
நடந்து முடிந்த ஊரக உள்ளாட்சித் தேர்தலில் மாவட்ட கவுன்சிலர் பதவியிடங்களுக்கு போட்டியிட்ட 81 இடங்களிலும் பா.ஜ.க தோல்வியடைந்தது என்று ஒரு தகவல் சமூக ஊடகங்களில் பகிரப்பட்டு வருகிறது. இதன் நம்பகத்தன்மையை ஆய்வு செய்தோம்.
தகவலின் விவரம்:

Facebook Link | Archived Link |
ஃப்ரீடம் டி.வி என்ற பெயரில் நியூஸ் கார்டு ஒன்று பகிரப்பட்டுள்ளது. அதில், பா.ஜ.க சின்னமான தாமரை மீது அடித்தல் குறி போடப்பட்டுள்ளது. அந்த நியூஸ் கார்டில், “மாவட்ட கவுன்சிலர் பதவிக்கு 81 இடங்களில் போட்டியிட்ட பா.ஜ.க அனைத்து இடங்களிலும் தோல்வி. ஆளும்கட்சியுடன் கூட்டணி வைத்தும் தோல்வி” என்று குறிப்பிட்டுள்ளனர்.
நிலைத் தகவலில், “#BREAKING மாவட்ட கவுன்சிலர் பதவிக்கு 81 இடங்களில் போட்டியிட்ட பாஜக அனைத்து இடங்களிலும் படுதோல்வி” என்று குறிப்பிட்டுள்ளனர்.
இந்த பதிவை, Freedom TV என்ற ஃபேஸ்புக் பக்கம் 2 ஜனவரி 2020 அன்று வெளியிட்டுள்ளது. பலரும் இதை ஷேர் செய்து வருகின்றனர்.
உண்மை அறிவோம்:
ஊரக உள்ளாட்சித் தேர்தல் வாக்கு எண்ணிக்கை ஜனவரி 2, 3ம் தேதி நடந்தது. இந்த பதிவை ஜனவரி 2ம் தேதியே வெளியிட்டுள்ளனர். முழுமையாக வாக்கு எண்ணிக்கை முடிவதற்கு முன்பு, வாக்கு எண்ணிக்கை தொடங்கிய நிலையிலேயே இந்த பதிவை வெளியிட்டது போல உள்ளது. உண்மையில் பாரதிய ஜனதா கட்சி எத்தனை இடங்களில் வெற்றி பெற்றது என்று தேர்தல் ஆணையம் அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாக இன்னும் சில நாட்கள் காத்திருக்க வேண்டும். ஆனால், முற்றிலும் தோல்வியடைந்ததா என்பதை உறுதி செய்ய முடிவு செய்தோம். தேர்தல் ஆணையத்தின் அதிகாரப்பூர்வ இணையதளத்தில் பாரதிய ஜனதா கட்சி ஐந்து மாவட்ட கவுன்சிலர் பதவியிடங்களில் வெற்றி பெற்றதாக குறிப்பிட்டிருந்தனர்.

tnsec.tn.nic.in | Archived Link 1 |
polimernews.com | Archived Link 2 |
தேர்தல் முன்னணி நிலவரம் வெளியிடும் செய்தி ஊடகங்களில் பாரதிய ஜனதா ஆறு இடங்களில் வெற்றி பெற்றுள்ளது என்று குறிப்பிட்டிருந்தனர்.
எந்த எந்த இடங்களில் பாரதிய ஜனதா வெற்றி பெற்றது என்று தேடியபோது, கன்னியாகுமரியில் 2 இடங்கள், ராமநாதபுரம், தேனி, கோயமுத்தூரில் தலா ஒரு இடம் வெற்றி பெற்றுள்ளதாக தேர்தல் ஆணையம் வெளியிட்டுள்ள முடிவுகள் பக்கத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது.
tnsec.tn.nic.in | Archived Link 1 |
Dinamalar.com | Archived Link 2 |
தமிழக பாரதிய ஜனதா கட்சியைத் தொடர்புகொண்டு பாரதிய ஜனதா ஒரு இடம் கூட வெற்றி பெறவில்லை என்று சமூக ஊடகங்களில் பகிரப்படும் தகவல் பற்றிக் கேட்டோம். “பல இடங்களில் வெற்றி பெற்றுள்ளது. எத்தனை இடங்கள் என்பது வாக்கு எண்ணிக்கை முடிந்த பிறகுதான் உறுதியாக கூற முடியும். ஒரு இடம் கூட வெற்றிபெறவில்லை என்ற தகவல் தவறானது” என்றனர்.
நம்முடைய ஆய்வில், பாரதிய ஜனதா கட்சி ஐந்து இடங்களில் வெற்றி பெற்றுள்ளதாகவும் தொடர்ந்து வாக்கு எண்ணிக்கை நடந்து வருவதாகவும் தேர்தல் ஆணையம் வெளியிட்டுள்ள முடிவுகள் பக்கத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது.
வாக்கு எண்ணிக்கை முடிவில், பாரதிய ஜனதா ஆறு இடங்களில் வெற்றி பெற்றுள்ளது என்று செய்தி ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
இதன் அடிப்படையில், பாரதிய ஜனதா கட்சி போட்டியிட்ட 81 இடங்களிலும் தோல்வியடைந்தது என்ற தகவல் தவறானது என்பது உறுதி செய்யப்பட்டுள்ளது.
முடிவு:
தகுந்த ஆதாரங்கள் அடிப்படையில், மேற்கண்ட ஃபேஸ்புக் பதிவு தவறானது என்று நிரூபிக்கப்பட்டுள்ளது. எனவே, நமது வாசகர்கள், இத்தகைய தவறான செய்தி, புகைப்படங்கள், வீடியோ போன்றவற்றை உறுதி செய்யாமல் மற்றவர்களுக்குப் பகிர வேண்டாம் என கேட்டுக் கொள்கிறோம்.

Title:மாவட்ட கவுன்சிலர் தேர்தலில் போட்டியிட்ட எல்லா இடங்களிலும் தோல்வி கண்டதா பா.ஜ.க?
Fact Check By: Chendur PandianResult: False
