
தமிழ்நாடு பாஜக தலைவர் அண்ணாமலை நிர்வாகிகளைச் சந்தித்த இடத்தில் பாஜக முன்னோடிகள் புகைப்படத்துடன் நித்தியானந்தா படமும் மாட்டப்பட்டிருந்ததாக சிலர் புகைப்படத்தைப் பகிர்ந்து வருகின்றனர். அது பற்றி ஆய்வு செய்தோம்.
தகவலின் விவரம்:

உண்மைப் பதிவைக் காண: Facebook I Archive
அண்ணாமலை மற்றும் பாஜக நிர்வாகிகள் இருக்கும் புகைப்படத்துடன் பதிவு உருவாக்கப்பட்டுள்ளது. அந்த இடத்தில் பாஜக முன்னோடிகள் மற்றும் பிரதமர் மோடி, நட்டா ஆகியோர் புகைப்படங்களுடன் பிரபல சாமியார் நித்தியானந்தா படமும் இருப்பதாக வட்டமிட்டு காட்டப்பட்டுள்ளது. அந்த பதிவில் கம்ப்யூட்டர் டைப்பிங் முறையில், “ஒரு பெண்ணை நிக்க வச்சு 3 பேர் உக்காந்து “சமத்துவம்” அறிவுரை அது சரி அண்ணாமலை, அந்த மன்மத ராசா “நித்தி” போட்டோ மோடிக்கு கீழே, உங்க கட்சி குருவா?” என்று குறிப்பிடப்பட்டிருந்தது.
இந்த பதிவை Ssrajan Rajan என்ற ஃபேஸ்புக் ஐடி கொண்டவர் 2022 டிசம்பர் 14ம் தேதி பதிவிட்டுள்ளார். இவரைப் போல பலரும் இதைப் பகிர்ந்து வருகின்றனர்.
உண்மை அறிவோம்:
தமிழ்நாடு பாஜக தலைவர் அண்ணாமலை, கட்சி நிர்வாகிகளைச் சந்தித்த புகைப்படத்தைப் பகிர்ந்துள்ளனர். அதில் பாஜக முன்னோடிகள், பிரதமர் மோடி, பாஜக தேசிய தலைவர் நட்டா ஆகியோர் படங்களுடன் பிரபல சாமியார் நித்தியானந்தா புகைப்படமும் இருப்பதாக பகிர்ந்துள்ளனர். அதனுடன் நித்தியானந்தா தான் உங்கள் கட்சியின் குருவா என்றும் கேள்வி எழுப்பியுள்ளனர். எனவே, இந்த புகைப்படம் பற்றி ஆய்வு செய்தோம்.
படத்தை கூகுள் ரிவர்ஸ் இமேஜ் தேடலில் பதிவேற்றித் தேடினோம். அப்போது பாஜக நிர்வாகி ஒருவர் இந்த புகைப்படத்தை தன் ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டிருப்பது தெரிந்தது. அதில், “கோவில்பட்டியில் மாநாடு முடிந்த பின்பு எவ்வளவு களைப்பாக இருந்தாலும் அதை பொருட்படுத்தாமல் என்னுடைய அன்பு கோரிக்கையை ஏற்று வீட்டுக்கு வருகை புரிந்து என்னுடைய இளைஞர் அணி நிர்வாகிகளை அறிமுகம் செய்ய வாய்ப்பை வழங்கிய தலைவர் அண்ணாமலை அவர்களுக்கு நன்றி சொல்ல வார்த்தைகள் இல்லை.” என்று குறிப்பிட்டிருந்தார்.
அவர் வெளியிட்டிருந்த புகைப்படங்களில் நித்தியானந்தா படம் இல்லை. அண்ணாமலை புகைப்படம் இருந்தது. அண்ணாமலை புகைப்படம் இருந்த இடத்தை போட்டோஷாப் முறையில் மாற்றி நித்தியானந்தா படத்தை வைத்திருப்பது தெரிந்தது.

நாம் ஆய்வுக்கு எடுத்துக்கொண்ட படத்தை பாஜக நிர்வாகி Dhinesh Rodi என்பவர் 2022 டிசம்பர் 11ம் தேதி பதிவிட்டிருப்பது தெரிந்தது. அந்த படத்தில் அண்ணாமலை புகைப்படம் இருப்பதும் உறுதியாகியுள்ளது. அண்ணாமலை புகைப்படத்தை மாற்றி நித்தியானந்தா படத்தை வைத்து விஷமத்தனமாக பதிவைப் பகிர்ந்திருப்பது உறுதியாகிறது. இதன் அடிப்படையில் நாம் ஆய்வுக்கு எடுத்துக்கொண்ட பதிவு தவறானது என்று உறுதி செய்யப்படுகிறது.
முடிவு:
அண்ணாமலை அலுவலகத்தில் நித்தியானந்தா புகைப்படம் இருந்ததாக பகிரப்படும் புகைப்படம் எடிட் செய்யப்பட்டது என்பதை ஃபேக்ட் கிரஸண்டோ தமிழ் உறுதி செய்துள்ளது. எனவே, நமது வாசகர்கள், இத்தகைய தவறான செய்தி, புகைப்படங்கள், வீடியோ போன்றவற்றை உறுதி செய்யாமல் மற்றவர்களுக்குப் பகிர வேண்டாம் என கேட்டுக் கொள்கிறோம். வாசகர்கள் தங்களுக்கு சந்தேகம் என்று தோன்றும் தகவல், பதிவு, புகைப்படம், வீடியோவை எங்களது வாட்ஸ் ஆப் எண்ணிற்கு (+91 9049053770) அனுப்பினால், அதுபற்றி ஆய்வு செய்து உண்மை விவரத்தை வெளியிடுகிறோம்.
சமூக ஊடகங்களில் எங்களை பின் தொடர விரும்பினால்…
Facebook I Twitter I Google News Channel

Title:அண்ணாமலை அலுவலகத்தில் மோடி, நட்டா படங்களுடன் நித்தியானந்தா புகைப்படமும் இருந்ததா?
Fact Check By: Chendur PandianResult: Altered
