தமிழ்நாட்டில் ரேஷன் பொருட்கள் வாங்க வரும் குடும்ப அட்டைதாரர் கட்டாயம் கொரோனா தடுப்பூசி செலுத்தியிருக்க வேண்டும் என்று தமிழ்நாடு அரசு அறிவித்ததாக ஒரு பதிவு சமூக ஊடகங்களில் வைரலாக பகிரப்பட்டு வருகிறது. இது பற்றி ஆய்வு செய்தோம்.

தகவலின் விவரம்:

நம்முடைய வாட்ஸ் அப் சாட்பாட் எண்ணுக்கு வாசகர் ஒருவர் புகைப்பட பதிவு ஒன்றை அனுப்பி இது உண்மையா என்று கேள்வி எழுப்பியிருந்தார். தமிழ்நாடு அரசு, இந்திய அரசு, 108 ஆம்புலன்ஸ் சேவை ஆகியவற்றின் லோகோவோடு புகைப்பட பதிவு உருவாக்கப்பட்டிருந்தது. அதில், "அறிவிப்பு 13.09.21 திங்கட்கிழமை முதல் ரேஷன் பொருட்கள் பெற நியாய விலைக் கடைக்கு வரும் குடும்ப அட்டைதாரர்கள் கட்டாயம் கொரோனா தடுப்பு ஊசி செலுத்தியிருக்க வேண்டும்" என்று இருந்தது.

அசல் பதிவைக் காண: Facebook I Archive

ஃபேஸ்புக்கில் யாராவது இந்த பதிவை ஷேர் செய்துள்ளார்களா என்று பார்த்தோம். பலரும் இதை ஷேர் செய்து வருவதை காண முடிந்தது. தமிழர் கட்சி வெள்ளையபுரம் என்ற ஃபேஸ்புக் பக்கம் 2021 செப்டம்பர் 13ம் தேதி பதிவிட்டிருந்தது. தமிழ்நாடு அரசின் அறிவிப்பு என்று கருதி பலரும் இதை ஷேர் செய்து வருகின்றனர்.

உண்மை அறிவோம்:

தமிழ்நாட்டில் கொரோனா தடுப்பூசி போட்டால்தான் ரேஷன் பொருட்கள் பெற முடியும் என்று எந்த ஒரு அறிவிப்பும் வெளியாகவில்லை. அப்படி வெளியாகி இருந்தால் எல்லா ஊடகங்களிலும் செய்தி வெளியாகி இருக்கும். அது பற்றிப் பரபரப்பாகப் பேசப்பட்டிருக்கும். தடுப்பூசி போடாததால் ரேஷன் கடையில் பொருட்கள் வாங்க முடியவில்லை என்று பொது மக்கள் கொந்தளித்திருப்பார்கள். அவற்றை ஊடகங்களில் நேரடி ஒளிபரப்பு செய்திருப்பார்கள்.

ஆனால், அப்படி எந்த ஒரு நிகழ்வும் நடக்கவில்லை. தடுப்பூசி போட்டுக்கொண்டால்தான் ரேஷன் கிடைக்கும் என்று உத்தரவு பிறப்பிக்க வேண்டும் என்று பா.ஜ.க- வை சேர்ந்த குஷ்பு முன்பு கூறிய செய்தி மட்டுமே நமக்கு கிடைத்தது.

அரசுக்கு எதிராக விஷமத்தனமாக வதந்தி பரப்பும் நோக்கில் இந்த புகைப்பட பதிவை வெளியிட்டிருக்கலாம் என்று தெரிந்தது. ஏராளமானவர்கள் இதை ஷேர் செய்யவே இது பற்றி ஆய்வு செய்தோம்.

இது பற்றி எந்த ஒரு செய்தியும் வெளியாகாத நிலையில் இது வெறும் வதந்தி என்பதை உறுதி செய்வதற்காக தமிழ்நாடு அரசின் உணவுப் பொருள் வழங்கல் துறை ஆணையர் அலுவலகத்தைத் தொடர்புகொண்டு பேசினோம். ஆணையர் ஒரு கூட்டத்தில் இருந்ததால் அவரிடம் பேச முடியவில்லை. நம்மிடம் பேசிய ஆணையரின் உதவியாளர் "இந்த தகவல் வதந்தி, இப்படி எந்த ஒரு அறிவிப்பையும் நாங்கள் வெளியிடவில்லை" என்றார்.

உணவு மற்றும் உணவுப்பொருள் வழங்கல், நுகர்வோர்பாதுகாப்பு, விலைக்கட்டுப்பாடு அமைச்சர் சக்கரபாணியை தொடர்புகொள்ள முயற்சி செய்தோம். அவர் சட்டப்பேரவை கூட்டத்தில் இருந்ததால் அவருடைய நேரடி உதவியாளர் நம்மிடம் பேசினார். அவர், "இது வெறும் வதந்திதான். பொது மக்கள் நம்ப வேண்டாம்" என்றார்.

கொரோனா தடுப்பூசி போட்டால்தான் ரேஷன் பொருள் வாங்க முடியும் என்று தமிழ்நாடு அரசு அறிவித்ததாக எந்த ஒரு செய்தியும் நமக்குக் கிடைக்கவில்லை. இந்த தகவல் தவறானது என்று சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகள் மற்றும் அமைச்சர் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதன் அடிப்படையில் நாம் ஆய்வுக்கு எடுத்துக்கொண்ட பதிவு போலியானது என்று உறுதி செய்யப்படுகிறது.

முடிவு:

தடுப்பூசி போட்டால்தான் ரேஷனில் பொருட்கள் வாங்க முடியும் என்று தமிழ்நாடு அரசு அறிவித்ததாக பரவும் பதிவு போலியானது என்பதை ஃபேக்ட் கிரஸண்டோ தமிழ் உறுதி செய்துள்ளது. எனவே, நமது வாசகர்கள், இத்தகைய தவறான செய்தி, புகைப்படங்கள், வீடியோ போன்றவற்றை உறுதி செய்யாமல் மற்றவர்களுக்குப் பகிர வேண்டாம் என கேட்டுக் கொள்கிறோம். வாசகர்கள் தங்களுக்கு சந்தேகம் என்று தோன்றும் தகவல், பதிவு, புகைப்படம், வீடியோவை எங்களது வாட்ஸ் ஆப் எண்ணிற்கு (+91 9049053770) அனுப்பினால், அதுபற்றி ஆய்வு செய்து உண்மை விவரத்தை வெளியிடுகிறோம்.

சமூக ஊடகங்களில் எங்களை பின் தொடர விரும்பினால்…

Facebook I Twitter I Google News Channel

Avatar

Title:கொரோனா தடுப்பூசி போட்டால்தான் ரேஷன் பொருள் என்று தமிழ்நாடு அரசு அறிவித்ததா?

Fact Check By: Chendur Pandian

Result: False