
அனைத்து சாதியினரும் அர்ச்சகர் ஆகலாம் திட்டத்தின் கீழ், தி.மு.க ஆட்சியில் நியமிக்கப்பட்ட அர்ச்சகர் ஒருவர் சுவாமி சிலையை அவமரியாதை செய்தார் என்று ஒரு புகைப்படம் சமூக ஊடகங்களில் வைரலாக பகிரப்பட்டு வருகிறது. இது உண்மையா என்று ஆய்வு செய்தோம்.
தகவலின் விவரம்:

அசல் பதிவைக் காண: Facebook I Archive
சாமி சிலை மீது ஏறி நின்று அர்ச்சகர் ஒருவர் அலங்காரம் செய்வது போன்ற படம் பகிரப்பட்டுள்ளது. சுவாமி சிலை மீது அவர் ஏறி நிற்கும் காட்சி வட்டமிட்டுக் காட்டப்பட்டுள்ளது. நிலைத் தகவலில், “கண்டவனெல்லாம் அர்ச்சகராவதை ஏன் எதிர்த்தோம்னா இதுக்குதான்டா” என்று குறிப்பிடப்பட்டுள்ளது. இந்த பதிவை Svk Venkadesh என்பவர் 2021 ஆகஸ்ட் 19ம் தேதி பதிவிட்டுள்ளார்.
இந்துக்களை தூண்டும் வகையில் ஃபேஸ்புக், ட்விட்டர் என சமூக ஊடகங்களில் பலரும் இதை ஷேர் செய்து வருகின்றனர்.
உண்மை அறிவோம்:
தி.மு.க ஆட்சி வருவதற்கு முன்பு எடுக்கப்பட்ட பல புகைப்படங்களை தற்போது நடந்தது போன்று சமூக ஊடகங்களில் பரவுவது வாடிக்கையாக உள்ளது. அந்த வகையில் அனைத்து சாதியினரும் அர்ச்சகராகலாம் திட்டத்தின் கீழ் நியமிக்கப்பட்ட மற்ற சாதியைச் சார்ந்த கோவில் அர்ச்சகர் ஒருவர் சாமி சிலையை அவமரியாதை செய்துவிட்டார் என்ற வகையில் சமூக ஊடகங்களில் வதந்தி பரப்பப்பட்டு வருகிறது. தி.மு.க-வினருக்கு, அனைத்து சாதியினரும் அர்ச்சகராகலாம் திட்டத்தின் கீழ் நியமனம் செய்யப்பட்ட இந்துக்களுக்கு எதிராக தூண்டும் வகையில் பல கருத்துக்கள் சமூக ஊடகங்களில் பகிரப்பட்டு வருகின்றன.
கருடாழ்வார் மீது அமர்ந்திருக்கும் பெருமாள் சிலைக்கு அர்ச்சகர் ஒருவர் அலங்காரம் செய்வது போன்ற படம் பகிரப்பட்டுள்ளது. அலங்காரம் செய்வதற்காக கருடாழ்வார் மீது கால் வைத்து ஏறியிருப்பதை வட்டமிட்டுக் காட்டியுள்ளனர்.
அனைத்து சாதியினரும் அர்ச்சகர் ஆகலாம் என்ற திட்டத்தின் கீழ் கடந்த ஆகஸ்ட் 14ம் தேதி தான் தமிழ்நாடு அரசுப் பணி நியமனம் வழங்கியது. இந்த புகைப்படம் அதற்கு பிறகு எடுக்கப்பட்டதா என்று பார்த்தோம்.

அசல் பதிவைக் காண: news18.com I Archive
இந்த படம் எங்கு, எப்போது எடுக்கப்பட்டது என்பதை அறிய கூகுள் ரிவர்ஸ் இமேஜ் தேடலில் பதிவேற்றித் தேடினோம். அப்போது பலரும் இந்த படத்தை 2020ம் ஆண்டு மே மாதத்தில் இருந்து பகிர்ந்து வருவது தெரியவந்தது. அதாவது, தி.மு.க தமிழ்நாட்டில் ஆட்சிக்கு வருவதற்கு முன்பு இருந்தே இந்த படம் சமூக ஊடகங்களில் பகிரப்பட்டு வருவது தெரிந்தது.

அசல் பதிவைக் காண: Twitter I Archive
இந்த புகைப்படம் எங்கு, எப்போது எடுக்கப்பட்டது என்ற தகவல் நமக்குக் கிடைக்கவில்லை. ஆனால், “அர்ச்சனை செய்யும் சமுகத்தவர்களுக்கு கடவுள் இல்லை என்பது நன்றாக தெரியும். அதனால்தான் இப்படி செய்கிறார்கள். எனவே மக்களே கடவுள் என்பது கற்பனையே” என்ற வகையில் பதிவிடப்பட்டு வந்திருப்பது தெரியவந்தது. இந்த கருத்தை அப்படியே மாற்றி தற்போது மற்ற பிரிவினருக்கு எதிராக விஷமத்தனமான, வன்மமான தகவல் சமூக ஊடகங்களில் பகிரப்பட்டு வருவது உறுதியானது.
இதன் மூலம், இந்த புகைப்படம் எப்போது எடுக்கப்பட்டது என்பதை சரியாக கண்டறிய முடியவில்லை என்றாலும் தி.மு.க ஆட்சிக்கு வருவதற்கு முன்பு இருந்தே இந்த புகைப்படம் சமூக ஊடகங்களில் வைரலாக பகிரப்பட்டு வருவது உறுதி செய்யப்பட்டுள்ளது. இதன் மூலம் அனைத்து சாதியினரும் அர்ச்சகராகலாம் என்ற திட்டத்தின் படி அர்ச்சகராக நியமிக்கப்பட்டவராக இருக்க முடியாது என்பது உறுதியாகிறது. இதன் அடிப்படையில் நாம் ஆய்வுக்கு எடுத்துக்கொண்ட பதிவு தவறானது என்று உறுதி செய்யப்படுகிறது.
முடிவு:
அனைத்து சாதியினரும் அர்ச்சகராகலாம் திட்டத்தின் கீழ் நியமிக்கப்பட்ட வேறு சாதியை சார்ந்த அர்ச்சகர் சாமி சிலையை அவமரியாதை செய்தார் என்று பரவும் புகைப்படம் இந்த திட்டம் நடைமுறை வருவதற்கு ஓராண்டுக்கு முன்பே எடுக்கப்பட்டது என்பதை தகுந்த ஆதாரங்களுடன் ஃபேக்ட் கிரஸண்டோ தமிழ் உறுதி செய்துள்ளது. எனவே, நமது வாசகர்கள், இத்தகைய தவறான செய்தி, புகைப்படங்கள், வீடியோ போன்றவற்றை உறுதி செய்யாமல் மற்றவர்களுக்குப் பகிர வேண்டாம் என கேட்டுக் கொள்கிறோம். வாசகர்கள் தங்களுக்கு சந்தேகம் என்று தோன்றும் தகவல், பதிவு, புகைப்படம், வீடியோவை எங்களது வாட்ஸ் ஆப் எண்ணிற்கு (+91 9049053770) அனுப்பினால், அதுபற்றி ஆய்வு செய்து உண்மை விவரத்தை வெளியிடுகிறோம்.
சமூக ஊடகங்களில் எங்களை பின் தொடர விரும்பினால்…
Facebook I Twitter I Google News Channel

Title:தி.மு.க ஆட்சியில் நியமிக்கப்பட்ட அர்ச்சகர் சாமி சிலையை அவமதித்தார் என்று பரவும் பழைய படம்!
Fact Check By: Chendur PandianResult: False
