
நாடார்கள் தமிழர்கள் அல்ல என்று எச்.ராஜா கூறியதாக ஒரு வீடியோ சமூக ஊடகங்களில் வைரலாக பகிரப்பட்டு வருகிறது. இது தொடர்பாக ஆய்வு செய்தோம்.
தகவலின் விவரம்:
உண்மைப் பதிவைக் காண: x.com I Archive
பா.ஜ.க மூத்த தலைவர் எச்.ராஜா பேசிய பேச்சின் ஒரு சில விநாடிகள் மட்டும் வெட்டி சமூக ஊடகங்களில் பதிவிடப்பட்டுள்ளது. அதில், “நாடார் சமுதாய மக்கள் தமிழர்கள் அல்ல” என்று கூறுகிறார். வீடியோ மீது, ‘நாடார் சமுதாய மக்கள் தமிழர்கள் அல்ல – எச்.ராஜா’ என்று குறிப்பிடப்பட்டுள்ளது. இந்த வீடியோவை பலரும் சமூக ஊடகங்களில் பதிவிட்டு வருகின்றனர்.
உண்மை அறிவோம்:
நாடார் சமுதாய மக்கள் தமிழர்கள் அல்ல என்று எச்.ராஜா கூறியதாக முன்பு ஒரு வீடியோ வைரலாக பரவியது. அது தொடர்பாக நம்முடைய ஃபேக்ட் கிரஸண்டோ தமிழில் ஆய்வு செய்த போது, கால்டுவெல் அப்படிக் கூறியதாக எச்.ராஜா பேசியது உறுதி செய்யப்பட்டது.
தற்போது, மீண்டும் நாடார்கள் தமிழர்கள் இல்லை என்று எச்.ராஜா பேசிவிட்டார் என்று பலரும் வேறு ஒரு வீடியோவை வைரலாக பகிர்ந்து வருகின்றனர். தமிழ்நாட்டில் அதிக அளவில் பாஜக-வுக்கு வாக்கு அளிக்கும் சமுதாயமாக நாடார் மக்கள் உள்ளனர். அப்படி இருக்கும் போது அவர்களுக்கு எதிராக பாஜக பேச வாய்ப்பில்லை. மேலும் முழு பேச்சையும் போடாமல், வெறும் 3-4 விநாடி மட்டுமே போட்டுள்ளனர். இதெல்லாம் இந்த வீடியோ தகவல் தவறானதாக இருக்கும் என்பதை உறுதி செய்கின்றன.
ஆதாரங்கள் அடிப்படையில் இதை உறுதி செய்ய ஆய்வு செய்தோம். வீடியோ காட்சியை கூகுள் லென்ஸ் தளத்தில் பதிவேற்றித் தேடிய போது நமக்கு எந்த முடிவும் கிடைக்கவில்லை. யூடியூபில் இந்த வாரத்தில் எச்.ராஜா பேசிய வீடியோ கிடைக்கிறதா என்று தேடிப் பார்த்தோம். அப்போது உலக பிராமணர்கள் நலசங்கத்தின் ஆண்டு விழா கூட்டத்தில் எச்.ராஜா பேசிய வீடியோ நமக்குக் கிடைத்தது. அதில் உள்ள காட்சியும் நாம் ஆய்வுக்கு எடுத்துக்கொண்ட வீடியோ காட்சியும் ஒத்துப்போனது. அந்த வீடியோவை பார்த்தோம்.
NewsTamil 24X7 இந்த பேச்சை நேரடி ஒளிபரப்பு செய்திருந்தது. வீடியோவின் 1:7:30-வது மணி நேரத்தில் நாம் ஆய்வுக்கு எடுத்துக்கொண்ட காட்சி வருகிறது. அதில், கால்டுவெல் தான் எழுதிய முதல் புத்தகமான சாணார்ஸ் ஆஃப் திருநெல்வேலி (உண்மையில் அந்த புத்தகத்தின் பெயர் The Tinnevelly Shanars) என்ற புத்தகத்தில் நாடார்கள் தமிழர்கள் அல்ல என்று கூறியுள்ளார் என்று பேசினார்.
நாடார்கள் தமிழர்கள் அல்ல என்று கால்டுவெல் கூறியதாக எச்.ராஜா பேசியிருந்தார். அதில் கால்டுவெல் என்பதை நீக்கிவிட்டு, எச்.ராஜாவே நேரடியாக கூறியது போன்று தோற்றம் அளிக்கும் வகையில் வீடியோவை எடிட் செய்து பதிவிட்டுள்ளனர். இதன் மூலம் நாம் ஆய்வுக்கு எடுத்துக்கொண்ட வீடியோ பதிவு தவறானது என்று உறுதி செய்யப்படுகிறது.
முடிவு:
நாடார்கள் பற்றி கால்டுவெல் எழுதியுள்ளதாக எச்.ராஜா கூறியதை, எச்.ராஜாவின் சொந்த கருத்து போன்று தவறாக பகிர்ந்திருப்பதை தகுந்த ஆதாரங்கள் அடிப்படையில் ஃபேக்ட் கிரஸண்டோ தமிழ் உறுதி செய்துள்ளது. எனவே, நமது வாசகர்கள், இத்தகைய தவறான செய்தி, புகைப்படங்கள், வீடியோ போன்றவற்றை உறுதி செய்யாமல் மற்றவர்களுக்குப் பகிர வேண்டாம் என கேட்டுக் கொள்கிறோம். வாசகர்கள் தங்களுக்கு சந்தேகம் என்று தோன்றும் தகவல், பதிவு, புகைப்படம், வீடியோவை எங்களது வாட்ஸ் ஆப் எண்ணிற்கு (+91 9049053770) அனுப்பினால், அதுபற்றி ஆய்வு செய்து உண்மை விவரத்தை வெளியிடுகிறோம்.
சமூக ஊடகங்களில் எங்களை பின் தொடர விரும்பினால்…
Facebook I X Post I Google News Channel I Instagram
