குடியரசு தின அலங்கார ஊர்தியில் கருணாநிதி சிலை என பரவிய வதந்திகள்!

அரசியல் | Politics சமூக ஊடகம் | Social தமிழ்நாடு | Tamilnadu

தமிழ்நாடு அரசு வழங்கிய குடியரசு தின அலங்கார ஊர்தியின் மாதிரியில் கருணாநிதி மற்றும் ராசாத்தியம்மாள் சிலை இருந்ததாகவும், இதற்கு காங்கிரஸ் எம்.பி கார்த்தி சிதம்பரம் கண்டனம் தெரிவித்ததாகவும் சில பதிவுகள் சமூக ஊடகங்களில் வைரலாக பகிரப்பட்டு வருகின்றன. அவை பற்றி ஆய்வு செய்தோம்.

தகவலின் விவரம்:

உண்மைப் பதிவைக் காண: Facebook I Archive

தமிழ்நாடு அரசு வழங்கிய குடியரசு தின அணிவகுப்பு வாகன மாதிரியில் கருணாநிதி மற்றும் ராசாத்தியம்மாள் ஆகியோர் உருவ சிலை இருந்ததாக ஒரு புகைப்படம் சமூக ஊடகங்களில் பகிரப்பட்டு வருகிறது. இந்த புகைப்பட பதிவை Aps Lingam Nadar என்ற ஃபேஸ்புக் ஐடி கொண்ட நபர் 2022 ஜனவரி 21 அன்று பதிவிட்டுள்ளார். இதை பலரும் ஷேர் செய்து வருகின்றனர்.

உண்மைப் பதிவைக் காண: Facebook 

அலங்கார ஊர்தியில் கருணாநிதி மற்றும் ராசாத்தியம்மாள் சிலை வைக்கப்பட்டதற்கு காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த எம்.பி கார்த்தி சிதம்பரம் கண்டனம் தெரிவித்ததாக ஒரு நியூஸ் கார்டும் சமூக ஊடகங்களில் வைரலாக பகிரப்பட்டு வருகிறது. அதில், “தமிழக அரசுக்கு கார்த்திக் சிதம்பரம் அறிவுரை. குடியரசு தின அலங்கார ஊர்தியில் தமிழக அரசு சார்பாக அனுப்பப்பட்ட வாகனத்தில் கருணாநிதி மற்றும் அவரின் இணைவியார் ராசத்தியம்மாள் சிலை வைக்கப்பட்டதால் தமிழக அலங்கார வாகனம் நிராகரிக்கப்பட்டது என்ற தகவல் தற்போது வந்துள்ளது இதனை திமுக அரசு தவிர்த்திருக்கலாம் காங்கிரஸ் கம்பி கார்த்திக் சிதம்பரம்” என்று இருந்தது. 

இந்த பதிவை வரண்டியவேலன் ம.செந்தில் பாண்டியன் நாடார் என்ற ஃபேஸ்புக் ஐடி கொண்ட நபர் 2022 ஜனவரி 21 அன்று பதிவிட்டுள்ளார். இவரைப் போல பலரும் இதைப் பகிர்ந்து வருகின்றனர்.

உண்மை அறிவோம்:

ஒவ்வொரு ஆண்டும் குடியரசு தினத்தையொட்டி டெல்லியில் நடைபெறும் அணிவகுப்பில் மாநிலங்கள் சார்பில் அலங்கார ஊர்திகள் பங்கேற்கும். இந்த ஆண்டுக்கான அலங்கார ஊர்தியை வடிவமைத்து தமிழ்நாடு அரசு வழங்கியிருந்தது. கப்பலோட்டிய தமிழன் சிதம்பரனார், மகாக்கவி பாரதியார், வேலுநாச்சியார் உள்ளிட்டவர்களைக் கொண்டு அலங்கார ஊர்தி தயாரிக்கப்பட்டதாக கூறப்படுகிறது.

தமிழ்நாடு அரசு வழங்கிய அலங்கார ஊர்தியின் மாதிரியை ஊடகவியலாளர் ஒருவர் வெளியிட்டார். அதைத் தொடர்ந்து மத்திய அரசுக்கு எதிராக பலரும் கண்டனம் தெரிவித்து வருகின்றனர்.

Archive

இந்த சூழலில் பாரதியார் சிலைக்கு அருகே முன்னாள் முதல்வர் மு.கருணாநிதி மற்றும் அவரது துணைவியார் ராசாத்தியம்மாள் ஆகியோர் சிலைகள் வைத்து மாதிரி வழங்கப்பட்டதாகவும், அதனால்தான் மத்திய அரசு அதை நிராகரித்தது என்றும் சிலர் சமூக ஊடகங்களில் படங்களைப் பகிர்ந்து வருகின்றனர். இதை உறுதி செய்ய, ஊடகவியலாளர் வெளியிட்ட உண்மையான படத்தைத் தேடி எடுத்தோம். அதில், கருணாநிதி, ராசாத்தியம்மாள் ஆகியோரின் உருவங்கள் இல்லை. வேண்டுமென்றே கருணாநிதி மற்றும் ராசாத்தியம்மாள் உருவத்தை வைத்து சமூக ஊடகங்களில் வதந்தி பரப்பியது இதன் மூலம் உறுதியாகிறது.

இதற்கிடையே. தமிழ்நாடு அரசு கருணாநிதி உருவத்துடன் அலங்கார ஊர்தி தயாரித்திருக்க வேண்டாம் என்று கார்த்தி சிதம்பரம் அறிவுரை கூறியது போன்று ஒரு தந்தி டிவி நியூஸ் கார்டும் சமூக ஊடகங்களில் பகிரப்பட்டு வருகிறது. பல்வேறு எழுத்துப்பிழையோடு அந்த நியூஸ் கார்டு இருந்தது. முதலில் கார்த்திக் சிதம்பரம் என்று குறிப்பிட்டுள்ளனர். அவரது உண்மையான பெயர் கார்த்தி சிதம்பரம்தான். அவருடைய தேர்தல் வேட்புமனுவில் கார்த்தி சிதம்பரம் என்றே குறிப்பிட்டுள்ளார். தந்தி டிவி அவரை கார்த்தி சிதம்பரம் என்றே குறிப்பிட்டு வருகிறது. அடுத்தது ராசாத்தியம்மாள் என்பதற்கு பதில் ராசத்தியம்மாள் என்று இருந்தது. மேலும் இந்த ஃபாண்ட் வழக்கமாக தந்தி டிவி வெளியிடும் தமிழ் ஃபாண்ட் போல இல்லை. எனவே, தந்தி டிவி-யில் உண்மையில் இந்த நியூஸ் கார்டு வெளியானதா என்று பார்த்தோம். 

தந்தி டி.வி இந்த நியூஸ் கார்டு போலியானது என்று “FAKE NEWS” என்று முத்திரை குத்தி இதை வெளியிட்டிருந்தது. இதன் மூலம் இந்த நியூஸ் கார்டை தந்தி டிவி வெளியிடவில்லை என்பது உறுதியானது. 

கார்த்தி சிதம்பரம் வேறு எங்காவது இப்படிக் கூறினாரா என்று கூகுளில் தேடிப் பார்த்தோம். நமக்கு அப்படி எந்த ஒரு செய்தியும் கிடைக்கவில்லை. அவருடைய ட்விட்டர் பக்கத்தில் இந்த போலியான நியூஸ் கார்டை பகிர்ந்து, பொய்யான செய்திகளை பரப்புவதை பாஜக நிறுத்த வேண்டும் என்று கூறியிருந்தார். 

Archive

இதன் மூலம் இந்த நியூஸ் கார்டு மற்றும் அதில் உள்ள தகவல் இரண்டுமே தவறானது என்று உறுதியாகிறது. இவற்றின் அடிப்படையில் நாம் ஆய்வுக்கு எடுத்துக்கொண்ட பதிவுகள் தவறானவை என்று உறுதி செய்யப்படுகின்றது.

முடிவு:

குடியரசு தின அலங்கார ஊர்தியில் கருணாநிதி சிலையை தமிழ்நாடு அரசு வைத்தது என்று பகிரப்படும் படம் எடிட் செய்யப்பட்டது, போலியானது என்பதை தகுந்த ஆதாரங்களுடன் ஃபேக்ட் கிரஸண்டோ தமிழ் உறுதி செய்துள்ளது. எனவே, நமது வாசகர்கள், இத்தகைய தவறான செய்தி, புகைப்படங்கள், வீடியோ போன்றவற்றை உறுதி செய்யாமல் மற்றவர்களுக்குப் பகிர வேண்டாம் என கேட்டுக் கொள்கிறோம். வாசகர்கள் தங்களுக்கு சந்தேகம் என்று தோன்றும் தகவல், பதிவு, புகைப்படம், வீடியோவை எங்களது வாட்ஸ் ஆப் எண்ணிற்கு (+91 9049053770) அனுப்பினால், அதுபற்றி ஆய்வு செய்து உண்மை விவரத்தை வெளியிடுகிறோம்.

சமூக ஊடகங்களில் எங்களை பின் தொடர விரும்பினால்…

Facebook I Twitter I Google News Channel

Avatar

Title:குடியரசு தின அலங்கார ஊர்தியில் கருணாநிதி சிலை என பரவிய வதந்திகள்!

Fact Check By: Chendur Pandian 

Result: Altered