
நடிகர் சிவக்குமார் திரும்பவும் செல் போனை தட்டிவிட்டுள்ளார் என்று ஒரு வீடியோ சமூக ஊடகங்களில் வைரலாக பகிரப்பட்டு வருகிறது. அது பற்றி ஆய்வு செய்தோம்.
தகவலின் விவரம்:

உண்மைப் பதிவைக் காண: Twitter I Archive
நடிகர் சிவக்குமாருடன் செல்ஃபி எடுக்க ஒருவர் முயற்சி செய்கிறார். செல்போனை நடிகர் சிவக்குமார் தட்டிவிட்டு செல்லும் காட்சி வீடியோ பகிரப்பட்டுள்ளது. நிலைத் தகவலில், “திரும்பவும் செல்ல தட்டிவிட்டுருக்கான் செல்தட்டி” என்று குறிப்பிடப்பட்டுள்ளது. இந்த வீடியோவை சங்கி Mahesh M என்ற ட்விட்டர் ஐடி கொண்ட நபர் 2022 ஜூலை 25ம் தேதி பதிவிட்டுள்ளார்.

உண்மைப் பதிவைக் காண: Facebook I Archive
ஃபேஸ்புக்கில் அயோத்தியாபட்டினம் பாஜக என்ற ஐடி கொண்டவர் 2022 ஜூலை 25ம் தேதி இந்த வீடியோவை பதிவிட்டுள்ளார். இந்த வீடியோவை தற்போது பலரும் தங்கள் சமூக ஊடக பக்கங்களில் பதிவிட்டு வருகின்றனர்.
உண்மை அறிவோம்:
தன்னுடன் செல்ஃபி எடுக்க முயற்சி செய்பவர்களின் செல்போன்களை தட்டிவிட்டு சர்ச்சையில் சிக்கியவர் நடிகர் சிவக்குமார். பல ஆண்டுகளுக்கு முன்பு ரசிகர் ஒருவரின் செல்போனை தட்டிவிட்டது மிகப்பெரிய சர்ச்சையை ஏற்படுத்தியது. சமூக ஊடகங்களில் சிவக்குமாருக்கு எதிராக கருத்துக்கள் பரவின. அதைத் தொடர்ந்து ஏன் தட்டிவிட்டேன் என்று அவர் விளக்கம் ஒன்றை அளித்தார். மேலும், அந்த ரசிகருக்கு புது செல்போனும் வாங்கிக் கொடுத்தார். அதன் பிறகு மீண்டும் மற்றொரு நிகழ்வில் செல்போனை தட்டிவிட்டார்.
இந்த நிலையில், மீண்டும் நடிகர் சிவக்குமார் செல்போனை தட்டிவிட்டார் என்று பலரும் சமூக ஊடகங்களில் பதிவிட்டு வருகின்றனர். திரும்பவும் செல்போனை தட்டிவிட்டார் என்று 2022 ஜூலை 25ம் தேதி பதிவிட்டதன் மூலம், மீண்டும் அப்படி ஒரு சம்பவம் நடந்தது என்ற தோற்றத்தை உருவாக்கியுள்ளனர். பலரும் நடிகர் சிவக்குமாரை விமர்சித்துப் பதிவிட்டு வருகின்றனர். எனவே, இந்த சம்பவம் இப்போது நடந்ததா என்று ஆய்வு செய்தோம்.
நடிகர் சிவக்குமார் செல்போனை தட்டிவிட்டார் என்று யூடியூபில் தேடிய போது, நாம் ஆய்வுக்கு எடுத்துக்கொண்ட வீடியோ கிடைத்தது. ஆனால், அந்த வீடியோக்கள் எல்லாம் 2019ம் ஆண்டு பிப்ரவரி மாதம் பதிவேற்றம் செய்யப்பட்டிருப்பது தெரிந்தது. நடிகர் ராமராஜன் இல்லத் திருமண விழாவில் பங்கேற்ற போது, ஒருவர் செல்போனில் செல்ஃபி எடுக்க முயற்சி செய்த போது சிவக்குமார் அதை தட்டிவிட்டார் என்று அந்த செய்தியில் குறிப்பிட்டிருந்தனர்.
நாம் ஆய்வுக்கு எடுத்துக்கொண்ட வீடியோவில் நியூஸ் ஜெ லோகோ இருந்தது. எனவே, இந்த வீடியோவை இப்போது நியூஸ் ஜெ வெளியிட்டதா என்று பார்த்தோம். இந்த வீடியோவை அவர்கள் 2019ம் ஆண்டு பிப்ரவரி 7ம் தேதி பதிவிட்டுள்ளனர்.
2019ம் ஆண்டு நடந்த நிகழ்வின் வீடியோவை எடுத்து, 2022ம் ஆண்டில் “மீண்டும் செல்போனை தட்டினார் சிவக்குமார்” என்று சமூக ஊடகங்களில் பகிர்ந்துள்ளனர். இந்த சமூக ஊடகப் பதிவை பார்ப்பவர்களுக்கு, இப்போது (2022ம் ஆண்டு ஜூலையில்) மீண்டும் நடிகர் சிவக்குமார் செல்போனை தட்டிவிட்டுள்ளார் போல என்ற தவறான புரிதலே ஏற்படும். இந்த சம்பவம் எப்போது நடந்தது என்ற உண்மையை மறைத்து, தவறான எண்ணத்தை ஏற்படுத்த வேண்டும் என்ற நோக்கத்தில் விஷமத்தனமாக சமூக ஊடக பதிவை வெளியிட்டிருப்பது உறுதியாகிறது. இதன் அடிப்படையில் “மீண்டும் செல்போனை தட்டிவிட்ட சிவக்குமார்” என்று பரவும் பதிவுகள் தவறானவை என்று உறுதி செய்யப்படுகிறது.
முடிவு:
தற்போது மீண்டும் செல்ஃபி எடுக்க முயன்ற ரசிகரின் செல்போனை நடிகர் சிவக்குமார் தட்டிவிட்டார் என்று பரவும் வீடியோ 2019ம் ஆண்டு எடுக்கப்பட்டது என்பதை தகுந்த ஆதாரங்கள் அடிப்படையில் ஃபேக்ட் கிரஸண்டோ தமிழ் உறுதி செய்துள்ளது. எனவே, நமது வாசகர்கள், இத்தகைய தவறான செய்தி, புகைப்படங்கள், வீடியோ போன்றவற்றை உறுதி செய்யாமல் மற்றவர்களுக்குப் பகிர வேண்டாம் என கேட்டுக் கொள்கிறோம். வாசகர்கள் தங்களுக்கு சந்தேகம் என்று தோன்றும் தகவல், பதிவு, புகைப்படம், வீடியோவை எங்களது வாட்ஸ் ஆப் எண்ணிற்கு (+91 9049053770) அனுப்பினால், அதுபற்றி ஆய்வு செய்து உண்மை விவரத்தை வெளியிடுகிறோம்.
சமூக ஊடகங்களில் எங்களை பின் தொடர விரும்பினால்…
Facebook I Twitter I Google News Channel

Title:மீண்டும் செல்போனை தட்டிவிட்ட சிவக்குமார் என்று பரவும் வீடியோ- எப்போது எடுக்கப்பட்டது தெரியுமா?
Fact Check By: Chendur PandianResult: False
