கூட்டுறவு வங்கிக் கடன் நகைகள் ஏலம் விடப்படும் என்று ஐ.பெரியசாமி கூறினாரா?

அரசியல் | Politics சமூக ஊடகம் | Social தமிழ்நாடு | Tamilnadu

கூட்டுறவு வங்கிக் கடன் நகைகள் ஏலம் விடப்படும் என்று அமைச்சர் ஐ.பெரியசாமி கூறியதாக ஒரு நியூஸ் கார்டு சமூக ஊடகங்களில் வைரலாக பகிரப்பட்டு வருகிறது. அது பற்றி ஆய்வு செய்தோம்.

தகவலின் விவரம்:

உண்மைப் பதிவைக் காண: Facebook I Archive

ஜூனியர் விகடன் இதழ் வெளியிட்டது போன்று நியூஸ் கார்டு பகிரப்பட்டுள்ளது. அதில், “கூட்டுறவு வங்கிக்கடன் நகைகள் ஏலம். கூட்டுறவு சங்கங்களில் கடன் பெற்றுத் திருப்பிச் செலுத்தாதவர்களின் நகைகள் விரைவில் ஏலம் விடப்படும். தமிழக முதல்வரின் அறிவுறுத்தலின்படி ஏற்கனவே சில மாவட்டங்களில் ஏல அறிவிப்பு வெளியிடப்பட்டது. எனவே, தள்ளுபடி சாத்தியமில்லை – கூட்டுறவுத்துறை அமைச்சர் ஐ.பெரியசாமி” என்று இருந்தது.

இந்த பதிவை Sugan Appu என்ற ஃபேஸ்புக் ஐடி கொண்ட நபர் 2022 ஜனவரி 29ம் தேதி பதிவிட்டுள்ளார். இவரைப் போல பலரும் இதைப் பகிர்ந்து வருகின்றனர்.

உண்மை அறிவோம்:

நாங்கள் ஆட்சிக்கு வந்தால் நகைக் கடன் தள்ளுபடி செய்யப்படும் என்று அ.தி.மு.க, தி.மு.க என இரண்டு கட்சிகளும் வாக்குறுதி அளித்தன. இதை நம்பி பொது மக்கள் கூட்டுறவு வங்கிகளில் நகைக்கடன் பெற்றிருந்தனர். ஆனால், ஒரே குடும்பத்தைச் சேர்ந்த பலரும் பல வங்கிகளில் நகைக் கடன் வாங்கியிருப்பது தெரியவந்தது. முறைகேட்டில் ஈடுபட்டவர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என்று தமிழ்நாடு அரசு அறிவித்தது.

தேர்தல் அறிக்கையில் கூறியது போன்று அனைவருக்கும் நகைக்கடன் தள்ளுபடி வழங்கவில்லை. தேர்தல் அறிக்கையில் நிபந்தனைகள் எதுவும் கூறாமல் இப்படி பலருக்கு நகைக்கடன் தள்ளுபடி செய்யாதது ஏற்புடையது இல்லை என்று எதிர்க்கட்சிகள் கண்டனம் தெரிவித்து வருகின்றன. அடகுக் கடைக்கு வந்த நகைகளை எல்லாம் கூட்டுறவு சங்கத்தில் அடமானம் வைத்துள்ளார்கள். அவர்களுக்கு எப்படி நகைக்கடன் வழங்க முடியும் என்று கூட்டுறவுத் துறை அமைச்சர் ஐ.பெரியசாமி கேள்வி எழுப்பியிருந்தார்.

இந்த சூழலில் நகைக் கடன் தள்ளுபடி சலுகை பெறாதவர்களின் நகைகள் அனைத்தும் ஏலம் விடப்படும் என்று அமைச்சர் ஐ.பெரியசாமி கூறியதாக சமூக ஊடகங்களில் நியூஸ் கார்டு பகிரப்பட்டு வருகிறது. ஆனால், அப்படி எந்த ஒரு அறிவிப்பும் சமீபத்தில் வந்ததாக நினைவில் இல்லை. இது தொடர்பாக தேடிய போது நமக்கு அப்படி எந்த ஒரு செய்தியும் கிடைக்கவில்லை. எனவே, இந்த நியூஸ் கார்டு தொடர்பாக ஆய்வு செய்தோம்.

உண்மையில் இந்த நியூஸ் கார்டை ஜூனியர் விகடன் வெளியிட்டதா என்று பார்த்தோம். ஜனவரி 26, 2022 அன்று வெளியான நியூஸ் கார்டுகளை அதன் ஃபேஸ்புக் பக்கத்தில் பார்த்தோம். ஆனால் நமக்கு ஐ.பெரியசாமி படத்துடன் கூடிய எந்த நியூஸ் கார்டும் கிடைக்கவில்லை. மேலும், வழக்கமாக ஜூனியர் விகடன் வெளியிடும் நியூஸ் கார்டுக்கும் இதற்கும் வித்தியாசம் இருப்பதையும் காண முடிந்தது. தமிழ் ஃபாண்ட், பின்னணி வடிவமைப்பில் வேறுபாட்டைக் காண முடிந்தது. எனவே, இது போலியான நியூஸ் கார்டாக இருக்கலாம் என்று முடிவுக்கு வந்தோம்.

இது தொடர்பாக ஜூனியர் விகடன் டிஜிட்டல் பிரிவுக்கான பொறுப்பாளரைத் தொடர்புகொண்டு விசாரித்தோம். அவரும் இந்த நியூஸ் கார்டு போலியானது. நாங்கள் இதை வெளியிடவில்லை என்று உறுதி செய்தார். இதன் அடிப்படையில் கூட்டுறவு வங்கியில் அடகு வைக்கப்பட்ட நகைகள் ஏலம் விடப்படும் என்று ஐ பெரியசாமி கூறியதாக பரவும் நியூஸ் கார்டு போலியானது என்று உறுதி செய்யப்படுகிறது.

முடிவு:

கூட்டுறவு வங்கிகளில் நகைக் கடன் பெற்று திருப்பிச் செலுத்தாதவர்களின் நகைகள் ஏலம் விடப்படும் என்று அமைச்சர் ஐ.பெரியசாமி கூறியதாக பரவும் நியூஸ் கார்டு போலியானது என்பதை ஃபேக்ட் கிரஸண்டோ தமிழ் உறுதி செய்துள்ளது. எனவே, நமது வாசகர்கள், இத்தகைய தவறான செய்தி, புகைப்படங்கள், வீடியோ போன்றவற்றை உறுதி செய்யாமல் மற்றவர்களுக்குப் பகிர வேண்டாம் என கேட்டுக் கொள்கிறோம். வாசகர்கள் தங்களுக்கு சந்தேகம் என்று தோன்றும் தகவல், பதிவு, புகைப்படம், வீடியோவை எங்களது வாட்ஸ் ஆப் எண்ணிற்கு (+91 9049053770) அனுப்பினால், அதுபற்றி ஆய்வு செய்து உண்மை விவரத்தை வெளியிடுகிறோம்.

சமூக ஊடகங்களில் எங்களை பின் தொடர விரும்பினால்…

Facebook I Twitter I Google News Channel

Avatar

Title:கூட்டுறவு வங்கிக் கடன் நகைகள் ஏலம் விடப்படும் என்று ஐ.பெரியசாமி கூறினாரா?

Fact Check By: Chendur Pandian 

Result: False