இஸ்ரேல் ராணுவத்தை இஸ்ரேலியர்களே தாக்குவதாக பரவும் வீடியோ உண்மையா?

சமூக ஊடகம் | Social சர்வதேச அளவில் I International

ஈரான் மீது தேவையில்லாமல் தாக்குதல் நடத்தி பிரச்னை ஏற்படுத்தியதாக இஸ்ரேல் ராணுவத்தை இஸ்ரேல் மக்கள் தாக்கியதாக ஒரு வீடியோ சமூக ஊடகங்களில் வைரலாக பகிரப்பட்டு வருகிறது. இது தொடர்பாக ஆய்வு செய்தோம்.

தகவலின் விவரம்:

உண்மைப் பதிவைக் காண: Facebook I Archive

சாலையில் கூட்டமாக சிலர் மோதிக்கொள்ளும் வீடியோ ஃபேஸ்புக்கில் பதிவிடப்பட்டுள்ளது. நிலைத் தகவலில், “இஸ்ரேல் இராணுவதை துவைத்து எடுத்த இஸ்ரேலிய பொது மக்கள்.! மக்கள் கூறுகிறார்கள் நீங்கள் ஈரானை வம்பிழுத்தீர்கள், இப்போது எங்கள் வீடுகள் தரைமட்டமாகி விட்டது ஆனால் நீங்கள் பாதுகாப்பாக பங்கருக்குள் போய் ஒளிந்து கொண்டிர்கள் என்று இஸ்ரேல் மக்களின் கூற்று. மேலும் இஸ்ரேல் மக்கள் கையில் பாதாதைகள் வீதிகளில் நடந்து பாகிஸ்தானிடமும் பாகிஸ்தான் மக்களும் ஈரானிடம் போரை நிறுத்த சொல்லுங்கள் என்று இஸ்ரேலிய மக்கள் கேட்கிறார்கள் . மேலும் இப்போது முந்தைய கள்ள தந்தை அமெரிக்கவிடம் அழைத்து உதவி கேட்பதில்லை” என்று குறிப்பிடப்பட்டிருந்தது. 

இந்த வீடியோவை பலரும் சமூக ஊடகங்களில் பகிர்ந்து வருகின்றனர்.

உண்மை அறிவோம்:

ஈரானின் அணு சக்தி மையங்களை குறிவைத்து ஜூன் 12, 2025 அன்று இஸ்ரேல் தாக்குதல் நடத்தியது. இதற்கு பதிலடியாக இஸ்ரேல் மீது ஈரான் ஏவுகணைகளை வீசி தாக்கி வருகிறது. இந்த நிலையில் ஈரானின் தாக்குதலுக்குக் காரணம் இஸ்ரேல் ராணுவம்தான் என்று குற்றம்சாட்டி சொந்த நாட்டு மக்களே ராணுவ வீரர்களைத் தாக்கியதாகச் சிலர் சமூக ஊடகங்களில் பதிவிட்டு வருகின்றனர். 

தவறே செய்தாலும் கூட தங்கள் நாட்டை யாரும் விட்டுக்கொடுக்க மாட்டார்கள். அப்படி இருக்க இஸ்ரேலியர்களே இஸ்ரேல் ராணுவத்தைத் தாக்கினார்கள் என்ற தகவல் சந்தேகத்தை ஏற்படுத்தியது. எனவே, இந்த வீடியோ தொடர்பாக ஆய்வு செய்தோம். வீடியோ காட்சிகளை புகைப்படங்களாக மாற்றி கூகுள் லென்ஸ் தளத்தில் பதிவேற்றித் தேடினோம்.

Archive

அப்போது, நாம் ஆய்வுக்கு எடுத்துக்கொண்ட வீடியோவை 2025 ஜனவரி 22ம் தேதி சிலர் தங்கள் சமூக ஊடக பக்கங்களில் பதிவிட்டிருந்தனர். அதாவது சமீபத்திய இஸ்ரேல் – ஈரான் போர் தொடங்குதற்கு ஐந்து மாதங்களுக்கு முன்பே இந்த வீடியோ வெளியாகி இருந்தது. அதில், ஹில்டாப் எனப்படும் இஸ்ரேல் குடியேற்றப் பயங்கரவாதிகள் ஜெருசலேம் நகரில் வன்முறையில் ஈடுபட்டனர். மேற்கு கரை பகுதியில் நடந்த மோதலில் இரண்டு இஸ்ரேலியர்களை போலீசார் சுட்டுக் கொன்றதைத் தொடர்ந்து வன்முறை ஏற்பட்டது” என்று குறிப்பிடப்பட்டிருந்தது.

Archive

தொடர்ந்து தேடிய போது அல் ஜசீராவில் வெளியான செய்தி நமக்குக் கிடைத்தது. அதில் இஸ்ரேலிய குடியேறிகள் மேற்கு கரை பகுதியில் உள்ள பாலஸ்தீன கிராமம் ஒன்றின் மீது கற்களை வீசி தாக்குதல் நடத்தினர். இஸ்ரேல் போலீஸ் பாதுகாப்புடன் இந்த தாக்குதல் நடந்தது என்று குறிப்பிடப்பட்டிருந்தது. ஆனால் அதில் இரண்டு பேர் கொல்லப்பட்டது தொடர்பான விவரம் இல்லை.

உண்மைப் பதிவைக் காண: tiktokgenocide.com I Archive I haaretz.co.il I Archive

மேலும் தேடிய போது, இந்த சம்பவம் தொடர்பான விரிவான விவரங்கள் கிடைக்கவில்லை. கிடைத்த தகவலை வைத்துப் பார்க்கையில் இஸ்ரேலிய  பாலஸ்தீனிய மக்களுக்கு இடையே மோதல் ஏற்பட்டுள்ளது. அதைத் தொடர்ந்து இஸ்ரேலியர்கள் வன்முறையில் ஈடுபட்டுள்ளதாக கூறப்படுகிறது. வன்முறையில் ஈடுபட்டவர்களை போலீசார் கைது செய்துள்ளனர். அப்போது இந்த வீடியோ எடுக்கப்பட்டிருப்பது தெளிவாகிறது. 

இவை எல்லாம் ஈரான் மீது தாக்குதல் நடந்ததற்கு இஸ்ரேல் ராணுவ வீரர்களை இஸ்ரேல் மக்கள் தாக்கியதாக பரவும் தகவல் தவறானது என்பதை உறுதி செய்கின்றன.

முடிவு:

2025ம் ஆண்டு ஜனவரி மாதம் இஸ்ரேலில் ஏற்பட்ட வன்முறை சம்பவம் ஒன்றின் போது பதிவான வீடியோவை எடுத்து இப்போது ஈரான் தாக்குதல் நடத்த இஸ்ரேல் ராணுவம் தான் காரணம் என்று கூறி இஸ்ரேல் ராணுவ வீரர்களை பொது மக்கள் தாக்கி வருகின்றனர் என்று தவறான தகவல் சேர்த்து சமூக ஊடகங்களில் பகிர்ந்திருப்பதை தகுந்த ஆதாரங்கள் அடிப்படையில் ஃபேக்ட் கிரஸண்டோ தமிழ் உறுதி செய்துள்ளது. எனவே, நமது வாசகர்கள், இத்தகைய தவறான செய்தி, புகைப்படங்கள், வீடியோ போன்றவற்றை உறுதி செய்யாமல் மற்றவர்களுக்குப் பகிர வேண்டாம் என கேட்டுக் கொள்கிறோம். வாசகர்கள் தங்களுக்கு சந்தேகம் என்று தோன்றும் தகவல், பதிவு, புகைப்படம், வீடியோவை எங்களது வாட்ஸ் ஆப் எண்ணிற்கு (+91 9049053770) அனுப்பினால், அதுபற்றி ஆய்வு செய்து உண்மை விவரத்தை வெளியிடுகிறோம்.

சமூக ஊடகங்களில் எங்களை பின் தொடர விரும்பினால்…

Facebook I X Post I Google News Channel I Instagram

Avatar

Title:இஸ்ரேல் ராணுவத்தை இஸ்ரேலியர்களே தாக்குவதாக பரவும் வீடியோ உண்மையா?

Written By: Chendur Pandian  

Result: False

Leave a Reply