FACT CHECK: நாயிடம் சில்மிஷம் செய்த பாஜக உறுப்பினர் என்று பகிரப்படும் வதந்தி!

அரசியல் சமூக ஊடகம் தமிழ்நாடு

நாயிடம் சில்மிஷம் செய்த தமிழகத்தைச் சேர்ந்த பா.ஜ.க உறுப்பினர் ராமகிருஷ்ணன் கைது செய்யப்பட்டார் என்று ஒரு நியூஸ் கார்டு சமூக ஊடகங்களில் பகிரப்பட்டு வருகிறது. இதன் நம்பகத்தன்மையை ஆய்வு செய்தோம்.

தகவலின் விவரம்:

நம்முடைய ஃபேக்ட் கிரஸண்டோ வாட்ஸ் அப் சாட்பாட் எண்ணுக்கு (9049053770) வாசகர் ஒருவர் நியூஸ் 7 தமிழ் நியூஸ் கார்டு ஒன்றை அனுப்பி இது உண்மையா என்று கேட்டிருந்தார்.

அதில், “நள்ளிரவில் குடிபோதையில் நாயிடம் சில்மிஷம் செய்த தமிழகத்தைச் சேர்ந்த பா.ஜ.க உறுப்பினர் ராமகிருஷ்ணன் என்பவர் கர்நாடக மாநிலம் பெல்காமில் கைது” என்று இருந்தது.

அசல் பதிவைக் காண: Facebook I Archive

சமூக ஊடகங்களில் இந்த புகைப்படம் பகிரப்படுகிறதா என்று தேடிய போது காரைக்கால் ஜமீல் என்பவர் 2020 அக்டோபர் 9ம் தேதி பகிர்ந்திருந்தார். பலரும் இந்த படத்தை ஷேர் செய்து வருகின்றனர். 

உண்மை அறிவோம்:

இந்த டிசைன் நியூஸ் கார்டை பல ஆண்டுகளுக்கு முன்பே நிறுத்திவிட்டதாக நியூஸ் 7 தரப்பில் நம்மிடம் முன்பே கூறியிருந்தனர். எனவே, இது போலியாக உருவாக்கப்பட்டதாக இருக்கலாம் என்று தெரிந்தது. ஒப்பீட்டுக்காக பழைய டிசைன் நியூஸ் கார்டை தேடி எடுத்தோம். அப்போது இரண்டுக்கும் தமிழ் ஃபாண்ட், டிசைன் என பல வித்தியாசங்கள் இருப்பதை காண முடிந்தது. 

நியூஸ் 7 தமிழ் வெளியிடும் நியூஸ் கார்டுகளில் தேதி மற்றும் நேரம் இடம் பெற்றிருக்கும். ஆனால், நாம் ஆய்வுக்கு எடுத்துக் கொண்ட நியூஸ் கார்டில் அந்த இரண்டும் அழிக்கப்பட்டு இருந்தது. பொய்யான தகவலை பரப்புகிறோம் என்பதால் அழித்திருக்கலாம் என்று தெரிகிறது.

அசல் பதிவைக் காண: Facebook I Archive

கர்நாடகாவில் பா.ஜ.க தொண்டர் கைது செய்யப்பட்டாரா, அது தொடர்பாக செய்தி ஏதும் வெளியாகி உள்ளதா என்று தேடிப் பார்த்தோம். அப்படி எந்த ஒரு தகவலும் நமக்கு கிடைக்கவில்லை.

நியூஸ் கார்டில் உள்ள நபரின் படத்தை மட்டும் தனியாக ரிவர்ஸ் இமேஜ் தேடலில் பதிவேற்றித் தேடினோம். அப்போது, இவர் 2017ம் ஆண்டு கேரளாவில் கொலை செய்யப்பட்ட ஆர்.எஸ்.எஸ் தொண்டர் ராஜேஷ் வடவாகோட் என்பது தெரிந்தது.

அசல் பதிவைக் காண: dailythanthi.com I Archive 1 I oneindia.com I Archive 2

2017ம் ஆண்டு இந்த கொலை கேரளாவில் பரபரப்பை ஏற்படுத்தியது. அப்போது இதுதொடர்பாக எல்லா ஊடங்களிலும் செய்தி வெளியாகி இருப்பதைக் காண முடிந்தது.

2017ம் ஆண்டு கேரளாவில் கொல்லப்பட்ட ஆர்.எஸ்.எஸ் பிரமுகரின் படத்தை வைத்து கர்நாடகாவில் நாயிடம் சில்மிஷம் செய்த தமிழக பா.ஜ.க உறுப்பினர் கைது, என்று தவறான தகவல் பகிர்ந்திருப்பது உறுதியாகிறது. இதன் அடிப்படையில் நாம் ஆய்வுக்கு எடுத்துக்கொண்ட ஃபேஸ்புக் பதிவு தவறானது என்று உறுதி செய்யப்படுகிறது.

முடிவு:

தகுந்த ஆதாரங்களுடன் குறிப்பிட்ட தகவல் தவறானது என்று ஃபேக்ட் கிரஸண்டோ தமிழ் உறுதி செய்துள்ளது. எனவே, நமது வாசகர்கள், இத்தகைய தவறான செய்தி, புகைப்படங்கள், வீடியோ போன்றவற்றை உறுதி செய்யாமல் மற்றவர்களுக்குப் பகிர வேண்டாம் என கேட்டுக் கொள்கிறோம். வாசகர்கள் தங்களுக்கு சந்தேகம் என்று தோன்றும் தகவல், பதிவு, புகைப்படம், வீடியோவை எங்களது வாட்ஸ் ஆப் எண்ணிற்கு (+91 9049053770) அனுப்பினால், அதுபற்றி ஆய்வு செய்து உண்மை விவரத்தை வெளியிடுகிறோம்.

Avatar

Title:நாயிடம் சில்மிஷம் செய்த பாஜக உறுப்பினர் என்று பகிரப்படும் வதந்தி!

Fact Check By: Chendur Pandian 

Result: False