ரூ.50 லட்சம் கொடுக்க நினைத்தால் பல லட்சம் கோடி ரூபாய்கள் தேவைப்படும். நிதி வழங்கும் திட்டமும் மத்திய, மாநில அரசுகளிடம் இல்லாத சூழலில் அண்ணாமலை அப்படிக் கூற வாய்ப்பில்லை. இருப்பினும் இதையும் பலரும் ஷேர் செய்து வரவே இது பற்றி ஆய்வு செய்தோம்.
அண்ணாமலை இவ்வாறு ஏதும் கூறினாரா என்று கூகுளில் தேடிப் பார்த்தோம். அப்படி எந்த ஒரு செய்தியும் நமக்குக் கிடைக்கவில்லை. நியூஸ் தமிழ் 24X7 என்று புதிய ஊடகத்தின் பெயரில் நியூஸ் கார்டு வெளியாகி இருந்தது. எனவே, அந்த ஊடகம் இதை வெளியிட்டதா என்று அறிய அதன் ஃபேஸ்புக் பக்கத்தை பார்வையிட்டோம். அப்போது, இதே புகைப்படத்துடன் கூடிய நியூஸ் கார்டை அந்த ஊடகம் வெளியிட்டிருந்தது தெரிந்தது.
ஆனால், அதில் “அதிமுக – பாஜக கூட்டணி தொடர்கிறது. உள்ளாட்சித் தேர்தல் தேதி அறிவித்த பின்னர், எங்கு போட்டியிட உள்ளோம் என்பது குறித்து தெரிவிக்கப்படும்; அதிமுக கூட்டணியில் பாஜக தொடர்கிறது – பாஜக மாநில தலைவர் அண்ணாமலை” என்று இருந்தது. இந்த நியூஸ் கார்டை எடிட் செய்து தவறான தகவல் பரப்பியிருப்பது தெளிவானது.

உண்மைப் பதிவைக் காண: Facebook
இதை உறுதி செய்ய அந்த ஊடகத்தைத் தொடர்புகொண்டு கேட்டோம். நம்மிடம் பேசிய நியூஸ் தமிழ் நிர்வாகி ஒருவர் “உள்ளாட்சித் தேர்தல் தொடர்பாக அண்ணாமலை கூறியதை வைத்து நியூஸ் கார்டு வெளியிட்டிருந்தோம். அதை எடிட் செய்து வதந்தி பரப்பியுள்ளனர்” என்று அவர்கள் கூறினர். இதன் மூலம் இந்த நியூஸ் கார்டு போலியானது என்று உறுதியாகிறது.
முடிவு:
வறுமை காரணமாக மதம் மாறுவதைத் தடுக்க எங்களை அணுகினால் ரூ.50 லட்சத்தை மத்திய அரசிடம் இருந்து பெற்றுத் தருவோம் என்று அண்ணாமலை கூறியதாக பரவும் நியூஸ் கார்டு போலியானது என்பதை ஃபேக்ட் கிரஸண்டோ தமிழ் உறுதி செய்துள்ளது. எனவே, நமது வாசகர்கள், இத்தகைய தவறான செய்தி, புகைப்படங்கள், வீடியோ போன்றவற்றை உறுதி செய்யாமல் மற்றவர்களுக்குப் பகிர வேண்டாம் என கேட்டுக் கொள்கிறோம். வாசகர்கள் தங்களுக்கு சந்தேகம் என்று தோன்றும் தகவல், பதிவு, புகைப்படம், வீடியோவை எங்களது வாட்ஸ் ஆப் எண்ணிற்கு (+91 9049053770) அனுப்பினால், அதுபற்றி ஆய்வு செய்து உண்மை விவரத்தை வெளியிடுகிறோம்.
சமூக ஊடகங்களில் எங்களை பின் தொடர விரும்பினால்…
Facebook I Twitter I Google News Channel

Title:இந்துவாக நீடிக்க ரூ.50 லட்சம் தருகிறோம் என்று அண்ணாமலை கூறினாரா?
Fact Check By: Chendur PandianResult: Altered
