
பிராமணர்கள் வீட்டை விட உயரமாக மற்றவர்கள் வீடு கட்டக் கூடாது, தலித்துக்கள் தங்கள் வீட்டை சிறியதாக கட்ட வேண்டும் என்று பிராமணர் சங்கத் தலைவர் நாராயணன் கூறியதாக ஒரு நியூஸ் கார்டு சமூக ஊடகங்களில் பகிரப்பட்டு வருகிறது. இது பற்றி ஆய்வு செய்தோம்.
தகவலின் விவரம்:

உண்மைப் பதிவைக் காண: Facebook I Archive
தந்தி டிவி வெளியிட்டது போன்று நியூஸ் கார்டு பகிரப்பட்டுள்ளது. அதில், “தலித்துக்கள் சிறிய வீடாக கட்ட வேண்டும். பிராமணர்கள் வீட்டை விட உயரமாக மற்றவர்கள் வீடு கட்டக்கூடாது. தலித்துக்கள் அவர்களின் வீட்டை விட சிறிய வீடாக கட்டிக் கொள்ள வேண்டும். பிராமணர் சங்கத் தலைவர் நாராயணன்” என்று இருந்தது.
இந்த பதிவை Md Thaha என்ற ஃபேஸ்புக் ஐடி கொண்டவர் 2022 மார்ச் 28ம் தேதி பதிவிட்டுள்ளார். இவரைப் போல பலரும் இந்த நியூஸ் கார்டை பகிர்ந்து வருகின்றனர்.

உண்மை அறிவோம்:
பிராமணர் சங்கத் தலைவராக இருப்பவர் நாராயணன். பிராணர் ஒசத்தி, பிராமின் டச் இன்றி தமிழ்நாட்டில் எதுவும் நகராது என்று அவர் முன்பு பேசியது சர்ச்சையை ஏற்படுத்தியது. இந்த சூழலில், பிராமணர் வீட்டைக் காட்டிலும் மற்ற சமூகத்தினர் வீடு உயரமாக இருக்கக் கூடாது, தலித் சமூகத்தினர் சிறிய வீடுகளை கட்டிக்கொள்ள வேண்டும் என்று கூறியதாக நியூஸ் கார்டு சமூக ஊடகங்களில் பகிரப்பட்டு வருகிறது.
தந்தி டிவி வெளியிட்டது போன்று நியூஸ் கார்டு பகிரப்பட்டு வருகிறது. ஆனால் இது வழக்கமாக தந்தி டிவி வெளியிடும் நியூஸ் கார்டு போல இல்லை. அதன் டிசைன், தமிழ் ஃபாண்ட் என அனைத்தும் வித்தியாசமாக இருந்தது. எனவே, இது போலியானது என்று தெளிவாக நமக்குத் தெரிந்தது.

இந்த நியூஸ் கார்டை பிப்ரவரி 10, 2022 அன்று தந்தி டிவி வெளியிட்டது போன்று குறிப்பிடப்பட்டிருந்தது. எனவே, தந்தி டிவி-யில் இப்படி ஏதும் நியூஸ் கார்டு வெளியாகி உள்ளதா என்று பார்த்தோம். ஆனால், நமக்கு அப்படி எந்த ஒரு நியூஸ் கார்டும் கிடைக்கவில்லை. இது குறித்து தந்தி டிவி டிஜிட்டல் பிரிவு நிர்வாகியைத் தொடர்புகொண்டு கேட்டோம். அவரும் இந்த நியூஸ் கார்டு போலியானது என்று உறுதி செய்தார்.
பிராமின் டச் இன்றி தமிழ்நாட்டில் எதுவும் நடக்காது என்று நாராயணன் பேசிய நிகழ்ச்சியின் புகைப்படத்தை வைத்து இந்த நியூஸ் கார்டு தயாரிக்கப்பட்டுள்ளது. அந்த வீடியோவை முழுவதும் பார்த்தோம். எந்த இடத்திலும் பிராமணர்கள் வீடு பெரிதாக இருக்க வேண்டும் என்றோ, பிற சமூகத்தினர் வீடு சிறியதாக இருக்க வேண்டும் என்றோ அவர் பேசவில்லை. இதன் மூலம் விஷமத்தனத்துடன் இந்த நியூஸ் கார்டு உருவாக்கப்பட்டிருப்பது உறுதி செய்யப்படுகிறது.
முடிவு:
தலித்துக்கள் வீடுகளை சிறிதாக கட்டிக்கொள்ள வேண்டும் என்று பிராமணர் சங்கத் தலைவர் நாராயணன் கூறியதாக பரவும் நியூஸ் கார்டு போலியானது என்பதை ஃபேக்ட் கிரஸண்டோ உறுதி செய்துள்ளது. எனவே, நமது வாசகர்கள், இத்தகைய தவறான செய்தி, புகைப்படங்கள், வீடியோ போன்றவற்றை உறுதி செய்யாமல் மற்றவர்களுக்குப் பகிர வேண்டாம் என கேட்டுக் கொள்கிறோம். வாசகர்கள் தங்களுக்கு சந்தேகம் என்று தோன்றும் தகவல், பதிவு, புகைப்படம், வீடியோவை எங்களது வாட்ஸ் ஆப் எண்ணிற்கு (+91 9049053770) அனுப்பினால், அதுபற்றி ஆய்வு செய்து உண்மை விவரத்தை வெளியிடுகிறோம்.
சமூக ஊடகங்களில் எங்களை பின் தொடர விரும்பினால்…
Facebook I Twitter I Google News Channel

Title:தலித்துகள் சிறிய வீடுதான் கட்ட வேண்டும் என்று பிராமணர் சங்கத் தலைவர் கூறினாரா?
Fact Check By: Chendur PandianResult: False
