
தமிழகத்தின் முதல் பெண் பைலட் காவ்யா மாதவன் என்று ஒரு பெண்ணின் புகைப்படம் சமூக ஊடகங்களில் பகிரப்பட்டு வருகிறது. இது தொடர்பாக ஆய்வு செய்தோம்.
தகவலின் விவரம்:
உண்மைப் பதிவைக் காண: Facebook I Archive
பெண் பைலட் ஒருவரின் புகைப்படம் ஃபேஸ்புக்கில் பதிவிடப்பட்டுள்ளது. நிலைத்தகவலில், “தமிழகத்தின் முதல் பெண் பைலட் காவ்யா மாதவன். மதுரையை சேர்ந்தவர். வாழ்த்தலாமே !” என்று குறிப்பிடப்பட்டிருந்தது. இந்த பதிவை பலரும் பகிர்ந்து வருகின்றனர்.
உண்மை அறிவோம்:
பெண் ஒருவாின் புகைப்படத்தைப் பகிர்ந்து தமிழ்நாட்டின் முதல் பெண் விமான பைலட் என்று குறிப்பிட்டுள்ளனர். தென்னிந்தியாவிலேயே முதன் முறையாக விமானம் ஓட்ட லைசன்ஸ் பெற்றவர் என்று உஷா ரகுநாதன் என்பவரைப் பற்றி ஊடகங்களில் முன்பு செய்தி வெளியாகி இருந்தது. இப்படி இருக்க, புகைப்படத்தில் இருப்பவர் இளம் பெண்ணாக இருக்கவே சந்தேகத்தின் அடிப்படையில் ஆய்வு செய்தோம்.
படத்தைக் கூகுள் லென்ஸ் தளத்தில் பதிவேற்றித் தேடினோம். அப்போது, கேரள மாநிலத்திலிருந்து பைலட் பயிற்சி எடுத்து வரும் பெண் என்று இந்த பெண்ணின் புகைப்படத்தை வைத்து 2018ல் செய்தி வெளியாகி இருப்பதை காண முடிந்தது. அந்த செய்திகளில், இவர் கேரள மாநிலம் திருச்சூரைச் சேர்ந்த காயத்ரி சுப்ரான் என்று குறிப்பிட்டிருந்தனர்.
நம்முடைய மலையாளம் ஃபேக்ட் கிரஸண்டோவில் இருந்து கூட 2019ம் ஆண்டு இந்த பெண் தொடர்பாக ஃபேக்ட் செக் கட்டுரை வெளியாகி இருப்பது தெரியவந்தது. இதன் மூலம் இந்த பெண் தமிழகத்தைச் சார்ந்த முதல் விமானி என்று கூறுவது தவறு என்பது உறுதியானது.
உண்மைப் பதிவைக் காண: onmanorama.com I Archive 1 I nammudekodakara.com I Archive 2
அடுத்ததாக மதுரையைச் சேர்ந்த காவ்யா மாதவன் என்று யாராவது விமானம் ஓட்ட லைசன்ஸ் பெற்றுள்ளார்களா என்று தேடினோம். அப்போது 2018ம் ஆண்டு டைம்ஸ் ஆஃப் இந்தியா வெளியிட்டிருந்த செய்தியில் தமிழ்நாடு போக்குவரத்துக் கழக ஓட்டுநர் வி.ஆர்.ரவிக்குமார் என்பவரின் மகள் விமானம் ஓட்ட லைசன்ஸ் பெற்றார் என்று குறிப்பிடப்பட்டிருந்தது. அந்த பெண்ணின் பெயர் காவ்யா. ஆனால், நாம் ஆய்வுக்கு எடுத்துக்கொண்ட பதிவிலோ காவ்யா மாதவன் என்று தவறாகக் குறிப்பிடப்பட்டிருந்தது. இவை எல்லாம் இந்த பதிவு தவறானது என்பதை உறுதி செய்தன.
உண்மைப் பதிவைக் காண: indiatimes.com I Archive
தென்னிந்தியாவிலேயே முதன் முறையாக விமானம் ஓட்ட லைசன்ஸ் பெற்றவர் உஷா ரகுநாதன் என்று செய்திகள் கூறுகின்றன. அவர் தமிழகத்தைச் சார்ந்தவர். கேரளாவிலிருந்து விமானம் ஓட்ட பயிற்சி எடுத்துக்கொண்ட பெண்ணின் புகைப்படத்தை எடுத்து தமிழகத்தைச் சார்ந்தவர் என்று தவறாகப் பகிர்ந்துள்ளனர். காவ்யா என்ற மதுரையைச் சார்ந்த பெண் விமானம் ஓட்ட லைசன்ஸ் பெற்றுள்ளதாக 2018ம் ஆண்டு செய்தி வெளியாகி உள்ளது. ஆனால் இவர்தான் முதன் முதலில் லைசன்ஸ் பெற்ற தமிழக பெண் என்று எந்த உறுதியான தகவலும் இல்லை. மேலும் அவரது முழு பெயர் காவ்யா மாதவன் இல்லை. இந்த ஆதாரங்கள் அடிப்படையில் விமானம் ஓட்ட லைசன்ஸ் பெற்ற முதல் தமிழ்நாட்டுப் பெண் காவ்யா மாதவன் என்று பரவும் பதிவு தவறானது என்று உறுதி செய்யப்படுகிறது.
முடிவு:
தமிழ்நாட்டின் முதல் பெண் விமானி காவ்யா மாதவன் என்று பகிரப்படும் பெண் கேரளாவைச் சார்ந்த காயத்ரி சுப்ரான் என்பதை தகுந்த ஆதாரங்கள் அடிப்படையில் ஃபேக்ட் கிரஸண்டோ தமிழ் உறுதி செய்துள்ளது. எனவே, நமது வாசகர்கள், இத்தகைய தவறான செய்தி, புகைப்படங்கள், வீடியோ போன்றவற்றை உறுதி செய்யாமல் மற்றவர்களுக்குப் பகிர வேண்டாம் என கேட்டுக் கொள்கிறோம். வாசகர்கள் தங்களுக்கு சந்தேகம் என்று தோன்றும் தகவல், பதிவு, புகைப்படம், வீடியோவை எங்களது வாட்ஸ் ஆப் எண்ணிற்கு (+91 9049053770) அனுப்பினால், அதுபற்றி ஆய்வு செய்து உண்மை விவரத்தை வெளியிடுகிறோம்.
சமூக ஊடகங்களில் எங்களை பின் தொடர விரும்பினால்…
Facebook I Twitter I Google News Channel

Title:தமிழ்நாட்டின் முதல் பெண் பைலட் காவ்யா மாதவன் என்று பரவும் புகைப்படம் உண்மையா?
Written By: Chendur PandianResult: False
