உதயநிதி ஸ்டாலின் மன்னிப்பு கேட்கும் வரை அவர் வீட்டு முன்பு நிர்வாண கோலத்தில் போராட்டம் செய்வேன் என்று இந்து மக்கள் கட்சித் தலைவர் அர்ஜுன் சம்பத் கூறியதாக ஒரு நியூஸ் கார்டு சமூக ஊடகங்களில் பகிரப்பட்டு வருகிறது. இது பற்றி ஆய்வு செய்தோம்.

தகவலின் விவரம்:

உண்மைப் பதிவைக் காண: Facebook I Archive 1 I Archive 2

அர்ஜுன் சம்பத் புகைப்படத்துடன் கூடிய நியூஸ் கார்டு பகிரப்பட்டுள்ளது. அதில், "நிர்வாண போராட்டம்! உதயநிதி மன்னிப்பு கேட்கும் வரை அவர் வீட்டின் முன் ஒற்றைக்கால் தூக்கி நடராஜர் கோலத்தில் நிர்வாண போராட்டம் செய்வேன் - அர்ஜுன் சம்பத்" என்று குறிப்பிடப்பட்டிருந்தது. இந்த பதிவை Shali Mary என்ற ஃபேஸ்புக் ஐடி கொண்டவர் 2023 செப்டம்பர் 5ம் தேதி பதிவிட்டிருந்தார். இவரைப் போல பலரும் இதை தங்கள் சமூக ஊடக பக்கங்களில் பதிவிட்டு வருகின்றனர்.

உண்மை அறிவோம்:

சாகும் வரை நிர்வாண போராட்டம் அறிவித்தார் அர்ஜுன் சம்பத் என்று அவ்வப்போது சமூக ஊடகங்களில் வதந்தி பரப்பப்பட்டு வருகிறது. இது தொடர்பாக நம்முடைய ஃபேக்ட் கிரஸண்டோவிலேயே கட்டுரைகள் வெளியிட்டிருந்தோம். தற்போது ஏற்றத்தாழ்வு, தீண்டாமை உள்ளிட்டவற்றை ஆதரிக்கும் சனாதனத்தை அழிக்க வேண்டும் என்று உதயநிதி ஸ்டாலின் பேசியதற்கு எதிர்ப்பு தெரிவிக்கும் வகையில் நிர்வாண போராட்டத்தை அர்ஜுன் சம்பத் அறிவித்துள்ளார் என்று சமூக ஊடகங்களில் வதந்தி பரப்பப்பட்டு வருகிறது.

நாம் ஆய்வுக்கு எடுத்துக்கொண்ட நியூஸ் கார்டு உண்மையில் கதிர் இணைய ஊடகம் வெளியிடும் நியூஸ் கார்டு போல இல்லை. மேலும் சமீப காலமாக நியூஸ் கார்டுகளை வெளியிடுவதைக் கதிர் ஊடகம் குறைத்துக்கொண்ட நிலையில் இந்த நியூஸ் கார்டு போலியானது என்று நமக்கு தெரிந்தது. இதை ஆதாரங்கள் அடிப்படையில் உறுதி செய்ய ஆய்வு மேற்கொண்டோம்.

முதலில் இப்படி ஏதேனும் அறிவிப்பை அர்ஜுன் சம்பத் வெளியிட்டுள்ளாரா என்று அறிய இன்று (செப்டம்பர் 5, 2023) அன்று வெளியான செய்திகளை பார்த்தோம். அவர் அப்படிக் கூறியதாக எந்த செய்தியும் இல்லை. அவருடைய எக்ஸ் (ட்விட்டர்) பக்கத்தை பார்த்தோம். அதில் உதயநிதி, சேகர் பாபு ஆகியோர் பதவி விலக வேண்டும் என்று குறிப்பிட்டு தினமலர் வெளியிட்ட வீடியோவை பகிர்ந்திருந்தார். அந்த வீடியோவை பார்த்தோம். அதிலும் அவர் நிர்வாண போராட்டம் நடத்தப்படும் என்று கூறவில்லை. இதன் மூலம் இந்த தகவல் தவறானது என்று உறுதியானது.

அடுத்ததாக கதிர் என்ற இணைய ஊடகத்தின் ஃபேஸ்புக் பக்கத்தை பார்த்தோம். அதிலும், நாம் ஆய்வுக்கு எடுத்துக்கொண்டது போன்று எந்த நியூஸ் கார்டும் இல்லை. எனவே, இந்த நியூஸ் கார்டை கதிர் ஊடகத்தின் நிர்வாகிக்கு அனுப்பி இது உண்மையா என்று கேட்டோம். அவரும் இது போலியானது என்று உறுதி செய்தார்.

இந்த ஆதாரங்கள் அடிப்படையில் உதயநிதி ஸ்டாலின் மன்னிப்பு கேட்கும் வரை அவர் வீட்டு முன்பு நிர்வாண போராட்டம் நடத்தப்படும் என்று அர்ஜுன் சம்பத் கூறியதாக பரவும் நியூஸ் கார்டு போலியானது என்று உறுதி செய்யப்படுகிறது.

முடிவு:

உதயநிதி ஸ்டாலின் வீட்டின் முன்பு நிர்வாண போராட்டம் நடத்தப்போவதாக அர்ஜுன் சம்பத் கூறியதாக பரவும் நியூஸ் கார்டு போலியானது என்பதை தகுந்த ஆதாரங்கள் அடிப்படையில் ஃபேக்ட் கிரஸண்டோ தமிழ் உறுதி செய்துள்ளது. எனவே, நமது வாசகர்கள், இத்தகைய தவறான செய்தி, புகைப்படங்கள், வீடியோ போன்றவற்றை உறுதி செய்யாமல் மற்றவர்களுக்குப் பகிர வேண்டாம் என கேட்டுக் கொள்கிறோம். வாசகர்கள் தங்களுக்கு சந்தேகம் என்று தோன்றும் தகவல், பதிவு, புகைப்படம், வீடியோவை எங்களது வாட்ஸ் ஆப் எண்ணிற்கு (+91 9049053770) அனுப்பினால், அதுபற்றி ஆய்வு செய்து உண்மை விவரத்தை வெளியிடுகிறோம்.

சமூக ஊடகங்களில் எங்களை பின் தொடர விரும்பினால்…

Facebook I Twitter I Google News Channel

Avatar

Title:உதயநிதி மன்னிப்பு கேட்கும் வரை நிர்வாண போராட்டம் அறிவித்தாரா அர்ஜுன் சம்பத்?

Written By: Chendur Pandian

Result: False