FACT CHECK: போராட்டத்தில் ஈடுபட்ட விவசாயிகளுக்கு மது வழங்கும் வீடியோவா இது?

அரசியல் | Politics இந்தியா | India சமூக ஊடகம் | Social

டெல்லியில் போராட்டத்தில் ஈடுபட்டுள்ள விவசாயிகளுக்கு மது வழங்கும் காட்சி என்று ஒரு வீடியோ சமூக ஊடகங்களில் வைரலாக பகிரப்பட்டு வருகிறது. இதன் நம்பகத்தன்மையை ஆய்வு செய்தோம்.

தகவலின் விவரம்:

அசல் பதிவைக் காண: Facebook I Archive 1 I Archive 2

காருக்குள் இருந்து ஒருவர் மது விநியோகம் செய்கிறார். பலரும் கிண்ணம், தட்டு போன்றவற்றில் அதை போட்டி போட்டு வாங்குகின்றனர். நிலைத் தகவலில், ” விவசாயிகள் போராட்டம் செய்து செய்து  களைப்பாக உள்ளதால் அவர்களுக்கு சுக்கு காப்பி வழங்கும் ஆதரவாளர்கள் 

இப்படிப் பட்ட விவசாயிகளுக்கு துணை நிற்பது ஒவ்வொரு குடிமகனின், தமிழனின் தலையாய கடமையாகும்” என்று குறிப்பிடப்பட்டுள்ளது.

இந்த பதிவை Tamil Nadu BJP Supporter தமிழ்நாடு பாஜக ஆதரவாளர்கள் என்ற ஃபேஸ்புக் பக்கத்தில் Suresh Ganesh என்பவர் 2021 பிப்ரவரி 8 அன்று பகிர்ந்துள்ளார். பலரும் இதை ஷேர் செய்து வருகின்றனர்.

உண்மை அறிவோம்:

மத்திய அரசு 2020 செப்டம்பரில் கொண்டு வந்த மூன்று வேளாண் சட்டங்களை எதிர்த்து பஞ்சாப், ஹரியானா மாநில விவசாயிகள் போராட்டம் நடத்தி வருகின்றனர். பல மாநில விவசாயிகளும் இந்த போராட்டத்துக்கு ஆதரவு தெரிவித்து வருகின்றனர். போராட்டத்தைக் கொச்சைப்படுத்தும் வகையில் அவ்வப்போது பல பதிவுகளை விஷமத்தமாக சிலர் கிளப்பி வருகின்றனர். அது பற்றி தொடர்ந்து நம்முடைய ஃபேக்ட் கிரஸண்டோ தமிழில் ஃபேக்ட் செக் கட்டுரை வெளியிட்டு வருகிறோம்.

இந்த நிலையில், போராட்டத்தில் ஈடுபட்ட விவசாயிகள் போராட்டத்தில் ஈடுபட்டுள்ள விவசாயிகளுக்கு மது வழங்கப்படுவதாகவும் அதை கிண்டலாக “சுக்கு காப்பி வழங்கப்படுகிறது, இதற்கு ஒவ்வொரு தமிழனும் ஆதரவு அளிக்க வேண்டும்” என்று குறிப்பிட்டு வீடியோ பதிவு பகிரப்பட்டுள்ளது. சிலர் விவசாயிகள் போராட்டத்தில் சரக்கு சப்ளை செய்யப்படுகிறது என்று குறிப்பிட்டும் இந்த வீடியோவை பதிவிட்டு வருகின்றனர்.

எனவே, இந்த வீடியோ காட்சிகளை InVID & WeVerify என்ற டூலை பயன்படுத்தி புகைப்படமாக மாற்றி yandex.com ரிவர்ஸ் இமேஜ் தேடலில் பதிவேற்றம் செய்து தேடினோம். அப்போது இந்த வீடியோ 2020 ஏப்ரல் மாதம் லாக் டவுன் இருந்த காலத்தில் பலரும் பதிவிட்டு வந்திருப்பதைக் காண முடிந்தது. லாக் டவுன் காலத்தில் மனித நேய சேவை என்று கிண்டல் செய்து இந்த வீடியோவை பலரும் பதிவிட்டிருந்தனர்.

அசல் பதிவைக் காண: Facebook I Archive 1 I Twitter I Archive 2

இந்த வீடியோ எங்கு, எப்போது எடுக்கப்பட்டது என்று எந்த தகவலும் கிடைக்கவில்லை. ஆனால், கொரோனா ஊரடங்கு காலம் என்று மட்டும் குறிப்பிட்டுள்ளனர். 

இந்த வீடியோ 2020 ஏப்ரல் மாதம் பதிவேற்றம் செய்யப்பட்டுள்ளது, கொரோனா ஊரடங்கு காலத்தில் மது விநியோகிக்கப்பட்டது என்று குறிப்பிடப்பட்டுள்ளது என்பதால் இதற்கும் விவசாயிகள் போராட்டத்துக்கும் தொடர்பில்லை என்பது உறுதியாகிறது. இதன் அடிப்படையில், வேளாண் சட்டத்தை எதிர்த்து நடந்து வரும் போராட்டத்தில் பங்கேற்ற விவசாயிகளுக்கு மது வழங்கப்படுகிறது என்று பகிரப்படும் தகவல் தவறானது என்று உறுதி செய்யப்படுகிறது.

முடிவு:

விவசாயிகள் போராட்டத்தில் மது வழங்கப்படுவதாக பகிரப்படும் வீடியோ 2020 ஏப்ரல் மாதம் ஊரடங்கு காலத்தில் எடுக்கப்பட்டது என்பதை தகுந்த ஆதாரங்களுடன் ஃபேக்ட் கிரஸண்டோ தமிழ் உறுதி செய்துள்ளது. எனவே, நமது வாசகர்கள், இத்தகைய தவறான செய்தி, புகைப்படங்கள், வீடியோ போன்றவற்றை உறுதி செய்யாமல் மற்றவர்களுக்குப் பகிர வேண்டாம் என கேட்டுக் கொள்கிறோம். வாசகர்கள் தங்களுக்கு சந்தேகம் என்று தோன்றும் தகவல், பதிவு, புகைப்படம், வீடியோவை எங்களது வாட்ஸ் ஆப் எண்ணிற்கு (+91 9049053770) அனுப்பினால், அதுபற்றி ஆய்வு செய்து உண்மை விவரத்தை வெளியிடுகிறோம்.

Avatar

Title:போராட்டத்தில் ஈடுபட்ட விவசாயிகளுக்கு மது வழங்கும் வீடியோவா இது?

Fact Check By: Chendur Pandian 

Result: False