FactCheck: இலங்கை தமிழ் இந்துக்கள் 6 லட்சம் பேருக்கு குடியுரிமை வழங்கியதாக அமித் ஷா கூறினாரா?

அரசியல் | Politics சமூக ஊடகம் | Social தமிழ்நாடு | Tamilnadu

‘’6 லட்சத்திற்கும் மேற்பட்ட இலங்கைத் தமிழ் இந்துக்களுக்கு இந்தியக் குடியுரிமை வழங்கப்பட்டுள்ளது- அமித் ஷா,’’ என்று கூறி சமூக வலைதளங்களில் பகிரப்படும் நியூஸ் கார்டு ஒன்றை கண்டோம். இதன் நம்பகத்தன்மை பற்றி ஆய்வு செய்ய தீர்மானித்தோம்.

தகவலின் விவரம்:

இதனை வாசகர் ஒருவர் +91 9049053770 என்ற நமது வாட்ஸ்ஆப் சாட்போட் எண்ணிற்கு அனுப்பி, உண்மையா என சந்தேகம் கேட்டிருந்தார். இதன்பேரில் நாமும் தகவல் தேடியபோது, பலரும் ஃபேஸ்புக்கில் பகிர்வதை கண்டோம்.

FB Claim Link I Archived Link

உண்மை அறிவோம்:
முதலில், அமித் ஷா இந்த தகவலை தற்போது எங்கேயும் வெளியிட்டாரா என்றால், இல்லை என்றே சொல்ல வேண்டும். கடந்த 2019ம் ஆண்டு டிசம்பர் மாதத்தில் இத்தகைய கருத்தை அமித் ஷா வெளிப்படுத்தியுள்ளார். இதுபற்றி பிபிசி தமிழ் ஊடகம் அப்போதே விரிவான ஆய்வுக் கட்டுரையையும் வெளியிட்டிருக்கிறது.

BBC Tamil Link

இதன்படி, அமித் ஷா, 2019ம் ஆண்டு மாநிலங்களவையில் பேசுகையில், ‘’பல உறுப்பினர்கள் இலங்கையைச் சேர்ந்த தமிழ் அகதிகள் குறித்து கேள்வி எழுப்பியுள்ளனர். நான் பெயர்களைக் குறிப்பிட விரும்பவில்லை. இருந்தாலும், வைகோ, திருச்சி சிவா போன்றவர்கள் இது குறித்து கேட்டார்கள். 1947ல் இருந்து இந்திய அரசு பல்வேறு காலகட்டங்களில் இலங்கைத் தமிழர்களுக்கு குடியுரிமை வழங்கியிருக்கிறது.

பல்வேறு கட்சிகள் இதைச் செய்திருக்கின்றன. முதலில் 4,61,000 பேருக்கு குடியுரிமை வழங்கப்பட்டது. பிறகு, 94 ஆயிரம் குடும்பங்களுக்கு வழங்கப்பட்டது. பிறகு, ஒன்றரை லட்சம் பேர் விண்ணப்பித்தார்கள். அவர்களில் 75 ஆயிரம் பேர் திருப்பி அனுப்பப்பட்டார்கள். 75 ஆயிரம் பேர் இந்தியாவிலேயே வைத்துக்கொள்ளப்பட்டார்கள். இரண்டு லட்சத்து 16 ஆயிரம் அகதிகள் இலங்கைக்குத் திரும்பிச் சென்றிருக்கிறார்கள். சிலர் இன்னும் இங்கே இருக்கிறார்கள். ஒரு அநீதியும் இழைக்கப்படவில்லை,’’ என்று குறிப்பிட்டிருக்கிறார்.

அவர் நாடாளுமன்றத்தில் பேசிய விவரத்தை கீழே இணைத்துள்ளோம்.

lok sabha questions link 1

lok sabha questions link 2

lok sabha questions link 3

இதன்படி பார்க்கும்போது, இவர்களில் இந்துக்கள் மட்டுமே உள்ளடக்கம் எனக் கூற முடியாது, கிறிஸ்தவர்கள், முஸ்லீம்களும் கண்டிப்பாக உள்ளனர். இது தவிர, அமித் ஷா, இலங்கைத் தமிழர்களுக்கும், இலங்கையில் உள்ள காப்பி, தேயிலை தோட்டங்களில் பணிபுரிய சென்று, பிறகு நாடு திரும்பிய இந்திய தமிழர்களுக்கும் வித்தியாசம் தெரியாமல் குழப்புவதாக, பிபிசி தமிழ் வெளியிட்ட செய்தி சுட்டிக் காட்டுகிறது.

தவறான புள்ளி விவரத்தை அமித் ஷா சமர்ப்பித்து பேசியுள்ளார் என, அவர் பற்றி ஏற்கனவே விமர்சனம் உள்ள நிலையில், 2019ம் ஆண்டு வெளியான இந்த செய்தியை தற்போது புதியதுபோல எடுத்து, 2021ல் சிலர் பகிர்ந்து வருகின்றனர். அதிலும், இந்துக்களுக்கு முன்னுரிமை அளித்த பாஜக அரசு என்பது போன்ற கருத்தை ஏற்படுத்த முயற்சிக்கின்றனர்.

இதற்கடுத்தப்படியாக, இந்தியாவில் வாழும் இலங்கைத் தமிழ் அகதிகளுக்கே இன்னமும் முழுமையான குடியுரிமை வழங்கப்படவில்லை என்பது விவாதமாக உள்ளது. இதுபற்றி மத்திய அரசுக்கு, தமிழ்நாட்டில் இருந்து பல்வேறு கட்சிகளும் தொடர்ச்சியாக வலியுறுத்தி வருகின்றன. சமீபத்திய சிஏஏ சட்டத்தில் கூட இலங்கைத் தமிழ் அகதிகளை சேர்க்கும்படி கோரிக்கை வைக்கப்படுகிறது.

India Today Link I TOI Link

இறுதியாக, இந்தியர்கள் 6 லட்சம் பேர் கடந்த 5 ஆண்டுகளில் தங்களது குடியுரிமையை விட்டுக் கொடுத்துள்ளதாக, ஒரு செய்தி வெளியாகியிருக்கிறது. அதனையும் கீழே ஆதாரத்திற்காக இணைத்துள்ளோம். எனினும், அது வேறு ஒரு விவகாரம்.

zee5.com link

இதுவரை கிடைத்த ஆதாரங்களின் அடிப்படையில் நமக்கு தெரியவரும் உண்மையின் விவரம்,

1) இலங்கைத் தமிழ் அகதிகளுக்கு குடியுரிமை வழங்கும் விவகாரம் இன்னமும் முழுமையாக அமலுக்கே வரவில்லை.

2) இந்தியாவில் இருந்து இலங்கையில் உள்ள தேயிலை, காப்பி தோட்டங்களில் பணிபுரிய சென்ற இந்திய வம்சாவழி தமிழர்களில் குறிப்பிட்ட தொகை மக்கள், ஸ்ரீமாவோ – சாஸ்திரி ஒப்பந்தத்தின் அடிப்படையில் இந்தியாவிற்கே திரும்பி வந்துவிட்டனர். அவர்களுக்கு குடியுரிமை தரப்பட்டுள்ளது.

3) 1947ம் ஆண்டில் இருந்து இப்படி இலங்கையில் இருந்து இந்திய வம்சாவழித் தமிழர்கள் மற்றும் இலங்கையை பூர்வீகமாகக் கொண்ட தமிழர்கள் என கலந்து இங்கே இதுவரை 6 லட்சம் பேர் குடியேறி குடியுரிமை வாங்கியுள்ளனர். இந்திய குடியுரிமைச் சட்டத்தின்படி அவர்கள் இதனை பெற்றுள்ளனர். இவர்களில் இந்துக்கள் மட்டுமல்ல, கிறிஸ்தவர்கள், இஸ்லாமியர்கள் என பலரும் உள்ளனர். அதேசமயம், இலங்கைத் தமிழ் அகதிகளை இந்த பட்டியலில் சேர்க்க முடியாது. அந்த கதை வேறு. இலங்கையில் இருந்து அரசியல் அடைக்கலம் கோரி வருபவர்கள், இந்தியாவிலேயே குடியேறும் நோக்கத்துடன் வருபவர்களுக்கும், இலங்கைத் தமிழ் அகதிகளுக்கும் வித்தியாசம் உள்ளது.

4) அமித் ஷாவே சரியான புள்ளி விவரத்துடன் பேசவில்லை என்ற விமர்சனம் உள்ள நிலையில், அவர் 6 லட்சம் இலங்கை தமிழ் இந்துக்களுக்கு குடியுரிமை வழங்கியதாகக் கூறினார் என்று குறிப்பிட்டு தகவல் பகிர்வது, இலங்கை அகதிகளுக்கு பாஜக அரசு குடியுரிமை வழங்கியதைப் போன்ற தவறான அர்த்தத்தை ஏற்படுத்துகிறது. எனவே, மேலே பகிரப்படும் தகவலில் முற்றிலும் நம்பகத்தன்மை இல்லை என்று உறுதி செய்யப்படுகிறது.

முடிவு:

உரிய ஆதாரங்களின் அடிப்படையில் நாம் ஆய்வு மேற்கொண்ட தகவல் நம்பகமானது இல்லை என்று ஃபேக்ட் கிரஸண்டோ தமிழ் நிரூபித்துள்ளது. நமது வாசகர்கள் இத்தகைய தவறான செய்தி, புகைப்படம் மற்றும் வீடியோவை கண்டால், எங்களது வாட்ஸ் ஆப் எண்ணிற்கு (+91 9049053770) அனுப்புங்கள். நாங்கள், அதுபற்றி ஆய்வு செய்து உண்மை விவரத்தை வெளியிடுகிறோம்.  

எங்களது சமூக வலைதள பக்கங்களை பின்தொடர…

Facebook Page I Twitter Page I Google News Channel

Avatar

Title:இலங்கை தமிழ் இந்துக்கள் 6 லட்சம் பேருக்கு குடியுரிமை வழங்கியதாக அமித் ஷா கூறினாரா?

Fact Check By: Pankaj Iyer 

Result: Misleading