
இந்திய தேசியக் கொடியை அவமரியாதை செய்தவனைக் கைது செய்யும் வரை விடாதீர்கள், இந்தியன் என்றால் ஷேர் செய்யுங்கள், என்ற வகையில் ஒரு பதிவு சமூக ஊடகங்களில் வைரலாக பகிரப்பட்டு வருகிறது. அது பற்றி ஆய்வு செய்தோம்.
தகலின் விவரம்:
அசல் பதிவைக் காண: Facebook I Archive
பாகிஸ்தான் கொடியை உடல் மீது போர்த்திக் கொண்டு, இந்திய தேசியக் கொடியை காலில் போட்டு மிதிக்கும் இளைஞர் ஒருவரின் புகைப்படம் பகிரப்பட்டுள்ளது. நிலைத் தகவலில், “இவனை கைது செய்யும் வரை share பண்ணுங்க விடவே விடாதீங்க, நான் ஒரு இந்தியன் share பண்ணி விட்டேன் நீங்க” என்று குறிப்பிடப்பட்டுள்ளது.
இந்த பதிவை அன்பான இரு உள்ளங்கள் என்ற ஃபேஸ்புக் பக்கம் 2018 ஆகஸ்ட் 23 அன்று பதிவிட்டுள்ளது. 2021 மார்ச் 11ம் தேதியிலும் கூட இதை பலரும் ஷேர் செய்து வருகின்றனர்.
உண்மை அறிவோம்:
இந்திய தேசியக் கொடியை அவமரியாதை செய்த இளைஞர் புகைப்படத்தைப் பகிர்ந்து “நான் இந்தியன் ஷேர் செய்துவிட்டேன், நீங்க…” என்று கேள்வி எழுப்பியதன் மூலம் இரண்டு ஆண்டுகளில் இரண்டரை லட்சத்துக்கும் அதிகமானவர்கள் இதை ஷேர் செய்துள்ளனர். இந்த இளைஞர் யார், இவர் கைது செய்யப்பட்டாரா என்று தெரிந்துகொள்ளும் நோக்கில் இதை ஆய்வு செய்தோம்.
படத்தை ரிவர்ஸ் இமேஜ் தேடலில் பதிவேற்றித் தேடிய போது, இந்த புகைப்படம் 2018ம் ஆண்டு சமூக ஊடகங்களில் வைரலாக பகிரப்பட்டிருப்பதும், இந்த குற்றச் செயலை செய்தவர் பீகார் மாநிலத்தைச் சார்ந்தவர் என்றும், அவரை போலீசார் கைது செய்ததாகவும் செய்திகள் கிடைத்தன.
அசல் பதிவைக் காண: siwanonline.com I Archive 1 I prabhatkhabar.com I Archive 2
இது தொடர்பாக தேடிய போது siwanonline.com என்ற தளத்தில் இது தொடர்பாக 2018 ஆகஸ்ட் 30ம் தேதி வெளியான செய்தி ஒன்று கிடைத்தது. அதில், “இந்திய தேசியக் கொடியை அவமரியாதை செய்த இளைஞர் கைது செய்யப்பட்டார். பீகார் மாநிலம் பஞ்சமுகி காவல் நிலைத்துக்குட்பட்ட பகுதியைச் சேர்ந்த முஹமது சாஜித் உசேன் என்பவர் கைது செய்யப்பட்டு, சிறையில் அடைக்கப்பட்டார்” என்று குறிப்பிடப்பட்டு இருந்தது.
இது தொடர்பாக போலீஸ் அதிகாரி பேசும் வீடியோ உள்ளிட்ட பல்வேறு செய்திகளும் நமக்குக் கிடைத்தன. மேலும், நம்முடைய ஃபேக்ட் கிரஸண்டோ மலையாளத்தில் இந்த நபர் ஒரு மலையாளி என்று வதந்தி பரவியபோது இவர் மலையாளி இல்லை, பீகாரைச் சேர்ந்தவர், கைது செய்யப்பட்டுள்ளார் என்று கட்டுரை வெளியாகி இருப்பதும் தெரிந்தது.
இந்த ஆதாரங்கள் அடிப்படையில் இந்திய தேசியக் கொடியை அவமரியாதை செய்த நபர் கைது செய்யப்பட்டுள்ளார். அவர் மீது பீகார் போலீசார் நடவடிக்கை எடுத்துள்ளனர் என்பது உறுதியாகிறது. எனவே, இந்த நபரைக் கைது செய்ய வேண்டும் என்று இனி பரப்புவது சரியாக இருக்காது.
முடிவு:
இந்திய தேசியக் கொடியை மிதித்து அவமரியாதை செய்த நபர் பீகார் மாநிலத்தைச் சார்ந்தவர் என்பதும் அவர் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார் என்பதும் தெரியவந்துள்ளது. இந்த சூழலில் அவர் கைது செய்யப்பட வேண்டும் என்று பதிவிடுவது சரியாக இருக்காது என்பதை ஃபேக்ட் கிரஸண்டோ தெளிவுபடுத்தியுள்ளது. எனவே, நமது வாசகர்கள், இத்தகைய தவறான செய்தி, புகைப்படங்கள், வீடியோ போன்றவற்றை உறுதி செய்யாமல் மற்றவர்களுக்குப் பகிர வேண்டாம் என கேட்டுக் கொள்கிறோம். வாசகர்கள் தங்களுக்கு சந்தேகம் என்று தோன்றும் தகவல், பதிவு, புகைப்படம், வீடியோவை எங்களது வாட்ஸ் ஆப் எண்ணிற்கு (+91 9049053770) அனுப்பினால், அதுபற்றி ஆய்வு செய்து உண்மை விவரத்தை வெளியிடுகிறோம்.

Title:இந்திய தேசியக் கொடியை அவமதித்த இளைஞர் கைது- முழு விவரம் இதோ!
Fact Check By: Chendur PandianResult: Explainer
