தன் மகளின் வாழ்வை காக்க தூக்கிக்கொண்டு ஓடும் ஆப்கானிஸ்தான் தந்தை என்று ஒரு புகைப்படம் சமூக ஊடகங்களில் பகிரப்பட்டு வருகிறது. இது உண்மையா என்று ஆய்வு செய்தோம்.

தகவலின் விவரம்:

அசல் பதிவைக் காண: Facebook I Archive

போர் சூழலில் மகளை தூக்கிக்கொண்டு ஓடும் தந்தை ஒருவரின் புகைப்படம் பகிரப்பட்டுள்ளது. நிலைத் தகவலில், "தன் மகளின் வாழ்வை காக்க தூக்கி கொண்டு ஓடும் ஒரு ஆப்கன் தந்தை😭😭 மகள்களை பெற்ற அப்பாக்களுக்கு தான் தெரியும்..." என்று குறிப்பிடப்பட்டுள்ளது.

இந்த பதிவை Sathish Jayaraman என்ற ஃபேஸ்புக் ஐடி கொண்ட நபர் 2021 ஆகஸ்ட் 22ம் தேதி பதிவிட்டுள்ளார். பலரும் இதை ஷேர் செய்து வருகின்றனர்.

உண்மை அறிவோம்:

ஆப்கானிஸ்தானில் மிகப்பெரிய அளவில் மோதல் எதுவும் இன்றி தாலிபான்கள் ஆட்சியைக் கைப்பற்றினர். ஆனால், இந்த புகைப்படத்தைப் பார்க்க மிகப்பெரிய தாக்குதல், போர் நடந்தது போல உள்ளது. எனவே, இந்த புகைப்படம் உண்மைதானா என்று ஆய்வு செய்தோம்.

படத்தை ரிவர்ஸ் இமேஜ் தேடலில் பதிவேற்றித் தேடினோம். அப்போது பல ஆண்டுகளாக இந்த புகைப்படம் செய்தி மற்றும் சமூக ஊடகங்களில் பகிரப்பட்டு வருவதை காண முடிந்தது. பலரும் சிரியாவில் எடுக்கப்பட்ட படம் என்ற வகையில் இதை பதிவிட்டு வந்துள்ளனர்.

அசல் பதிவைக் காண: zeenews.india.com I Archive

2018ம் ஆண்டு சிரியாவில் நடைபெற்று வரும் படுகொலைகள் தொடர்பாக சீமான் வெளியிட்டிருந்த அறிக்கை தொடர்பான செய்தியில் கூட இந்த புகைப்படத்தை ஊடகம் ஒன்று பயன்படுத்தியிருந்தது. இதன் மூலம் ஆப்கானிஸ்தானை தாலிபான்கள் கைப்பற்றிய பிறகு தன் மகளைக் காப்பாற்றத் தந்தை ஒருவர் ஓடும் காட்சி என்று பகிரப்படும் தகவல் தவறானது என்பது உறுதியானது.

இந்த புகைப்படம் எங்கு எப்போது எடுக்கப்பட்டது என்பதை அறிய பல்வேறு ரிவர்ஸ் இமேஜ் தேடல் தளங்களில் பதிவேற்றித் தேடினோம். tineye.com ரிவர்ஸ் இமேஜ் தளத்தில் இந்த படத்தை பதிவேற்றித் தேடினோம். அப்போது reuters.com இந்த புகைப்படத்தை வெளியிட்டிருப்பது தெரியவந்தது. அதில், 2017ம் ஆண்டு ஈராக்கின் மோசுல் நகரில் எடுக்கப்பட்டது என்று குறிப்பிட்டிருந்தனர். மதவாதிகள் கட்டுப்பாட்டிலிருந்த மோசுல் நகர் மீது ஈராக்கின் சிறப்பு அதிரடிப்படையினர் தாக்குதல் நடத்தினர் என்று கூறியிருந்தது.

அசல் பதிவைக் காண: reuters.com I Archive 1 I reuters.com I Archive 2

இதன் மூலம் 2017ம் ஆண்டு ஈராக்கில் எடுக்கப்பட்ட படத்தை தற்போது ஆப்கானிஸ்தானை தாலிபான்கள் கைப்பற்றிய சூழலில் அங்கு எடுக்கப்பட்டது என்று தவறான தகவல் சேர்த்து பகிர்ந்திருப்பது உறுதியாகிறது.

முடிவு:

ஆப்கானிஸ்தானின் தன் மகளின் உயிரைக் காப்பாற்ற அவரை சுமந்துகொண்டு ஓடும் தந்தை என்று பகிரப்படும் படம் ஈராக்கில் 2017ம் ஆண்டு எடுக்கப்பட்டது என்பதை தகுந்த ஆதாரங்களுடன் ஃபேக்ட் கிரஸண்டோ தமிழ் உறுதி செய்துள்ளது. எனவே, நமது வாசகர்கள், இத்தகைய தவறான செய்தி, புகைப்படங்கள், வீடியோ போன்றவற்றை உறுதி செய்யாமல் மற்றவர்களுக்குப் பகிர வேண்டாம் என கேட்டுக் கொள்கிறோம். வாசகர்கள் தங்களுக்கு சந்தேகம் என்று தோன்றும் தகவல், பதிவு, புகைப்படம், வீடியோவை எங்களது வாட்ஸ் ஆப் எண்ணிற்கு (+91 9049053770) அனுப்பினால், அதுபற்றி ஆய்வு செய்து உண்மை விவரத்தை வெளியிடுகிறோம்.

சமூக ஊடகங்களில் எங்களை பின் தொடர விரும்பினால்…

Facebook I Twitter I Google News Channel

Avatar

Title:ஆப்கானிஸ்தானில் மகளின் வாழ்க்கைக்காக ஓடும் தந்தை என்று பகிரப்படும் ஈராக் புகைப்படம்!

Fact Check By: Chendur Pandian

Result: False