கொல்கத்தாவில் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டு கொலை செய்யப்பட்ட பெண் மருத்துவருக்கு மருத்துவமனை ஊழியர்கள் அஞ்சலி செலுத்தியதாக ஒரு வீடியோ சமூக ஊடகங்களில் பகிரப்பட்டு வருகிறது. இது தொடர்பாக ஆய்வு செய்தோம்.

தகவலின் விவரம்:

உண்மைப் பதிவைக் காண: x.com I Archive

மருத்துவமனையில் உயிரிழந்த ஒருவரின் உடலை வெளியோ கொண்டு வரும் போது மருத்துவமனை ஊழியர்கள் இரு பக்கத்திலும் நின்று கைகூப்பி அஞ்சலி செலுத்தும் வீடியோ சமூக ஊடகங்களில் பகிரப்பட்டு வருகிறது. நிலைத் தகவலில், "கொல்கத்தா மருத்துவர்" என்று ஆங்கிலத்தில் குறிப்பிடப்பட்டிருந்தது. இதை பலரும் பகிர்ந்து வருகின்றனர்.

உண்மை அறிவோம்:

சமீபத்தில் கொல்கத்தாவில் முதுநிலை பயிற்சி பெண் மருத்துவர் ஒருவர் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டு, படுகொலை செய்யப்பட்டார். இந்த சம்பவத்துக்கு நீதிகேட்டு கொல்கத்தாவில் மருத்துவர்கள், பொது மக்கள் போராடி வருகின்றனர். இந்த நிலையில் இறந்தவர் ஒருவரின் உடலை மருத்துவமனையில் வெளியே எடுத்து வருகின்றனர். மருத்துவ மனை ஊழியர்கள் அனைவரும் அவருக்கு அஞ்சலி செலுத்தும் வீடியோவை பலரும் சமூக ஊடகங்களில் பதிவிட்டு வருகின்றனர்.

இந்த வீடியோவை பார்க்கும் போது படுகொலை செய்யப்பட்ட கொல்கத்தா பெண் மருத்துவரின் உடலை எடுத்து வருவது போன்ற தோற்றம் ஏற்படும் வகையில் கொல்கத்தா மருத்துவர் என்று குறிப்பிடப்பட்டுள்ளது. உண்மையில் இந்த வீடியோ கொல்கத்தா பெண் மருத்துவர் உடலுக்கு சக மருத்துவர்கள், மருத்துவ பணியாளர்கள் அஞ்சலி செலுத்திய போது எடுக்கப்பட்டதா என்று அறிய ஆய்வு செய்தோம்.

வீடியோவில் Pinnacle Hospital என்று தெளிவாகத் தெரிகிறது. கொல்கத்தா மருத்துவர் உடல் அரசு மருத்துவமனையில் தான் உடற்கூறு ஆய்வுக்கு அனுப்பப்பட்டது. ஆனால் இது ஏதோ தனியார் மருத்துவமனை போல தெரிகிறது. Pinnacle என்ற மருத்துவமனைக்கு பெண் பயிற்சி மருத்துவரின் உடல் அனுப்பப்பட்டதா, அப்படி ஏதும் மருத்துவமனை கொல்கத்தாவில் உள்ளதா என்று தேடிப் பார்த்தோம். ஆனால் அப்படி ஒரு மருத்துவமனை விசாகப்பட்டினத்தில் இருப்பது தெரிந்தது. அதன் லோகோவும் நாம் ஆய்வுக்கு எடுத்துக்கொண்ட வீடியோவில் உள்ள மருத்துவமனை லோகோவும் ஒன்றாக இருந்தது. இதன் மூலம் இந்த வீடியோ விசாகப்பட்டினத்தில் உள்ள Pinnacle Hospital-ல் எடுக்கப்பட்டது என்பது தெளிவானது.

அடுத்ததாக இந்த வீடியோவை புகைப்படங்களாக மாற்றி கூகள் லென்ஸ் தளத்தில் பதிவேற்றித் தேடினோம். அப்போது இந்த வீடியோவுடன் நியூஸ் 18 இந்தியில் செய்தி ஒன்று கடந்த ஜூன் மாதமே வெளியாகி இருப்பதைக் காண முடிந்தது. இந்தியில் வெளியான அந்த செய்தியை மொழிமாற்றம் செய்து பார்த்தோம்.

உண்மைப் பதிவைக் காண: news18.com I Archive

அதில் ராஜஸ்தானைச் சார்ந்த ஜோலோர் என்ற பகுதியைச் சார்ந்த பிரவீன் மேத்தா என்பவரின் மகன் விபின் மேத்தா விசாகப்பட்டினத்தில் நடந்த விபத்தில் மூளைச்சாவு அடைந்தார். அவரது உடல் உறுப்புக்களை பிரவீன் மேதா, தானமாக வழங்கினார். இதைத் தொடர்ந்து விபின் மேத்தா சிகிச்சை பெற்று வந்த மருத்துவமனையின் 300 பணியாளர்கள் விபின் மேத்தா உடலுக்கு அஞ்சலி செலுத்தினர் என்று குறிப்பிடப்பட்டிருந்தது.

மேலும் விபத்து மே 29ம் தேதி நடந்தது என்றும், விபின் மேத்தா ஜூன் 1ம் தேதி இறந்தார் என்றும் அந்த செய்தியில் குறிப்பிடப்பட்டிருந்தது. கொல்கத்தா டாக்டர் படுகொலை சம்பவம் ஆகஸ்ட் மாதம் நடந்தது. அதற்கு கிட்டத்தட்ட இரண்டரை மாதங்களுக்கு முன்பு இந்த வீடியோ பதிவு வெளியாகி உள்ளது. இதன் மூலம் இந்த வீடியோவுக்கும் கொல்கத்தா பெண் மருத்துவர் சம்பவத்துக்கும் தொடர்பில்லை என்பது உறுதியாகிறது.

முடிவு:

கடந்த 2024 ஜூன் மாதம் விசாகப்பட்டினத்தில் மூளைச்சாவில் இறந்து உடல் உறுப்புக்களை தானம் செய்த ஒருவரின் உடலுக்கு மருத்துவ மனை ஊழியர்கள் அஞ்சலி செலுத்திய வீடியோவை கொல்கத்தாவில் பாலியல் வன்கொடுமை செய்து கொல்லப்பட்ட பெண் மருத்துவர் உடலுக்கு அஞ்சலி செலுத்துவதாக தவறான தகவல் சேர்த்து பகிர்ந்திருப்பதை தகுந்த ஆதாரங்கள் அடிப்படையில் ஃபேக்ட் கிரஸண்டோ தமிழ் உறுதி செய்துள்ளது. எனவே, நமது வாசகர்கள், இத்தகைய தவறான செய்தி, புகைப்படங்கள், வீடியோ போன்றவற்றை உறுதி செய்யாமல் மற்றவர்களுக்குப் பகிர வேண்டாம் என கேட்டுக் கொள்கிறோம். வாசகர்கள் தங்களுக்கு சந்தேகம் என்று தோன்றும் தகவல், பதிவு, புகைப்படம், வீடியோவை எங்களது வாட்ஸ் ஆப் எண்ணிற்கு (+91 9049053770) அனுப்பினால், அதுபற்றி ஆய்வு செய்து உண்மை விவரத்தை வெளியிடுகிறோம்.

சமூக ஊடகங்களில் எங்களை பின் தொடர விரும்பினால்…

Facebook I Twitter I Google News Channel

Avatar

Title:கொல்கத்தா பெண் மருத்துவர் உடலுக்கு இறுதி மரியாதை என்று பரவும் வீடியோ உண்மையா?

Fact Check By: Chendur Pandian

Result: False