
‘’சென்னை, காஞ்சிபுரம், திருச்சி பெயரை மாற்றுவோம் என்று பாஜக வாக்குறுதி,’’ என்று கூறி சமூக வலைதளங்களில் பகிரப்படும் தகவல் ஒன்றை காண நேரிட்டது. இதன் நம்பகத்தன்மை பற்றி ஆய்வு செய்ய தீர்மானித்தோம்.
தகவலின் விவரம்:

இதனை வாசகர் ஒருவர், +91 9049053770 என்ற வாட்ஸ்ஆப் சாட்போட் எண்ணில் நமக்கு அனுப்பி, உண்மையா என்று சந்தேகம் கேட்டிருந்தார். இதன்பேரில், ஃபேஸ்புக்கில் தகவல் தேடியபோது, பலரும் இதனை நகைச்சுவைக்காகவும், வேண்டுமென்றே உள்நோக்கத்துடனும் பகிர்ந்து வருவதைக் கண்டோம்.
எனவே, இது உண்மையா, பொய்யா என்ற குழப்பம் சாமானிய வாசகர்களுக்கு உள்ளதால், நாம் ஆய்வை மேற்கொண்டோம்.
உண்மை அறிவோம்:
இந்த செய்தியை பார்த்தாலே, இப்படியெல்லாம் பெயர் மாற்றம் செய்வார்களா என்ற கேள்வி நமக்கு இயல்பாகவே எழுகிறது. ஆனால், இதனையும் சிலர் உண்மை என்று கூறி மற்றவர்களுக்கு ஃபார்வேர்ட் செய்வதால், சட்டமன்ற தேர்தல் 2021 பரபரப்பு சூழலில், இதனை பார்ப்பவர்களும் குழம்ப நேரிடும் சூழல் உள்ளது.
எனவே, இதுபற்றி பாஜக மாநில செய்தித் தொடர்பாளர் அஸ்வத்தாமன் அவர்களை தொடர்பு கொண்டு விளக்கம் கேட்டோம். குறிப்பிட்ட தகவலை பார்வையிட்ட அவர், ‘’நாங்கள் திமுக.,வுடன் சித்தாந்த ரீதியாக மோதி வருகிறோம். ஆனால், அவர்கள் வேண்டுமென்றே பல பொய்ச் செய்திகளை சமூக வலைதளங்களில் பரப்பி எங்களை பற்றி பொதுமக்களிடையே தவறான அபிப்ராயம் ஏற்படுத்துவதில் கவனமாக உள்ளனர். இத்தகைய பொய்ச்செய்திகள் பகிர்வோரை கண்டறிந்து, சட்டப்படி நடவடிக்கை எடுக்க தீர்மானித்துள்ளோம்,’’ என்றார்.
பாஜக தேர்தல் அறிக்கையை கேலி செய்யும் வகையில் பகிரப்படும் இத்தகைய வதந்திகளை யாரும் உண்மை என்று நம்பி மற்றவர்களுக்கு பகிர வேண்டாம் என்று கேட்டுக் கொள்கிறோம்.
முடிவு:
உரிய ஆதாரங்களின் அடிப்படையில் நாம் ஆய்வு மேற்கொண்ட தகவல் நம்பகமானது இல்லை என்று ஃபேக்ட் கிரஸண்டோ தமிழ் நிரூபித்துள்ளது. நமது வாசகர்கள் இத்தகைய தவறான செய்தி, புகைப்படம் மற்றும் வீடியோவை கண்டால், எங்களது வாட்ஸ் ஆப் எண்ணிற்கு (+91 9049053770) அனுப்புங்கள். நாங்கள், அதுபற்றி ஆய்வு செய்து உண்மை விவரத்தை வெளியிடுகிறோம்.

Title:சென்னை, காஞ்சிபுரம், திருச்சி பெயரை மாற்றுவோம் என்று பாஜக கூறியதா?
Fact Check By: Pankaj IyerResult: False
