FACT CHECK: பிரான்சில் இஸ்லாமிய தாய் ஒருவர் தாக்கப்பட்டதாகப் பரவும் வதந்தி!

சமூக ஊடகம் | Social சமூகம் சர்வதேசம் | International

பிரான்ஸ் நாட்டில் குழந்தைகளுடன் சாலையில் நடந்து சென்ற பெண் தாக்கப்பட்டார் என்று ஒரு வீடியோ சமூக ஊடகங்களில் பகிரப்பட்டு வருகிறது. அதன் நம்பகத்தன்மையை ஆய்வு செய்தோம்.

தகவலின் விவரம்:

அசல் பதிவைக் காண: Facebook I Archive

சாலையில் நான் நான்கு குழந்தைகளுடன் சென்று கொண்டிருந்த புர்கா அணிந்த பெண்மணி ஒருவரை பின்னால் இருந்து ஒருவன் எட்டி மிதித்து தாக்கும் வீடியோ பகிரப்பட்டுள்ளது. நிலைத் தகவலில், “அமைதிகள்,பிரான்ஸ் மக்களை எந்த அளவுக்கு வெறுப்பின் உச்சத்துக்கே கொண்டு போயிருக்கானுங்க பாருங்க !!!” என்று கூறப்பட்டுள்ளது.

இந்த வீடியோவை அகண்ட பாரதம் என்ற ஃபேஸ்புக் பக்கம் 2020 நவம்பர் 5ம் தேதி வெளியிட்டுள்ளது. பலரும் இதை ஷேர் செய்து வருகின்றனர்.

உண்மை அறிவோம்:

பிரான்சில் ஆசிரியர் ஒருவர் படுகொலை செய்யப்பட்டதிலிருந்து பிரான்ஸ் அரசுக்கும் இஸ்லாமியர்களுக்கும் இடையே மோதல் போக்கு நிலவி வருகிறது. பிரான்ஸ் நாட்டுக்கு எதிராக விமர்சித்தும், பிரான்ஸ் நாட்டுக்கு ஆதரவாக இஸ்லாமியர்கள் பிரான்ஸில் செய்யும் அட்டகாசம் என்றும் தொடர்ந்து பல வீடியோக்கள் சமூக ஊடகங்களில் பகிரப்பட்டு வருகின்றன.

அந்த வகையில் நான்கு குழந்தைகளுடன் சாலையில் சென்று கொண்டிருந்த பெண் ஒருவர் மிகக் கொடூரமான முறையில் பின்னல் நின்று எட்டி மிதித்துத் தூக்கப்படும் வீடியோ பகிரப்பட்டுள்ளது. இந்த சம்பவம் பிரான்சில் நடந்தது என்று குறிப்பிடப்பட்டுள்ளது. எனவே, இது உண்மையா என்று ஆய்வு செய்தோம்.

வீடியோவை இன்விட் வி வெரிஃபை செயலி மூலமாக புகைப்படங்களாக மாற்றி ரிவர்ஸ் இமேஜ் தேடலில் பதிவேற்றித் தேடினோம். அப்போது இந்த வீடியோ பல மாதங்களுக்கு முன்பு இருந்தே சமூக ஊடகங்களில் பகிரப்பட்டு வருவதைக் காண முடிந்தது. அதில் இந்த வீடியோ Republic of Tatarstan-வில் எடுக்கப்பட்டது என்று கூறப்பட்டிருந்தது. தத்தாரிஸ்தான் எங்கே இருக்கிறது என்று பார்த்தோம். அப்போது அது ரஷ்யக் கூட்டமைப்பின் கீழ் உள்ள தன்னாட்சி பெற்ற பகுதி என்று தெரிந்தது. இந்த தன்னாட்சிப் பகுதியில் பெரும்பான்மை மக்கள் இஸ்லாமியர்கள் என்றும் தெரிய வந்தது.

அசல் பதிவைக் காண: 9gag.com I Archive

தொடர்ந்து தேடிய போது ரஷ்ய மொழியில் வெளியான சில செய்திகள் மற்றும் ட்வீட் பதிவுகள் நமக்குக் கிடைத்தன. 2020 ஜூலை 8ம் தேதி வெளியான செய்தி ஒன்றில், “தத்தாரிஸ்தானின் நிஷ்னெகாம்ஸ்கில் பூங்காவில் குழந்தைகளுடன் நடந்து சென்ற பெண் மீது அடையாளம் தெரியாத நபர் கொடூரமான முறையில் தாக்கினான். பல பெண்களை அவன் தாக்கியுள்ளான். தாக்குதல் நடத்திய நபர் கைது செய்யப்பட்டுள்ளான். அவன் பெண்கள் மீதான வெறுப்பு காரணமாக தாக்குதல் நடத்தியதாகத் தெரிவித்துள்ளான்” என்று கூறப்பட்டிருந்தது.

அசல் பதிவைக் காண: kp.ru I Archive

அவர்கள் வெளியிட்டிருந்த வீடியோவில் அந்த நபர் இஸ்லாமிய பெண்ணை தாக்குவதுடன் மேலும் பல பெண்களை தாக்கும் சிசிடிவி காட்சிகளை வெளியிட்டிருந்தனர். மேலும் வேறு பல ஊடகங்களும் கூட முழு வீடியோவை வெளியிட்டிருந்தன.

Archive

ரஷ்யாவின் தன்னாட்சி அதிகாரம் கொண்ட தத்தாரிஸ்தானில் நடந்த பழைய வீடியோவை எடுத்து தற்போது பிரான்ஸில் நடந்து வரும் சம்பவங்களுடன் தொடர்புபடுத்தி பதிவிட்டிருப்பது உறுதியாகிறது. இதன் அடிப்படையில் இஸ்லாமியப் பெண்ணை தாக்கிய பிரான்ஸ் பிரஜை என்று பகிரப்படும் தகவல் தவறானது என்று உறுதி செய்யப்படுகிறது.

முடிவு:

ரஷ்யாவில் எடுக்கப்பட்ட வீடியோவை பிரான்சில் நடந்ததாக கூறி தவறான தகவல் வெளியிட்டிருப்பதை தகுந்த ஆதாரங்களுடன் ஃபேக்ட் கிரஸண்டோ தமிழ் உறுதி செய்துள்ளது. எனவே, நமது வாசகர்கள், இத்தகைய தவறான செய்தி, புகைப்படங்கள், வீடியோ போன்றவற்றை உறுதி செய்யாமல் மற்றவர்களுக்குப் பகிர வேண்டாம் என கேட்டுக் கொள்கிறோம். வாசகர்கள் தங்களுக்கு சந்தேகம் என்று தோன்றும் தகவல், பதிவு, புகைப்படம், வீடியோவை எங்களது வாட்ஸ் ஆப் எண்ணிற்கு (+91 9049053770) அனுப்பினால், அதுபற்றி ஆய்வு செய்து உண்மை விவரத்தை வெளியிடுகிறோம்.

Avatar

Title:பிரான்சில் இஸ்லாமிய தாய் ஒருவர் தாக்கப்பட்டதாகப் பரவும் வதந்தி!

Fact Check By: Chendur Pandian 

Result: False