
கோட்சேவுக்கு சிலை எழுப்பப்படும் என்று சென்னை மாநகராட்சி பா.ஜ.க கவுன்சிலர் உமா ஆனந்தன் கூறியதாக ஒரு நியூஸ் கார்டு சமூக ஊடகங்களில் பகிரப்பட்டு வருகிறது. இது பற்றி ஆய்வு செய்தோம்.
தகவலின் விவரம்:

உண்மைப் பதிவைக் காண: Facebook I Archive
கதிர் என்ற இணைய ஊடகம் வெளியிட்டது போன்ற நியூஸ் கார்டு ஃபேஸ்புக்கில் பகிரப்பட்டு வருகிறது. அதில், “பதவி ஏற்றதும் முதல் வேலை இது தான். மேற்கு மாம்பலத்தில், தேசபக்தர் கோட்சேவிற்கு சிலை எழுப்பப்படும். மேற்கு மாம்பலம் பாஜக வெற்றி வேட்பாளர் உமா ஆனந்தன் அறிவிப்பு” என்று குறிப்பிடப்பட்டு இருந்தது.
இந்த பதிவை Sudhakar Venkatapathy என்ற ஃபேஸ்புக் ஐடி கொண்டவர் 2022 பிப்ரவரி 23ம் தேதி பதிவிட்டுள்ளார். இவரைப் போல பலரும் இதை பகிர்ந்து வருகின்றனர்.

உண்மை அறிவோம்:
சென்னை மாநகராட்சி கவுன்சிலர் தேர்தலில் பா.ஜ.க சார்பில் போட்டியிட்டவர்களில் உமா ஆனந்தன் என்பவர் மட்டும் வெற்றி பெற்றார். தேசத் தந்தை காந்தியடிகளைக் கொலை செய்தவருக்கு ஆதரவாக உமா ஆனந்தன் முன்பு கருத்து கூறியிருந்தார். கவுன்சிலராக வெற்றிபெற்ற சூழலில் அவருடைய அந்த கருத்து சர்ச்சையை ஏற்படுத்தியது.
இந்த நிலையில் கவுன்சிலராக பதவி ஏற்கும் போது கோட்சேவுக்கு சிலை எழுப்பப்படும் என்று கவுன்சிலர் உமா ஆனந்தன் கூறியதாக ஒரு நியூஸ் கார்டு பகிரப்பட்டு வருகிறது. பலரும் இதை தங்கள் ஃபேஸ்புக் பக்கத்தில் பதிவிட்டு வருவதால் இது தொடர்பாக ஆய்வு செய்தோம்.
முதலில் கதிர் என்ற ஊடகம் இந்த நியூஸ் கார்டை வெளியிட்டதா என்று அறிய அதன் ஃபேஸ்புக் பக்கத்தைப் பார்வையிட்டோம். அப்போது கதிர் ஊடகமே இந்த நியூஸ் கார்டு போலியானது என்று பிப்ரவரி 24ம் தேதி பதிவு வெளியிட்டிருந்ததைக் காண முடிந்தது. இதன் மூலம் நாம் ஆய்வுக்கு எடுத்துக்கொண்ட நியூஸ் கார்டு போலியானது என்று உறுதியானது.
2022 மார்ச் முதல் வாரத்தில் நாம் ஆய்வுக்கு எடுத்துக்கொண்ட இந்த நியூஸ் கார்டு ஃபேஸ்புக்கில் மீண்டும் வரலாகப் பகிரப்பட்டது. எனவே, மீண்டும் ஒரு முறை இந்த நியூஸ் கார்டு போலியானது என்று கதிர் செய்திகள் விளக்கம் அளித்துள்ளது.
எனவே, மேற்கு மாம்பலத்தில் கோட்சேவுக்கு சிலை எழுப்பப்படும் என்று பாஜக கவுன்சிலர் உமா ஆனந்தன் கூறியதாகப் பகிரப்படும் நியூஸ் கார்டு போலியானது என்று உறுதி செய்யப்படுகிறது.
முடிவு:
கோட்சேவுக்கு சிலை அமைக்கப்படும் என்று பாஜக கவுன்சிலர் உமா ஆனந்தன் கூறியதாக பரவும் நியூஸ் கார்டு போலியானது என்பதை தகுந்த ஆதாரங்களுடன் ஃபேக்ட் கிரஸண்டோ உறுதி செய்துள்ளது. எனவே, நமது வாசகர்கள், இத்தகைய தவறான செய்தி, புகைப்படங்கள், வீடியோ போன்றவற்றை உறுதி செய்யாமல் மற்றவர்களுக்குப் பகிர வேண்டாம் என கேட்டுக் கொள்கிறோம். வாசகர்கள் தங்களுக்கு சந்தேகம் என்று தோன்றும் தகவல், பதிவு, புகைப்படம், வீடியோவை எங்களது வாட்ஸ் ஆப் எண்ணிற்கு (+91 9049053770) அனுப்பினால், அதுபற்றி ஆய்வு செய்து உண்மை விவரத்தை வெளியிடுகிறோம்.
சமூக ஊடகங்களில் எங்களை பின் தொடர விரும்பினால்…
Facebook I Twitter I Google News Channel

Title:கோட்சே சிலை அமைக்கப்படும் என்று பா.ஜ.க கவுன்சிலர் உமா கூறினாரா?
Fact Check By: Chendur PandianResult: False
