அகமதாபாத் குடிசைப்பகுதி துணியால் மறைக்கப்பட்டது என்று பரவும் படம்- உண்மை என்ன?

அரசியல் | Politics இந்தியா | India சமூக ஊடகம் | Social

இங்கிலாந்து பிரதமர் போரிஸ் ஜான்சன் இந்தியாவின் அகமதாபாத் நகருக்கு வந்த போது, குடிசைப்பகுதிகள் வெள்ளைத் துணியால் மறைக்கப்பட்டது என்று சில படங்கள் சமூக ஊடகங்களில் வைரலாக பகிரப்பட்டு வருகின்றன. அது பற்றி ஆய்வு செய்தோம்.

தகவலின் விவரம்:

உண்மைப் பதிவைக் காண: Facebook I Archive

சாலை நடைபாதை வெள்ளைத் துணியால் மறைக்கப்பட்டிருக்கும் புகைப்படம் பகிரப்பட்டுள்ளது. நிலைத் தகவலில், “17 ஸ்டேட்டை ஆளறோம்… யாராவது வந்தா துணியைப் போட்டு மூடறோம்.!” என்று குறிப்பிடப்பட்டிருந்தது. இந்த பதிவை இ. ஹைதர் அலி என்ற ஃபேஸ்புக் ஐடி கொண்டவர் 2022 ஏப்ரல் 25ம் தேதி பதிவிட்டுள்ளார். இந்த படத்தை பலரும் பகிர்ந்து வருகின்றனர்.

உண்மை அறிவோம்:

அமெரிக்க அதிபராக இருந்த ட்ரம்ப் குஜராத்துக்கு வந்த போது குடிசைப் பகுதிகளை மறைக்க சுவர் எழுப்பப்பட்டதாக செய்தி வெளியானது. தற்போது இங்கிலாந்து பிரதமர் போரிஸ் ஜான்சன் குஜராத் வந்த போது, குடிசை பகுதிகள் வெள்ளைத் துணியால் மறைக்கப்பட்டதாக செய்திகள் வெளியானது. முன்னணி ஊடகங்கத்தினர் அகமதாபாத்தில் குடிசைப் பகுதிகள் மறைக்கப்பட்டதாக வீடியோக்கள், புகைப்படங்களை வெளியிட்டிருந்தனர்.

Archive

“அமெரிக்க அதிபர் வரும்போதும் இங்கிலாந்து பிரதமர் வரும்போதும் வெள்ளை ஹிஜாப்பை பயன்படுத்தி நாட்டை மறைப்பதுதான் குஜராத் மாடல்” என்று குறிப்பிட்டு சிலர் இந்த படத்தை பகிர்ந்து வருகின்றனர். பார்க்கும் போது, இங்கிலாந்து அதிபர் வந்த போது எடுக்கப்பட்ட படம் போன்று பலரும் இதை பகிர்ந்து வருகின்றனர். எனவே, குஜராத்தில் குடிசைப்பகுதிகள் மறைக்கப்பட்டதா, இல்லையா என்ற ஆய்வுக்குள் நாம் செல்லவில்லை. டிரம்ப் வந்த போது, அல்லது இங்கிலாந்து பிரதமர் வந்த போது இந்த புகைப்படம் எடுக்கப்பட்டதா என்று மட்டுமே ஆய்வு செய்தோம்.

சாலையில் வைக்கப்பட்டிருந்த வெள்ளைத் துணியை விலக்கிவிட்டு மக்கள் பார்க்கும் புகைப்படம் எங்கு, எப்போது எடுக்கப்பட்டது என்று ஆய்வு செய்தோம். படத்தை ரிவர்ஸ் இமேஜ் தேடலில் பதிவேற்றித் தேடினோம். அப்போது அது 2021ம் ஆண்டு அகமதாபாத்தில் எடுக்கப்பட்டது என்று தெரியவந்தது. 2021ம் ஆண்டு மார்ச் மாதம் இந்தியாவில் 75வது சுதந்திர தினத்தைக் கொண்டாடும் விழாவைத் தொடங்கிவைக்கப் பிரதமர் மோடி அகமதாபாத் வந்த போது சபர்மதி ஆசிரமம் செல்லும் வழியில் உள்ள குடிசை பகுதிகள் மறைக்கப்பட்டதாக செய்திகள் கிடைத்தன.

Archive

வெளிநாட்டுத் தலைவர்கள் மட்டுமல்ல, பிரதமர் மோடி வரும் போது கூட குடிசைப் பகுதிகள் மறைக்கப்பட்டிருப்பது அதிர்ச்சியை ஏற்படுத்தியது. நாம் ஆய்வுக்கு எடுத்துக்கொண்ட பதிவில் 2021ம் ஆண்டு பிரதமர் மோடி வந்த போது என்று குறிப்பிட்டிருந்தால் குழப்பம் வந்திருக்காது. பலரும் போரிஸ் ஜான்சன் வந்த போது எடுத்த படம் என்று பகிர்ந்து வருகின்றனர். ஆனால், உண்மையில் இந்த புகைப்படம் போரிஸ் ஜான்சன் அல்லது டிரம்ப் வந்த போது எடுக்கப்பட்டது இல்லை என்பது உறுதியாகிறது.

முடிவு:

குஜராத்துக்கு யாராவது வந்தால் குடிசைப் பகுதிகள் மறைக்கப்படுகிறது என்று பகிரப்படும் படம் உண்மைதான், ஆனால் அது இங்கிலாந்து பிரதமர் வந்த போது எடுக்கப்பட்டது இல்லை. பிரதமர் மோடி வந்த போது மறைக்கப்பட்டது என்று சேர்த்து பதிவிட்டிருந்தால் சரியாக இருந்திருக்கும். எனவே, நமது வாசகர்கள், இத்தகைய தவறான செய்தி, புகைப்படங்கள், வீடியோ போன்றவற்றை உறுதி செய்யாமல் மற்றவர்களுக்குப் பகிர வேண்டாம் என கேட்டுக் கொள்கிறோம். வாசகர்கள் தங்களுக்கு சந்தேகம் என்று தோன்றும் தகவல், பதிவு, புகைப்படம், வீடியோவை எங்களது வாட்ஸ் ஆப் எண்ணிற்கு (+91 9049053770) அனுப்பினால், அதுபற்றி ஆய்வு செய்து உண்மை விவரத்தை வெளியிடுகிறோம்.

சமூக ஊடகங்களில் எங்களை பின் தொடர விரும்பினால்…

Facebook I Twitter I Google News Channel

Avatar

Title:அகமதாபாத் குடிசைப்பகுதி துணியால் மறைக்கப்பட்டது என்று பரவும் படம்- உண்மை என்ன?

Fact Check By: Chendur Pandian 

Result: Missing Context