துருக்கி நிலநடுக்கத்தில் பலியானவர்கள் புதைக்கப்படும் காட்சி என்று பரவும் வீடியோ உண்மையா?

சமூக ஊடகம் | Social சமூகம் சர்வதேசம் | International

துருக்கி நிலநடுக்கத்தில் பலியானவர்களின் உடல்கள் ஒரே இடத்தில் புதைக்கப்படும் அவலம் என்று ஒரு வீடியோ சமூக ஊடகங்களில் வைரலாக பகிரப்பட்டு வருகிறது. இந்த வீடியோ உண்மையா என்று ஆய்வு செய்தோம்.

தகவலின் விவரம்:

உண்மைப் பதிவைக் காண: Facebook I Archive

நீளமான குழியில் இறந்தவர்களின் உடல்களை கொண்டு வந்து போடும் வீடியோ பகிரப்பட்டுள்ளது. நிலைத் தகவலில், “துருக்கி நிலநடுக்கத்தில் பலியானவர்களை நீள குழிவெட்டி புதைக்கப்படும் அவலம்!” என்று குறிப்பிடப்பட்டிருந்தது.

இந்த வீடியோவை Albert Fernando என்ற ஃபேஸ்புக் ஐடி கொண்டவர் 2023 பிப்ரவரி 17ம் தேதி வெளியிட்டுள்ளார். இவரைப்போல பலரும் இந்த வீடியோவை பகிர்ந்து வாழ்க்கைத் தத்துவங்களுடன் துருக்கியில் உடல் அடக்கம் செய்யப்படும் காட்சி என்று குறிப்பிட்டுப் பதிவிட்டு வருகின்றனர்.

உண்மை அறிவோம்:

துருக்கியில் ஏற்பட்ட நிலநடுக்கத்தில் பல ஆயிரக் கணக்கானோர் உயிரிழந்துள்ளனர். அவர்களின் உடல்கள் ஒரே குழியில் அடக்கம் செய்யப்படுகிறது என்று குறிப்பிட்டு சமூக ஊடகங்களில் சிலர் பகிர்ந்து வருகின்றனர். இந்த வீடியோவை ஆய்வு செய்தோம்.

Archive

வீடியோவை புகைப்படங்களாக மாற்றி கூகுள் ரிவர்ஸ் இமேஜ் தேடலில் பதிவேற்றித் தேடினோம். அப்போது, நாம் ஆய்வுக்கு எடுத்துக்கொண்ட வீடியோவில் இடம் பெற்ற காட்சிகளைப் புகைப்படமாக 2022 மே 18ம் தேதி ட்விட்டரில் பதிவிடப்பட்டிருந்தது. அதில், உக்ரைனில் 30 மீட்டர் நீளத்துக்குக் குழி தோண்டி அதில் போரில் உயிரிழந்தவர்களின் உடல்கள் மொத்தமாக மிகப்பெரிய அளவில் அடக்கம் செய்யப்பட்டது என்று குறிப்பிடப்பட்டிருந்தது. 

உண்மைப் பதிவைக் காண: bbs.ruliweb.com I Archive 1 I joongang.co.kr I Archive 2

இந்த தகவல் அடிப்படையில் வேறு வேறு கீ வார்த்தைகளைப் பயன்படுத்தி கூகுளில் தேடினோம். அப்போது நாம் ஆய்வுக்கு எடுத்துக்கொண்ட வீடியோ காட்சியுடன் கொரிய ஊடகத்தில் செய்தி வெளியாகி இருப்பதைக் காண முடிந்தது. 2022ம் ஆண்டு மார்ச் மாதம் அந்த செய்தி வெளியாகி இருந்தது. 

அதே போன்று யூடியூபிலும் நமக்கு வேறு சில வீடியோக்கள் கிடைத்தன. நாம் ஆய்வுக்கு எடுத்துக்கொண்ட வீடியோவில் உள்ள காட்சியுடன், உடல்களை அடக்கம் செய்தவர்களின் பேட்டியும் அதில் இடம் பெற்றிருந்தன. 

ஃபேஸ்புக்கில் Mass Grave In Mariupol, Ukraine என்று டைப் செய்து தேடினோம். அப்போது, நாம் ஆய்வுக்கு எடுத்துக்கொண்ட அதே வீடியோ 2022 மார்ச் 12ம் தேதி பதிவேற்றம் செய்யப்பட்டிருப்பது தெரிந்தது. அதில், “ரஷ்யா – உக்ரைன் போரில் ரஷ்ய தாக்குதலில் உயிரிழந்த உக்ரைனின் Mariupol என்ற ஊரைச் சேர்ந்த மக்களின் உடல்கள் ஒரே இடத்தில் அடக்கம் செய்யப்படுகின்றது” என்று குறிப்பிடப்பட்டிருந்தது. இவை எல்லாம் இந்த வீடியோ 2023 துருக்கி நிலநடுக்கத்தின் போது எடுக்கப்பட்டது இல்லை என்பதை உறுதி செய்தன.

முடிவு:

ரஷ்யா – உக்ரைன் போரில் உயிரிழந்தவர்களின் உடல்கள் மொத்தமாக அடக்கம் செய்யப்படும் வீடியோவை துருக்கி நிலநடுக்கத்தில் உயிரிழந்தவர்கள் என்று தவறாக பகிர்ந்திருப்பதை தகுந்த ஆதாரங்கள் அடிப்படையில் ஃபேக்ட் கிரஸண்டோ தமிழ் உறுதி செய்துள்ளது. எனவே, நமது வாசகர்கள், இத்தகைய தவறான செய்தி, புகைப்படங்கள், வீடியோ போன்றவற்றை உறுதி செய்யாமல் மற்றவர்களுக்குப் பகிர வேண்டாம் என கேட்டுக் கொள்கிறோம். வாசகர்கள் தங்களுக்கு சந்தேகம் என்று தோன்றும் தகவல், பதிவு, புகைப்படம், வீடியோவை எங்களது வாட்ஸ் ஆப் எண்ணிற்கு (+91 9049053770) அனுப்பினால், அதுபற்றி ஆய்வு செய்து உண்மை விவரத்தை வெளியிடுகிறோம்.

சமூக ஊடகங்களில் எங்களை பின் தொடர விரும்பினால்…

Facebook I Twitter I Google News Channel

Avatar

Title:துருக்கி நிலநடுக்கத்தில் பலியானவர்கள் புதைக்கப்படும் காட்சி என்று பரவும் வீடியோ உண்மையா?

Fact Check By: Chendur Pandian 

Result: False