FACT CHECK: எனது நரம்புகளை முறுக்கேற்றிய கங்கனா என்று டி.ஜெயக்குமார் கூறினாரா?

அரசியல் | Politics சமூக ஊடகம் | Social தமிழ்நாடு | Tamilnadu

தலைவி படத்தில் நடித்த கங்கனா ரணாவத் என் இளமை நரம்புகளை முறுக்கேற்றிவிட்டார் என்று முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் கூறியதாக ஒரு நியூஸ் கார்டு சமூக ஊடகங்களில் பகிரப்பட்டு வருகிறது. இது பற்றி ஆய்வு செய்தோம்.

தகவலின் விவரம்:

அசல் பதிவைக் காண: Facebook I Archive

முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் புகைப்படத்துடன் ஆனந்த விகடன் வெளியிட்டது போன்ற நியூஸ் கார்டு ஒன்று சமூக ஊடகங்களில் பகிரப்பட்டு வருகிறது. அதில், “தலைவி படம் பார்த்த பின் நானே எம்.ஜிஆர் வேடத்தில் நடித்திருக்கவேண்டும் என்று தோன்றியது. கங்கனா ரணாவத் என் இளமை நரம்புகளை முறுக்கேற்றிவிட்டார். – முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார்” என்று இருந்தது.

ஃபேஸ்புக்கில் இந்த பதிவை Gopi KO என்ற ஐடி-யைக் கொண்டவர் 2021 செப்டம்பர் 10ம் தேதி பதிவிட்டுள்ளார். பலரும் இதை ஷேர் செய்து வருகின்றனர்.

உண்மை அறிவோம்:

முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் என்ன சொன்னாலும், அதை பாலியல் ரீதியாக தொடர்புபடுத்தி சமூக ஊடகங்களில் வதந்தி பரப்புவது வாடிக்கையாக உள்ளது. தமிழக பட்ஜெட்டை அவர் விமர்சித்த போது கூட கடன் கேட்டு வந்த பெண்ணை கர்ப்பமாக்கி அனுப்பியது போல் இருந்தது என்று கூறினார் என்று வதந்தி பரப்பினர். அது போலியான நியூஸ் கார்டு என்று நம்முடைய ஃபேக்ட் கிரஸண்டோ தமிழில் கட்டுரை வெளியிட்டிருந்தோம்.

இந்த சூழலில், தலைவி படம் பார்த்துவிட்டு விஷமத்தனமாக விமர்சனம் செய்து போன்று நியூஸ் கார்டை பகிர்ந்து வருகின்றனர்.

பார்க்கும் போதே போலியானது என்று தெரிந்தாலும், இதையும் பலரும் ஷேர் செய்து வருகின்றனர். எனவே, இது பற்றி ஆய்வு செய்தோம். முதலில் ஆனந்த விகடன் வெளியிட்ட நியூஸ் கார்டை தேடி எடுத்தோம். அதில், “தலைவி திரைப்படத்தில் எம்.ஜி.ஆரை ஜெயலலிதா அவமதிப்பது போன்ற காட்சிகள் இடம்பெற்றுள்ளன. அதை உடனடியாக நீக்க வேண்டும் – முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார்” என்று இருந்தது. இந்த நியூஸ் கார்டை எடிட் செய்திருப்பது தெரிந்தது.

Archive

சமூக ஊடகங்களில் பரவி வரும் நியூஸ் கார்டு பற்றி ஆனந்த விகடன் நிர்வாக ஆசிரியர் தேவன் சார்லஸை தொடர்புகொண்டு கேட்டோம்.

“தலைவி படத்தில் இருந்து சில காட்சிகளை நீக்க வேண்டும் என்று அமைச்சர் ஜெயக்குமார் கூறியது தொடர்பாக நியூஸ் கார்டு வெளியிட்டிருந்தோம். அந்த நியூஸ் கார்டை எடிட் செய்து தவறான தகவல் சேர்த்து பரப்பியுள்ளனர்” என்றார்.

ஜெயக்குமார் தன்னுடைய பேட்டியில் இப்படி ஏதும் கருத்து தெரிவித்தாரா என்று அறிய அவருடைய பேட்டியை யூடியூபில் தேடி கண்டுபிடித்தோம். அந்த பேட்டியில் சர்ச்சைக்குரிய வகையில் அவர் எதுவும் கூறவில்லை என்பது உறுதியானது. 

இது தொடர்பாக முன்னாள் அமைச்சர் டி.ஜெயக்குமார் தரப்பைத் தொடர்புகொண்டு கேட்டோம். “இது போலியானது. முன்னாள் அமைச்சர் பெயரை கெடுக்கும் வகையில் தொடர்ந்து இது போன்ற வதந்திகள் பரப்பப்படுகின்றன” என்றனர். இதன் மூலம் முன்னாள் அமைச்சர் டி.ஜெயக்குமார் தொடர்பாக பரவும் நியூஸ் கார்டு போலியானது என்று உறுதி செய்யப்படுகிறது.

முடிவு:

தலைவி படம் பார்த்து இளமை நரம்புகள் முறுக்கேறிவிட்டது என்று முன்னாள் அமைச்சர் டி.ஜெயக்குமார் கூறியதாக பரவும் நியூஸ் கார்டுகள் போலியானவை  என்பதை தகுந்த ஆதாரங்களுடன்  ஃபேக்ட் கிரஸண்டோ தமிழ் உறுதி செய்துள்ளது. எனவே, நமது வாசகர்கள், இத்தகைய தவறான செய்தி, புகைப்படங்கள், வீடியோ போன்றவற்றை உறுதி செய்யாமல் மற்றவர்களுக்குப் பகிர வேண்டாம் என கேட்டுக் கொள்கிறோம். வாசகர்கள் தங்களுக்கு சந்தேகம் என்று தோன்றும் தகவல், பதிவு, புகைப்படம், வீடியோவை எங்களது வாட்ஸ் ஆப் எண்ணிற்கு (+91 9049053770) அனுப்பினால், அதுபற்றி ஆய்வு செய்து உண்மை விவரத்தை வெளியிடுகிறோம்.

சமூக ஊடகங்களில் எங்களை பின் தொடர விரும்பினால்…

Facebook I Twitter I Google News Channel

Avatar

Title:எனது நரம்புகளை முறுக்கேற்றிய கங்கனா என்று டி.ஜெயக்குமார் கூறினாரா?

Fact Check By: Chendur Pandian 

Result: False