
திருப்பதி ஏழுமலையான் கோவிலுக்கு தமிழ்நாடு பாஜக தலைவர் அண்ணாமலை மது அருந்திவிட்டுச் சென்றதாகவும் பின்னர் மன்னிப்பு கடிதம் எழுதி கொடத்துவிட்டு சாமி தரிசனம் செய்தார் என்றும் ஒரு நியூஸ் கார்டு சமூக ஊடகங்களில் பகிரப்பட்டு வருகிறது. அது பற்றி ஆய்வு செய்தோம்.
தகவலின் விவரம்:

உண்மைப் பதிவைக் காண: Facebook I Archive
தமிழ்நாடு பாஜக தலைவர் அண்ணாமலை படத்துடன் கூடிய தினமலர் நியூஸ் கார்டு பகிரப்பட்டுள்ளது. அதில், “ஏழுமலையார் கோயிலுக்கு மது அருந்திவிட்டுச் சென்றாரா அண்ணாமலை? திருப்பதி ஏழுமலையான் கோயிலில் சுவாமி தரிசனத்திற்காக சென்ற தமிழக பா.ஜ.க தலைவர் அண்ணாமலை மது அருந்தியிருந்த காரணத்தால், அலிப்பிரி மலைப்பாதையில் கோயில் பாதுகாவலர்களால் இரண்டு மணி நேரம் காக்க வைக்கப்பட்டதாகத் தகவல்; பின்னர் மன்னிப்பு கடிதம் கொடுத்து சுவாமி தரிசனம் செய்துவிட்டு திரும்பியிருக்கிறார் அண்ணாமலை” என்று குறிப்பிடப்பட்டிருந்தது.
இந்த பதிவை எச்சூர் ம மகேஷ் என்ற ஃபேஸ்புக் ஐடி-யைக் கொண்டவர் 2023 ஜனவரி 6ம் தேதி பதிவிட்டிருந்தார்.
இதே போல் மிதிலா @mythila1977 என்ற ட்விட்டர் ஐடி கொண்டவர் இந்த நியூஸ் கார்டை பகிர்ந்திருந்தார். இவர்களைப் போல பலரும் இந்த நியூஸ் கார்டை சமூக ஊடகங்களில் பதிவிட்டு வருகின்றனர்.
உண்மை அறிவோம்:
தமிழ்நாடு பாஜக தலைவர் அண்ணாமலை ஊடகவியலாளர்களை தொடர்ந்து விமர்சித்து வருகிறார். சமீபத்தில் அவருக்கும் சில ஊடகவியலாளர்களுக்கும் இடையே வாய்த்தகராறு ஏற்பட்டது. இந்த நிலையில் அண்ணாமலையை விமர்சித்து சமூக ஊடகங்களில் போலியான நியூஸ் கார்டுகள் பகிரப்பட்டு வருகின்றன.
குறிப்பாக அண்ணாமலை ஒரு மிகப்பெரிய குடிகாரர் என்பது போல, மது அருந்திவிட்டு பிரஸ் மீட்க்கு வந்தார் என்று வதந்தி பரப்பப்பட்டது. அது போலி நியூஸ் கார்டு என்று ஃபேக்ட் கிரஸண்டோ தமிழில் கட்டுரை வெளியிட்டிருந்தோம். தற்போது திருப்பதிக்கு மது அருந்திவிட்டுச் சென்றதாகவும் அதனால் அவர் தடுத்து நிறுத்தப்பட்டதாகவும் நியூஸ் கார்டு பகிரப்பட்டு வருகிறது.
பா.ஜ.க ஆதரவு ஊடகமாக இருக்கும் தினமலரில் அண்ணாமலைக்கு எதிராகச் செய்தி வருவதற்கு வாய்ப்பு இல்லை. மேலும், இந்த நியூஸ் கார்டு வழக்கமாகத் தினமலர் வெளியிடும் நியூஸ் கார்டு போல இல்லை. அதன் வடிவமைப்பு மற்றும் தமிழ் ஃபாண்டில் வித்தியாசத்தைக் காண முடிந்தது. எனவே, இது போலியானதாக இருக்கலாம் என்று தெரிந்தது.

உண்மைப் பதிவைக் காண: Facebook
இதை உறுதி செய்துகொள்ள 2023 ஜனவரி 6ம் தேதி தினமலர் வெளியிட்ட நியூஸ் கார்டுகள் அனைத்தையும் பார்த்தோம். அதில், நாம் ஆய்வுக்கு எடுத்துக்கொண்டது போன்று எந்த நியூஸ் கார்டும் இல்லை. நாம் தேடிக் கொண்டிருக்கும் நேரத்தில் தினமலர் ஃபேஸ்புக் பக்கத்தில் இந்த நியூஸ் கார்டு “FAKE” என்று குறிப்பிட்டுப் பதிவு ஒன்று வெளியானது. அதில், “தினமலர் லோகோ பயன்படுத்தி மீண்டும் போலி பதிவு. தினமலருக்கு எதிராக செயல்பட்டுள்ள இந்த செயல் ஒரு சைபர் குற்றம். தவறு செய்தவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும்” என்று குறிப்பிடப்பட்டிருந்தது.
இதன் மூலம், தமிழ்நாடு பாஜக தலைவர் மது அருந்திவிட்டு திருப்பதி சென்றதாகப் பரவும் நியூஸ் கார்டு மற்றும் தகவல் தவறானது என்று உறுதி செய்யப்படுகிறது.
இதே போன்று ஜூனியர் விகடன் வெளியிட்டது போலவும் ஒரு நியூஸ் கார்டு பகிரப்பட்டு வருகிறது. அதில், ”அண்ணாமலைக்கு ஆதரவாக தமிழிசை; ஏன் தெரியுமா? திருப்பதி கோயிலுக்கு சென்ற பா.ஜ.க தலைவர் அண்ணாமலை மது அருந்தியிருந்த காரணத்தால் கோயில் பாதுகாவலர்களால் தடுத்து நிறுத்தப்பட்டு பின்பு புதுவையின் உயர் பொறுப்பில் உள்ள ஒருவரின் சமரசத்திற்கு பிறகே கோயிலுக்குள் அனுமதிக்கப்பட்டதாகவும் தகவல்!” என்று இருந்தது.

இதுவும் போலியானது என்பது பார்க்கும் போதே தெரிந்தது. இதை உறுதி செய்துகொள்ள விகடன் டிஜிட்டல் பிரிவு பொறுப்பாளருக்கு இந்த நியூஸ் கார்டை அனுப்பி இது உண்மையானதா என்று கேட்டோம். அவரும் ”இது போலியானது,” என்று உறுதி செய்தார்.
முடிவு:
தமிழ்நாடு பாஜக தலைவர் அண்ணாமலை மது அருந்திவிட்டு திருப்பதிக்கு சென்றார் என்று பரவும் நியூஸ் கார்டு போலியானது. எனவே, நமது வாசகர்கள், இத்தகைய தவறான செய்தி, புகைப்படங்கள், வீடியோ போன்றவற்றை உறுதி செய்யாமல் மற்றவர்களுக்குப் பகிர வேண்டாம் என கேட்டுக் கொள்கிறோம். வாசகர்கள் தங்களுக்கு சந்தேகம் என்று தோன்றும் தகவல், பதிவு, புகைப்படம், வீடியோவை எங்களது வாட்ஸ் ஆப் எண்ணிற்கு (+91 9049053770) அனுப்பினால், அதுபற்றி ஆய்வு செய்து உண்மை விவரத்தை வெளியிடுகிறோம்.
சமூக ஊடகங்களில் எங்களை பின் தொடர விரும்பினால்…
Facebook I Twitter I Google News Channel

Title:மது அருந்திவிட்டு திருப்பதிக்குச் சென்ற அண்ணாமலை என்று பரவும் நியூஸ் கார்டு உண்மையா?
Fact Check By: Chendur PandianResult: False
