
குஜராத்தில் தந்தைக்கு ஆக்சிஜன் இல்லை என்று மகள் கதறுகிறார் என்று ஒரு வீடியோ சமூக ஊடகங்களில் பகிரப்பட்டு வருகிறது. இதன் நம்பகத்தன்மையை ஆய்வு செய்தோம்.
தகவலின் விவரம்:

அசல் பதிவைக் காண: Facebook I Archive
பெண் ஒருவர் கதறும் வீடியோ பகிரப்பட்டுள்ளது. காட்சி மீடியா நபர்கள் அவரிடம் பேட்டி எடுக்க முயல, அவர் மைக்கை தட்டிவிட்டு கதறுகிறார். நிலைத் தகவலில், “குஜராத்தில் தந்தைக்கு ஆக்சிஜன் இல்லாமல் கதறும் மகள். திருந்துங்கடா பான்பராக் வாயனுங்களா..” என்று குறிப்பிடப்பட்டுள்ளது. இந்த வீடியோவை Navas Navas என்பவர் 2021 ஏப்ரல் 18 அன்று பதிவிட்டுள்ளார். பலரும் இதை ஷேர் செய்து வருகின்றனர்.
உண்மை அறிவோம்:
கொரோனா உயிரிழப்பு நாடு முழுவதும் அதிகரித்து வருகிறது. இந்த உயிரிழப்புகள் எந்த வகையிலும் ஈடு செய்ய முடியாததுதான். நாடு முழுவதும் தொற்று அதிகரித்து வருகிறது, உயிரிழப்பு அதிகரித்து வருகிறது. ஒரு குறிப்பிட்ட மாநிலத்தில் மட்டும் இது போன்ற சம்பவங்கள் நடைபெறுவது போல சமூக ஊடகங்களில் சித்தரிக்கப்படுகிறது. அந்த மாநிலத்தில் நிலைமை சிறப்பாக உள்ளது என்று நாம் சான்றிதழ் வழங்கவில்லை. அங்கு பிரச்னை உள்ளது என்பதை மறுப்பதற்கு இல்லை. பலரும் இந்த வீடியோவை ஷேர் செய்து வரவே, இந்த வீடியோ குஜராத்தில் எடுக்கப்பட்டதா என்று மட்டுமே ஆய்வு செய்தோம்.

வீடியோ காட்சியை புகைப்படமாக மாற்றி ரிவர்ஸ் இமேஜ் தேடலில் பதிவேற்றித் தேடினோம். அப்போது இந்த பெண்மணி கதறுவது தொடர்பான பல வீடியோக்கள், செய்திகள் நமக்கு கிடைத்தன. இந்தியன் எக்ஸ்பிரஸ் வெளியிட்டிருந்த வீடியோவில் இந்த சம்பவம் ஜார்கண்ட் மாநில தலைநகர் ராஞ்சியில் நடந்தது என்று குறிப்பிட்டிருந்தனர். 30 வயதான அந்த பெண்மணி சமீபத்தில் தன்னுடைய தந்தையை கொரோனா தொற்று காரணமாக, ராஞ்சியில் உள்ள சதார் மருத்துவமனைக்கு, சிகிச்சைக்காக அழைத்து வந்துள்ளார்.
ஆனால், அவருக்கு சிகிச்சை அளிக்க அங்கு மருத்துவர்கள் இல்லை. ஒரு மணி நேரமாக வெளியே காத்திருக்கச் சொன்னார்கள். கடைசியில் சிகிச்சை கிடைக்காமல் இறந்துவிட்டார். அமைச்சரின் மருத்துவமனை ஆய்வு காரணமாக இந்த நிகழ்வு நடந்தது என்று மாநில சுகாதாரத் துறை அமைச்சர் மீது அவர் குற்றம்சாட்டியதாக பல செய்திகள் கிடைத்தன.
மருத்துவமனையில் சிகிச்சை அளிக்காததால் தந்தை இறந்துவிட்டார் என்று அந்த பெண்மணி கதறுகிறார். ஆனால், ஆக்சிஜன் கிடைக்கவில்லை என்று கதறியதாக தகவறாக குறிப்பிட்டுள்ளனர். துரதிஷ்டவசமாக அந்த பெண்மணியின் தந்தை உயிரிழந்துவிட்டார்.
மேலும், ஜார்கண்ட் மாநிலம் ராஞ்சியில் நடந்ததை, குஜராத்தில் நடந்தது என்று தவறான தகவல் சேர்த்துப் பகிர்ந்துள்ளனர். நம்முடைய ஆய்வில் இந்த வீடியோ ஜார்க்கண்டில் எடுக்கப்பட்டது என்று உறுதி செய்யப்படுகிறது.
முடிவு:
ஜார்கண்ட் தலைநகர் ராஞ்சியில் எடுக்கப்பட்ட வீடியோவை குஜராத்தில் எடுக்கப்பட்டது என்று தவறான தகவல் சேர்த்து சமூக ஊடகங்களில் பகிர்ந்து வருவதை தகுந்த ஆதாரங்களுடன் ஃபேக்ட் கிரஸண்டோ உறுதி செய்துள்ளது. எனவே, நமது வாசகர்கள், இத்தகைய தவறான செய்தி, புகைப்படங்கள், வீடியோ போன்றவற்றை உறுதி செய்யாமல் மற்றவர்களுக்குப் பகிர வேண்டாம் என கேட்டுக் கொள்கிறோம். வாசகர்கள் தங்களுக்கு சந்தேகம் என்று தோன்றும் தகவல், பதிவு, புகைப்படம், வீடியோவை எங்களது வாட்ஸ் ஆப் எண்ணிற்கு (+91 9049053770) அனுப்பினால், அதுபற்றி ஆய்வு செய்து உண்மை விவரத்தை வெளியிடுகிறோம்.

Title:தந்தைக்கு ஆக்சிஜன் இல்லை என்று கதறும் மகள்; இந்த வீடியோ குஜராத்தில் எடுத்ததா?
Fact Check By: Chendur PandianResult: Partly False
