
எடியூரப்பாவிடம் பேசி காவிரி நீர் வாங்கித் தர சொல்கிறார்கள். தமிழர்கள் ஓட்டு போட்டு ஒன்றும் எடியூரப்பா முதல்வர் ஆகவில்லை என்று தமிழிசை ட்வீட் செய்ததாக ஒரு பதிவு சமூக ஊடகங்களில் பகிரப்பட்டு வருகிறது. இதன் நம்பகத்தன்மையை ஆய்வு செய்தோம்.
தகவலின் விவரம்:

தமிழிசை செய்த இரண்டு ட்வீட்கள் ஒன்றின் மீது ஒன்றாக வைத்து புகைப்படமாகப் பதிவிடப்பட்டுள்ளது. முதல் ட்வீட்டில், “பெங்களூர் சென்று அவர்களின் கூட்டணிக் கட்சியான கர்நாடக காங்கிரஸ் நீர்ப் பாசன அமைச்சரிடம் காவிரி மேலாண்மை வாரிய ஆணைப்படி தண்ணீர் திறந்து விட வேண்டும் என்றும் மேகதாதுவில் அணை கட்ட வேண்டாம் என்று கேட்டுவிட்டு வந்து இங்கே போராடி இருந்தால் அவரை பாராட்டி இருக்கலாம். (2/3)” என்று உள்ளது. இந்த ட்வீட்டை தமிழிசை 2019 ஜூன் 25ம் தேதி வெளியிட்டதாக உள்ளது.
2019 ஜூலை 24ம் தேதி தமிழிசை இரண்டாவது ட்வீட்டை வெளியிட்டது போல் உள்ளது. அதில், “எடியூரப்பாவிடம் பேசி காவிரி நீர் வாங்கித் தர சொல்கிறார்கள். தமிழர்கள் ஒட்டு போட்டு ஒன்றும் எடியூரப்பா முதல்வர் ஆகவில்லை” என்று உள்ளது.
இந்த பதிவை Mohd Askar என்பவர் உலகத் தமிழர் ஒருங்கிணைந்த முகநூல் தளம் என்ற ஃபேஸ்புக் பக்கத்தில் 2019 ஜூலை 25ம் தேதி வெளியிட்டுள்ளார். இதைப் பலரும் பகிர்ந்து வருகின்றனர்.
உண்மை அறிவோம்:
கர்நாடகத்தில் காங்கிரஸ், மதச்சார்பற்ற ஜனதா தளம் ஆட்சி நடந்து வந்தது. காங்கிரஸ், மதச் சார்பற்ற ஜனதா தளம் கட்சி எம்.எல்.ஏ-க்கள் தங்கள் பதவியை ராஜினாமா செய்ததைத் தொடர்ந்து ஆட்சி கவிழ்ந்தது. இந்த நிலையில், பதிய முதல்வராக பதவி ஏற்கத் தன்னை அழைக்கும்படி கர்நாடக பா.ஜ.க தலைவர் எடியூரப்பா உரிமைகோரி கடிதம் அளித்துள்ளார். ஜூலை 26ம் தேதி பதவி ஏற்கிறேன் என்று அவர் தெரிவித்தார்.
கர்நாடகத்தில் காங்கிரஸ், மதச்சார்பற்ற ஜனதா தளம் ஆட்சி நடந்தபோது காவிரியில் தண்ணீர் திறந்துவிட தங்கள் கூட்டணிக் கட்சியான காங்கிரஸை தி.மு.க வலியுறுத்த வேண்டும் என்று தொடர்ந்து தமிழக பா.ஜ.க தலைவர் தமிழிசை கூறிவந்தார். தற்போது கர்நாடகாவில் பா.ஜ.க ஆட்சி அமைய உள்ள நிலையில் தமிழிசை மாற்றிப் பேசுவதாக ட்வீட் ஒன்றைப் பகிர்ந்துள்ளனர்.
இது உண்மையா என்று கண்டறிய தமிழிசையின் ட்விட்டர் பக்கத்தை ஆய்வு செய்தோம். கடந்த ஜூன் 25ம் தேதி அவர் வெளியிட்ட ட்வீட் நமக்குக் கிடைத்தது. இதன் மூலம் இந்த தகவல் பாதி உண்மையானது என்பது தெரிந்தது.
தமிழக மக்கள் ஓட்டு போட்டு எடியூரப்பா முதல்வராகவில்லை என்று ஜூலை 24ம் தேதி தமிழசை ட்வீட் செய்ததாக படம் இருந்தது. அதைத் தேடியபோது அது போல எந்த ஒரு ட்வீட்டும் நமக்குக் கிடைக்கவில்லை.தமிழக பா.ஜ.க தலைவர் எது சொன்னாலும் உடனுக்குடன் தொலைக்காட்சி ஊடகங்களில் பகிரப்படுகின்றன. அப்படி இருக்கும்போது, தமிழிசை ஒரு ட்வீட் போட்டு அழித்திருந்தால், அதிலும் குறிப்பாக தமிழக மக்கள் ஓட்டு போட்டு எடியூரப்பா முதல்வராகவில்லை என்று கூறியிருந்தால் அது மிகப்பெரிய அளவில் பேசப்பட்டிருக்கும். அது போன்று செய்தி ஏதும் உள்ளதா என்று தேடினோம். ஆனால், எந்த ஒரு செய்தியும் நமக்குக் கிடைக்கவில்லை.

இது குறித்து தமிழக பா.ஜ.க தலைவர் தமிழிசை சௌந்தரராஜனின் உதவியாளர் சுரேஷை தொடர்புகொண்டு கேட்டோம். அதற்கு அவர், “முதல் பதிவு உண்மைதான். ஆனால், இரண்டாவது ட்வீட் பொய்யானது. தமிழக பா.ஜ.க தலைவர் பெயரில் தவறாக பரவும் வதந்திகளில் ஒன்று” என்றார்.
இந்த ஆதாரங்கள் அடிப்படையில், உண்மையான ட்வீடுடன் பொய்யாக போட்டோ எடிட் செய்யப்பட்ட ட்வீட் படத்தை பகிர்ந்திருப்பது உறுதி செய்யப்படுகிறது.
முடிவு:
தகுந்த ஆதாரங்கள் அடிப்படையில், மேற்கண்ட ஃபேஸ்புக் பதிவு உண்மை மற்றும் பொய்யான தகவல் சேர்த்து வெளியிடப்பட்டது என்று நிரூபிக்கப்பட்டுள்ளது. எனவே, நமது வாசகர்கள், இத்தகைய தவறான செய்தி, புகைப்படங்கள், வீடியோ போன்றவற்றை உறுதி செய்யாமல் மற்றவர்களுக்குப் பகிர வேண்டாம் என கேட்டுக் கொள்கிறோம்.

Title:தமிழர்கள் ஓட்டு போட்டு எடியூரப்பா முதல்வராகவில்லை” – தமிழிசை பெயரில் பரவும் ட்வீட்!
Fact Check By: Chendur PandianResult: Mixture
