கோரமண்டல் ரயில் விபத்து; களத்தில் ஆர்.எஸ்.எஸ் என்று பரவும் பழைய புகைப்படம்!

அரசியல் | Politics அரசியல் சார்ந்தவை | Political இந்தியா | India சமூக ஊடகம் | Social

ஒடிசாவில் கோரமண்டல் ரயில் விபத்தில் சிக்கியவர்களுக்கு உதவ களமிறங்கிய ஆர்.எஸ்.எஸ் தொண்டர்கள் என்று ஒரு புகைப்படம் சமூக ஊடகங்களில் பகிரப்பட்டு வருகிறது. இது பற்றி ஆய்வு செய்தோம்.

தகவலின் விவரம்:

Tweet l Archive

ஒடிசா பாலாசோர் ரயில் விபத்தில் சிக்கியவர்களுக்கு உதவ களமிறங்கிய ஆர்.எஸ்.எஸ் ஸ்வயம் சேவகர்கள் என்று குறிப்பிட்டு புகைப்படம் பகிரப்பட்டுள்ளது. இதை SG Suryah @SuryahSG என்ற ட்விட்டர் ஐடி கொண்டவர் 2023 ஜூன் 2ம் தேதி பதிவிட்டுள்ளார். 

உண்மை அறிவோம்:

2023 ஜூன் 2ம் தேதி ஒடிசா மாநிலத்தில் சென்னை நோக்கி வந்துகொண்டிருந்த கோரமண்டல் ரயில் மிகப்பெரிய விபத்துக்குள்ளானது. விபத்தில் சிக்கியவர்களை மீட்கும் பணியில் ரயில்வே துறை ஈடுபட்டு வந்தது. ஆர்.எஸ்.எஸ் தொண்டர்களும் மீட்புப் பணியில் ஈடுபட்டதாக பாஜக, ஆர்.எஸ்.எஸ் கட்சியினர் கூறி வருகின்றனர். இது உண்மையாகக் கூட இருக்கலாம்.

ஆனால், மீட்புப் பணியில் ஈடுபட்ட காட்சி என்று பகிரப்படும் படம் சந்தேகத்தை ஏற்படுத்தியது. விபத்து ஏற்பட்டது இரவு நேரத்தில்… விடிவதற்கு முன்னதாக படம் பதிவிடப்பட்டுள்ளது. படம் பகல் வெளிச்சத்தில் எடுக்கப்பட்டுள்ளது. கமெண்ட் பகுதியில் பலரும் இது பழைய படம் என்று விமர்சித்திருந்தனர். ஆனாலும், பதிவாளர் இந்த புகைப்படத்தை அகற்றவில்லை.

Archive

இந்த புகைப்படத்தைக் கூகுள் ரிவர்ஸ் இமேஜ் தேடலில் பதிவேற்றித் தேடினோம். அப்போது, 2015ம் ஆண்டிலிருந்து இந்த புகைப்படம் சமூக ஊடகங்களில் பகிரப்பட்டு வந்திருப்பதைக் காண முடிந்தது. பிரண்ட்ஸ் ஆஃப் ஆர்.எஸ்.எஸ் என்ற ட்விட்டர் பக்கம் இந்த படத்தை 2018ம் ஆண்டு பகிர்ந்திருந்தது. அதில், ரயில் விபத்தில் ரயில்வே பாதுகாப்புப் படையினருடன் இணைந்து செயல்பட்ட போது என்று குறிப்பிட்டிருந்தனர். ஆனால், எப்போது, எங்கு எடுக்கப்பட்டது என்று அதில் குறிப்பிடப்படவில்லை.

உண்மைப் பதிவைக் காண: rss.org I Archive

தொடர்ந்து தேடிய போது கர்நாடக மாநிலம் ஆனேகல் (Anekal) என்ற இடத்தில் 2015ம் ஆண்டு ரயில் விபத்து நடந்த போது ஆர்.எஸ்.எஸ் தொண்டர்களும் மீட்புப் பணியில் ஈடுபட்டனர் என்று குறிப்பிட்டு ஆர்.எஸ்.எஸ் இணையதளத்தில் இந்த புகைப்படம் பகிரப்பட்டிருந்தது தெரிந்தது. இதன் மூலம் பழைய படத்தை எடுத்து வந்து ஒடிசா ரயில் விபத்தில் மீட்புப் பணியில் ஈடுபட்ட ஆர்.எஸ்.எஸ் தொண்டர்கள் என்று தவறாகப் பகிர்ந்திருப்பது உறுதியாகிறது. இதன் அடிப்படையில் நாம் ஆய்வுக்கு எடுத்துக்கொண்ட பதிவில் உள்ள படம் தவறானது என்று உறுதி செய்யப்படுகிறது.

முடிவு:

ஒடிசா ரயில் விபத்தில் ஆர்எஸ்எஸ் தொண்டர்கள் மீட்புப் பணியில் ஈடுபட்ட படம் என்று பகிரப்படும் புகைப்படம் 2015ம் ஆண்டு கர்நாடகாவில் நடந்த ரயில் விபத்தின் போது எடுக்கப்பட்டது என்பதை தகுந்த ஆதாரங்கள் அடிப்படையில் உறுதி செய்துள்ளோம். எனவே, நமது வாசகர்கள், இத்தகைய தவறான செய்தி, புகைப்படங்கள், வீடியோ போன்றவற்றை உறுதி செய்யாமல் மற்றவர்களுக்குப் பகிர வேண்டாம் என கேட்டுக் கொள்கிறோம். வாசகர்கள் தங்களுக்கு சந்தேகம் என்று தோன்றும் தகவல், பதிவு, புகைப்படம், வீடியோவை எங்களது வாட்ஸ் ஆப் எண்ணிற்கு (+91 9049053770) அனுப்பினால், அதுபற்றி ஆய்வு செய்து உண்மை விவரத்தை வெளியிடுகிறோம்.

சமூக ஊடகங்களில் எங்களை பின் தொடர விரும்பினால்…

Facebook I Twitter I Google News Channel

Avatar

Title:கோரமண்டல் ரயில் விபத்து; களத்தில் ஆர்.எஸ்.எஸ் என்று பரவும் பழைய புகைப்படம்!

Written By: Chendur Pandian 

Result: False