
சின்ன சேலம் அருகே உள்ள தனியார் பள்ளியில் மாணவி உயிரிழந்த விவகாரத்தில் பள்ளி மீது எந்த தவறும் இல்லை என்று தமிழ்நாடு டிஜிபி சைலேந்திர பாபு கூறியதாக ஒரு நியூஸ் கார்டு சமூக ஊடகங்களில் பகிரப்பட்டு வருகிறது. அது பற்றி ஆய்வு செய்தோம்.
தகவலின் விவரம்:

உண்மைப் பதிவைக் காண: Twitter I Archive
சைலேந்திர பாபு சக்தி மெட்ரிக் மேல்நிலைப் பள்ளியில் இருக்கும் புகைப்படம் மற்றும் தந்தி டிவி வெளியிட்ட நியூஸ் கார்டுடன் ட்வீட் பதிவு வெளியிடப்பட்டுள்ளது. அந்த நியூஸ் கார்டில், “பள்ளி மீது எந்த தவறும் இல்லை. போராட்டக்காரர்களை வீடியோ காட்சிகளை வைத்து பின்னர் கைது நடவடிக்கை எடுக்கப்படும். பள்ளி மீது எந்த தவறும் இல்லை – டிஜிபி சைலேந்திரபாபு” என்று குறிப்பிடப்பட்டிருந்தது.
இந்த பதிவை Micheal Ram Vel என்ற ட்விட்டர் ஐடி கொண்ட நபர் 2022 ஜூலை 17ம் தேதி பதிவிட்டுள்ளார். ஃபேஸ்புக்கிலும் பலரும் இந்த நியூஸ் கார்டை பகிர்ந்து வருகின்றனர்.

உண்மை அறிவோம்:
கள்ளக்குறிச்சி மாவட்டம் சின்ன சேலம் அருகே உள்ள தனியார் பள்ளி ஒன்றில் மாணவி சர்ச்சைக்குரிய வகையில் உயிரிழந்தது அதிர்ச்சியை ஏற்படுத்தியது. மாணவி தற்கொலை செய்துகொண்டதாக பள்ளி தரப்பில் கூறப்பட்டது. இது தொடர்பாக போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். அதற்குள்ளாக அந்த மாணவி கொலை செய்யப்பட்டார் என்று சமூக ஊடகங்களில் வதந்தி பரவியது. திடீரென்று நூற்றுக்கணக்கானோர் கூடி பள்ளியைத் தாக்கினர்.
இந்த நிலையில் மாணவி மரணம் தொடர்பாக பள்ளி மீது எந்த தவறும் இல்லை என்று தமிழ்நாடு டிஜிபி சைலேந்திர பாபு கூறியதாக தந்தி டிவி நியூஸ் கார்டு பகிரப்பட்டு வருகிறது. இந்த நியூஸ் கார்டை தந்தி டிவி வெளியிட்டிருந்தது. டிஜிபி-யே இப்படிக் கூறிவிட்டார் என்ற தகவல் இன்னும் வன்முறையைத் தூண்டும் வகையில் இருப்பதாகக் குற்றச்சாட்டு எழுந்தது. பின்னர் அதை அகற்றிவிட்டது.
தந்தி டிவி அகற்றிய போதிலும் பலரும் இந்த நியூஸ் கார்டை தங்கள் சமூக ஊடக பக்கங்களிலிருந்து அகற்றவில்லை. இன்னும் பகிர்ந்துகொண்டுதான் உள்ளனர். எனவே, இது தொடர்பாக ஆய்வு செய்தோம். 2022 ஜூலை 17ம் தேதி டிஜிபி சைலேந்திரபாபு அளித்த பேட்டி அடிப்படையில் தந்தி டிவி இந்த நியூஸ் கார்டை வெளியிட்டிருந்தது. எனவே, அந்த பேட்டியைப் பார்த்தோம்.
மாணவி மரணம் தொடர்பாக இயற்கைக்கு மாறான சந்தேக மரண வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. மாணவி எழுதி வைத்த கடிதத்தில் படிக்க கடினமாக உள்ளது, இரண்டு ஆசிரியர்கள் தன்னை படிக்கத்தான் வற்புறுத்தினார்கள் என்று கூறியுள்ளார். போராடுகிறார்கள் என்பதற்காக ஆசிரிய பெருமக்களை உடனடியாக கைது செய்துவிட முடியாது. விசாரணை நடத்தி தவறு இருந்தால் அவர்கள் கைது செய்யப்படுவார்கள் என்று கூறினார்.
சன் நியூஸ் வெளியிட்டிருந்த டிஜிபி பேட்டி வீடியோவின் 9.50வது நிமிடத்தில் நிருபர் ஒருவர் கேள்வி எழுப்புகிறார். அந்த கேள்வி:, “ஏற்கனவே வழக்கு பதிவு செய்திருக்கின்றீர்கள். விசாரணையில் அந்த பள்ளி மீது தவறு எதுவும் வந்திருக்கிறதா?” என்று கேட்கிறார். அதற்கு டிஜிபி சைலேந்திரபாபு “இது வரைக்கும் வரலை. வந்தா உடனடியாக நடவடிக்கை எடுத்திருப்போம். கல்வித் துறைக்கும் சொல்லியிருப்போம்” என்கிறார்.
இதைத் தவறாகப் புரிந்துகொண்டு பள்ளி மீது எந்த தவறும் இல்லை என்று டிஜிபி சைலேந்திரபாபு கூறிவிட்டார் என்று தவறான தகவலை தந்தி டிவி பகிர்ந்துள்ளது. பிறகு, இந்த செய்தி வைரலாகப் பரவ தொடங்கியதால், வீண் சர்ச்சை ஏற்படக்கூடாது எனும் நோக்கில், இந்த நியூஸ் கார்டை தங்களது சமூக வலைதள பக்கங்களில் இருந்து தந்தி டிவி அகற்றிவிட்டது. இதனையே, அந்த டிவியின் டிஜிட்டல் பிரிவு நிர்வாகியும் உறுதி செய்தார்.
கூடுதல் ஆதாரத்திற்காக, தமிழ்நாடு டிஜிபி அலுவலகத்தை தொடர்பு கொண்டு பேசியபோது, அதிகாரி ஒருவர் தனது பெயரை வெளியிடக்கூடாது என்ற நிபந்தனையுடன் நமக்கு விளக்கம் அளித்தார். இதன்படி, ‘’டிஜிபி குறிப்பிட்ட பேட்டியில் பேசியதை பரபரப்பு காரணத்திற்காக, ஒரு தனியார் ஊடகம் தவறான அர்த்தத்தில் செய்தியாக வெளியிட்டது. பின்னர், என்ன நினைத்தார்களோ அதனை உடனடியாக நீக்கிவிட்டனர். இருந்தாலும், இன்றளவும் அந்த செய்தி சமூக வலைதளங்களில் வைரலாக பகிரப்பட்டு வருகிறது,’’ என்று கூறினார்.
சின்ன சேலம் அருகே உள்ள தனியார் பள்ளி நிர்வாகம் மீது எந்த தவறும் இல்லை என்று சைலேந்திர பாபு கூறவில்லை. வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது. விசாரணை நடந்து வருகிறது. விசாரணையின் முடிவில்தான் என்ன நடந்தது என்று தெரியவரும். தற்போது நடந்துள்ள விசாரணை வரை தவறு நடந்ததாக கண்டறியப்படவில்லை என்று கூறியுள்ளார். இதன் அடிப்படையில் சின்ன சேலம் பள்ளி மீது எந்த தவறும் இல்லை என்று சைலேந்திரபாபு கூறிவிட்டார் என்று பரவும் நியூஸ் கார்டு தவறானது என்று உறுதி செய்யப்படுகிறது.
முடிவு:
சின்ன சேலம் பள்ளி மாணவி மரணம் தொடர்பாக இதுவரை நடந்த விசாரணையில் பள்ளி மீது தவறு கண்டறியப்படவில்லை என்று டிஜிபி சைலேந்திரபாபு கூறியதை மாற்றி, சின்ன சேலம் பள்ளி மீது எந்த தவறு இல்லை என்று சைலேந்திரபாபு கூறியதாக பரவும் தகவல் தவறானது என்பதை தகுந்த ஆதாரங்கள் அடிப்படையில் ஃபேக்ட் கிரஸண்டோ தமிழ் உறுதி செய்துள்ளது. எனவே, நமது வாசகர்கள், இத்தகைய தவறான செய்தி, புகைப்படங்கள், வீடியோ போன்றவற்றை உறுதி செய்யாமல் மற்றவர்களுக்குப் பகிர வேண்டாம் என கேட்டுக் கொள்கிறோம். வாசகர்கள் தங்களுக்கு சந்தேகம் என்று தோன்றும் தகவல், பதிவு, புகைப்படம், வீடியோவை எங்களது வாட்ஸ் ஆப் எண்ணிற்கு (+91 9049053770) அனுப்பினால், அதுபற்றி ஆய்வு செய்து உண்மை விவரத்தை வெளியிடுகிறோம்.
சமூக ஊடகங்களில் எங்களை பின் தொடர விரும்பினால்…
Facebook I Twitter I Google News Channel

Title:சின்ன சேலம் தனியார் பள்ளி மீது எந்த தவறும் இல்லை என்று சைலேந்திர பாபு கூறினாரா?
Fact Check By: Chendur PandianResult: Misleading
