
ஆதவ் அர்ஜுனாவிடம் இருந்து பெட்டி வாங்கிய மதிமுக பொதுச் செயலாளர் வைகோ என்று ஒரு புகைப்படம் சமூக ஊடகங்களில் பகிரப்பட்டு வருகிறது. இது தொடர்பாக ஆய்வு செய்தோம்.
தகவலின் விவரம்:

உண்மைப் பதிவைக் காண: Facebook I Archive
அமைச்சர் ஆதவ் அர்ஜுனாவிடமிருந்து மதிமுக பொதுச் செயலாளர் வைகோ பெட்டி வாங்குவது போன்று அல்லது கொடுப்பது போன்று புகைப்படம் ஒன்று ஃபேஸ்புக்கில் பதிவிடப்பட்டுள்ளது. நிலைத் தகவலில், “பெட்டி வாங்கிய கோபாலசாமி மவன்! அட பேதில போவான் விளக்குமாறு பிஞ்சிரும்” என்று குறிப்பிடப்பட்டிருந்தது. இந்த புகைப்படத்தைப் பலரும் சமூக ஊடகங்களில் பதிவிட்டு வருகின்றனர்.
உண்மை அறிவோம்:
தி.மு.க கூட்டணியிலிருந்து ம.தி.மு.க விலக முடிவெடுத்துள்ளதாகக் கூறப்படுகிறது. ஜூன் 27ம் தேதி நடைபெற உள்ள ம.தி.மு.க பொதுக் குழுக் கூட்டத்தில் கூட்டணி தொடர்பான முடிவு எடுக்கப்படும் என்று கூறப்படுகிறது. இந்த நிலையில் வைகோவைத் தமிழக அமைச்சர் ஆதவ் அர்ஜுனா சந்தித்துப் பேசினார். இதைத் தொடர்ந்து தவெக கூட்டணியில் ம.தி.மு.க இணையும் என்று கூறப்படுகிறது.
இந்த சந்திப்பின் போது வைகோவுக்கு பணப் பெட்டியை ஆதவ் அர்ஜுனா வழங்கியது போன்று புகைப்படம் சமூக ஊடகங்களில் வைரலாக பகிரப்பட்டு வருகிறது. பணம் கொடுக்கல் வாங்கல் எல்லாம் இவ்வளவு வெளிப்படையாக நடைபெறாது. மேலும், இப்படி ஒரு புகைப்படத்தை த.வெ.க தரப்பிலிருந்தோ ம.தி.மு.க தரப்பிலிருந்தோ வெளியிடவில்லை. எனவே, தி.மு.க கூட்டணியிலிருந்து விலகுவதால் அந்த கூட்டணியின் ஆதரவாளர்கள் இப்படி புகைப்படத்தை எடிட் செய்து வெளியிட்டிருக்கலாம். எனவே, இந்த புகைப்படம் எடிட் செய்யப்பட்டது என்பதை அறிய ஆய்வு செய்தோம்.

முதலில் ஆதவ் அர்ஜுனாவின் சமூக ஊடக பக்கங்களிலிருந்து வைகோ சந்திப்பு தொடர்பான பதிவை எடுத்தோம். அதில், புத்தகம் கொடுப்பது போன்று புகைப்படம் இருந்தது. இந்த புகைப்படத்தை எடிட் செய்து தவறாகப் பகிர்ந்திருப்பது தெரிந்தது.

நாம் ஆய்வுக்கு எடுத்துக்கொண்ட புகைப்படம் எடிட் செய்யப்பட்டது என்பதை உறுதி செய்ய ஏஐ புகைப்படங்களைக் கண்டறிய உதவும் இணையதளத்தில் இந்த புகைப்படத்தைப் பதிவேற்றி ஆய்வு செய்தோம். அந்த இணையதளம் இந்த புகைப்படம் ஏஐ மூலம் உருவாக்கப்பட்டது என்று உறுதி செய்தது. இதன் மூலம் நாம் ஆய்வுக்கு எடுத்துக்கொண்ட புகைப்படம் தவறானது என்று உறுதி செய்யப்படுகிறது.
முடிவு:
ஆதவ் அர்ஜுனாவிடமிருந்து வைகோ பணப் பெட்டி வாங்கியது போன்று சமூக ஊடகங்களில் பரவும் புகைப்படம் போலியானது. செயற்கை நுண்ணறிவு மூலம் உருவாக்கப்பட்டது என்பதை தகுந்த ஆதாரங்கள் அடிப்படையில் ஃபேக்ட் கிரஸண்டோ தமிழ் உறுதி செய்துள்ளது. எனவே, இத்தகைய தவறான செய்தி, புகைப்படங்கள், வீடியோ போன்றவற்றை உறுதி செய்யாமல் மற்றவர்களுக்குப் பகிர வேண்டாம் என கேட்டுக் கொள்கிறோம். வாசகர்கள் தங்களுக்கு சந்தேகம் என்று தோன்றும் தகவல், பதிவு, புகைப்படம், வீடியோவை எங்களது வாட்ஸ் ஆப் எண்ணிற்கு (+91 9049053770) அனுப்பினால், அதுபற்றி ஆய்வு செய்து உண்மை விவரத்தை வெளியிடுகிறோம்.
சமூக ஊடகங்களில் எங்களை பின் தொடர விரும்பினால்…
Facebook I X Post I Google News Channel I Instagram


