
‘’5 அரசுப் பள்ளி குழந்தைகளை தத்தெடுத்த அரசுப் பள்ளி ஆசிரியை கவிதா,’’ என்ற தலைப்பில் ஒரு ஃபேஸ்புக் பதிவை காண நேரிட்டது. இதன்பேரில், உண்மை கண்டறியும் சோதனை நடத்தினோம். அதில் கிடைத்த தகவல்கள் இதோ…
வதந்தியின் விவரம்:

Archived Link
Time pass என்ற ஃபேஸ்புக் ஐடி இத்தகைய தவறான தகவலை பதிவிட்டுள்ளதாக, நமது வாசகர் ஒருவர் இமெயில் மூலமாக புகார் அளித்திருந்தார். இந்த புகைப்பட பதிவை பலரும் உண்மை என நம்பி, வைரலாக ஷேர் செய்து வருவதால், நாமும் இதுபற்றி ஆய்வு நடத்த சம்மதித்தோம்.
உண்மை அறிவோம்:
ஜூன் 4ம் தேதி வெளியிடப்பட்ட இந்த ஃபேஸ்புக் பதிவில், தமிழகத்தைச் சேர்ந்த டிவி செய்தி தொகுப்பாளர் பனிமலர் பன்னீர்செல்வத்தின் புகைப்படம் இடம்பெற்றுள்ளது. ஆனால், பதிவில், ‘’ 5 ஏழை குழந்தைகளை தத்தெடுத்து அவர்கள் கல்வி செலவை ஏற்று கொண்டுள்ள அரசு பள்ளி ஆசிரியை கவிதா. மனம் இருந்தால் #ஷேர் பண்ணி வாழ்த்துங்க!! ??,’’ என எழுதியுள்ளனர்.
பார்க்கும்போதே இது தவறான தகவல் என தெரிந்தாலும், ஒருமுறை Yandex இணையதளத்தில் பதிவேற்றி ரிவர்ஸ் இமேஜ் தேடல் செய்தோம். அதில், இந்த புகைப்படம் பனிமலர் பன்னீர்செல்வம்தான் என்பது தொடர்பான நிறைய ஆதாரங்கள் கிடைத்தன.

இதன்படி, பனிமலர் பன்னீர்செல்வம் தமிழ் ஊடக உலகில் நன்கு பரிச்சயமான நபர்தான். தற்போது நியூஸ்7 சேனலில் செய்தி தொகுப்பாளராக பணிபுரிந்து வருகிறார். இவர் தனது சமூக ஊடக பக்கத்தில் வெளியிட்ட புகைப்படத்தை எடுத்து, அரசுப் பள்ளி ஆசிரியை கவிதா என தவறாகச் சித்தரித்துள்ளனர் என தெளிவாகிறது.
பனிமலரின் அதிகாரப்பூர்வ ஃபேஸ்புக் பக்கம் சென்று, இதுதொடர்பான புகைப்படம் எதுவும் உள்ளதா என தேடிப் பார்த்தோம். அதில், இந்த புகைப்படம் கிடைத்தது.

அதாவது, 2015ம் ஆண்டு பனிமலர் மேற்கண்ட புகைப்படத்தை ஃபேஸ்புக்கில் பகிர்ந்துள்ளார். அதனை எடுத்து, தற்போது அரசுப் பள்ளி ஆசிரியை கவிதா எனக் கூறி, விஷமத்தனமான கட்டுக்கதை ஒன்றை பகிர்ந்துள்ளனர்.

மேலும், இதுபற்றிய தேடலின்போது, இதே ‘’அரசுப்பள்ளி ஆசிரியை கவிதா,’’ என்ற கதையை வைத்து வெவ்வேறு பெண்களின் புகைப்படங்களை பலரும் பகிர்ந்திருந்ததை காண நேரிட்டது.

இதனால் குழப்பம் ஏற்படவே, உண்மையிலேயே கவிதா என யாரேனும் அரசுப் பள்ளி ஆசிரியை உள்ளாரா என தேடினோம். அப்போது, செங்கல்பட்டு அருகே மாமண்டூர் பள்ளியில் பணிபுரியும் கவிதா என்பவரின் விவரம் கிடைத்தது. இவரை பற்றிய செய்தியை படிக்க இங்கே கிளிக் செய்யவும்.

எனவே, உண்மையான அரசுப் பள்ளி ஆசிரியை கவிதா என்பவர் வேறு ஒருவராக இருக்கும் நிலையில், வெவ்வேறு புகைப்படங்களை வைத்து பலரும் வதந்தி பரப்பி வருவது உறுதியாகிறது.
இதுவரை கிடைத்த ஆதாரங்களின் அடிப்படையில், நாம் ஆய்வு மேற்கொண்ட ஃபேஸ்புக் பதிவில் கூறப்பட்டுள்ள தகவல் தவறானது என முடிவு செய்யப்படுகிறது.
முடிவு:
உரிய ஆதாரங்களின்படி, நாம் ஆய்வு செய்த ஃபேஸ்புக் பதிவில் தவறான தகவல் கூறப்பட்டுள்ளதாக நிரூபிக்கப்பட்டுள்ளது. நமது வாசகர்கள் யாரும் இத்தகைய தவறான செய்தி, புகைப்படம் மற்றும் வீடியோ பதிவுகளை சமூக ஊடகங்களில் பகிர வேண்டாம் என கேட்டுக் கொள்கிறோம்.

Title:5 ஏழைக்குழந்தைகளை தத்தெடுத்த அரசுப் பள்ளி ஆசிரியை கவிதா: விஷமத்தனமான ஃபேஸ்புக் பதிவு
Fact Check By: Parthiban SResult: False
