
கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் உள்ள பள்ளியில் உயிரிழந்த ஶ்ரீமதி பள்ளி வளாகத்தில் நடந்த பேச்சுப் போட்டியில் பேசிய காட்சி என்று ஒரு வீடியோ சமூக ஊடகங்களில் வைரலாக பகிரப்பட்டு வருகிறது. அது பற்றி ஆய்வு செய்தோம்.
தகவலின் விவரம்:

உண்மைப் பதிவைக் காண: Facebook I Archive
கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் உள்ள தனியார் பள்ளியில் படித்து சந்தேகமான முறையில் உயிரிழந்த மாணவி ஶ்ரீமதி படத்துடன் வீடியோ ஒன்றை இணைத்து பதிவை உருவாக்கியுள்ளனர். வீடியோவில் “ஶ்ரீமதி பள்ளி வளாகத்தில் பேச்சு போட்டி” என்று குறிப்பிடப்பட்டிருந்தது. நிலைத் தகவலில், “ஸ்ரீமதி பள்ளியில் தமிழ் பேச்சு போட்டி !! அட பாவிகளா இந்தப் பிள்ளையடா தற்கொலை பண்ணிக்க போகுது !!” என்று குறிப்பிட்டப்பட்டிருந்தது.
இந்த வீடியோ பதிவை Joymusichd என்ற ஃபேஸ்புக் ஐடி கொண்ட நபர் 2022 ஜூலை 25ம் தேதி பதிவிட்டுள்ளார். இவரைப் போல பலரும் இந்த வீடியோவை தங்கள் ஃபேஸ்புக் பக்கத்தில் பதிவிட்டு வருகின்றனர்.

உண்மை அறிவோம்:
கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் உள்ள கனியாமூர் என்ற ஊரில் செயல்பட்டு வந்த தனியார்ப் பள்ளியில் படித்து வந்த ஶ்ரீமதி என்ற மாணவி மாடியிலிருந்து குதித்து உயிரிழந்தார் என்று கூறப்படுகிறது. மாணவியின் மரணத்தில் பல்வேறு சந்தேகங்கள் எழுப்பப்படுகின்றன. அந்த மாணவி மிக அழகாகத் தமிழில் சொற்பொழிவாற்றுகிறார் என்று சமூக ஊடகங்களில் வீடியோ பரப்பப்பட்டது.
காமராஜர் பற்றி அந்த மாணவி அழகாகப் பேசுவதாக பலரும் சமூக ஊடகங்களில் பகிர்ந்து வந்தனர். அந்த வீடியோவில் இருப்பது ஶ்ரீமதி இல்லை. வீடியோவில் இருக்கும் பெண்ணின் பெயர் பவதாரணி. இவர் கோவையில் உள்ள பள்ளியில் படித்து வருகிறார் என்று நாம் கட்டுரை வெளியிட்டிருந்தோம்.
தற்போது, மேலும் ஒரு வீடியோ சமூக ஊடகங்களில் வைரலாக பகிரப்பட்டு வருகிறது. இந்த வீடியோ பற்றி ஆய்வு செய்தோம். வீடியோ காட்சியில் உள்ள மாணவியைப் பார்க்க நாம் முன்பு ஆய்வு செய்த வீடியோவில் உள்ள பவதாரணி போலவே இருந்தது. வீடியோவில் மொழி பற்றி மாணவி பேசுகிறார். எனவே, கூகுளில் “மொழி பவதாரணி குணசேகர்” என்று டைப் செய்து தேடினோம். அப்போது, பவதாரணி குணசேகரன் என்ற ஃபேஸ்புக் ஐடி கொண்ட பக்கத்தில் இந்த வீடியோ கடந்த 2022 ஏப்ரல் 2ம் தேதி பதிவேற்றம் செய்யப்பட்டிருந்தது. அதில், “மூன்று வருடங்களுக்கு முன்பு நான் பேசிய காணொளி” என்று பவதாரணி குணசேகரன் குறிப்பிட்டிருந்தார்.
இந்த வீடியோ பதிவில் குறிப்பிடப்பட்ட தலைப்பை வைத்து கௌமார மடாலயம் யூடியூப் பக்கத்தில் தேடினோம். அப்போது 2022 மார்ச் 3ம் தேதி இந்த வீடியோவை கௌமார மடாலயம் யூடியூப் பக்கம் பதிவேற்றம் செய்திருந்தது. இதன் மூலம் ஶ்ரீமதி பேசியது என்று கூறப்படும் தகவல் தவறானது என்று உறுதியானது. இதன் அடிப்படையில் ஶ்ரீமதி பள்ளி வளாகத்தில் நடந்த பேச்சுப் போட்டியில் பேசிய காட்சி என்று பகிரப்படும் தகவல் தவறானது என்று உறுதி செய்யப்படுகிறது.
முடிவு:
கள்ளக்குறிச்சி மாணவி ஶ்ரீமதி பள்ளியில் நடந்த பேச்சுப் போட்டியில் பேசிய காட்சி என்று பரவும் வீடியோ கோவையைச் சார்ந்த பவதாரணி என்பருடையது என்பதை தகுந்த ஆதாரங்கள் அடிப்படையில் ஃபேக்ட் கிரஸண்டோ தமிழ் உறுதி செய்துள்ளது. எனவே, நமது வாசகர்கள், இத்தகைய தவறான செய்தி, புகைப்படங்கள், வீடியோ போன்றவற்றை உறுதி செய்யாமல் மற்றவர்களுக்குப் பகிர வேண்டாம் என கேட்டுக் கொள்கிறோம். வாசகர்கள் தங்களுக்கு சந்தேகம் என்று தோன்றும் தகவல், பதிவு, புகைப்படம், வீடியோவை எங்களது வாட்ஸ் ஆப் எண்ணிற்கு (+91 9049053770) அனுப்பினால், அதுபற்றி ஆய்வு செய்து உண்மை விவரத்தை வெளியிடுகிறோம்.
சமூக ஊடகங்களில் எங்களை பின் தொடர விரும்பினால்…
Facebook I Twitter I Google News Channel

Title:பேச்சுப் போட்டியில் பிச்சு உதறிய சின்ன சேலம் தனியார் பள்ளி மாணவி என்று பரவும் மற்றொரு வீடியோ!
Fact Check By: Chendur PandianResult: False
