
‘’இலங்கையில் பௌத்த மதத்தைச் சேர்ந்த 7 தீவிரவாதிகள் கைது,’’ என்ற தலைப்பில் ஒரு ஃபேஸ்புக் வைரல் பதிவை காண நேரிட்டது. இது உண்மையா என ஆய்வு செய்ய தீர்மானித்தோம். அதன் விவரம் இதோ உங்கள் பார்வைக்கு…
தகவலின் விவரம்:
இந்த பதிவை Pakkerali Mdali என்பவர் கடந்த ஏப்ரல் 22ம் தேதி வெளியிட்டிருக்கிறார். இதில், மேல்சட்டை இல்லாத இளைஞர் ஒருவரை இலங்கை போலீசார் அழைத்துச் செல்கின்றனர். அதேன் மேலே, ‘’இலங்கை குண்டுவெடிப்புக்கு முஸ்லீம்கள் காரணம் என சொன்ன மீடியா நாய்களே, இலங்கையில் பௌத்த மதத்தைச் சேர்ந்த 7 தீவிரவாதிகள் கைது, இலங்கை குண்டுவெடிப்பு, ஒருநாயை போலீஸ் பிடித்துவிட்டது, தெஹிவளை பகுதியில் குண்டுவைத்தபோது போலீசார் பிடித்தனர்,’’ என்று எழுதப்பட்டுள்ளது.
இது உண்மையா எனத் தெரியாமல், பலரும் இதை வைரலாக ஷேர் செய்து வருகின்றனர்.
உண்மை அறிவோம்:
இந்த பதிவு உண்மையில், Pakkerali Mdali என்பவர் சொந்தமாக வெளியிட்டதில்லை. ஏற்கனவே, Thomas Thomas என்பவர் வெளியிட்ட பதிவை ஸ்கிரின்ஷாட் எடுத்து இவர் பகிர்ந்துள்ளார். இந்த பதிவில், ஊடகத்தினரையும், மற்றவர்களையும் சராமரியாக வசைபாடியும் உள்ளனர். இதன்பேரில், தெஹிவளை பகுதியில் யாரேனும் இலங்கை குண்டுவெடிப்பு தொடர்பாக, போலீசாரால் கைது செய்யப்பட்டனரா என தேடிப் பார்த்தோம்.
அப்போது, நாம் ஆய்வுக்கு எடுத்துக் கொண்ட பதிவில் உள்ள அதே நபரின் புகைப்படம் தொடர்பான செய்தி ஆதாரங்கள் கிடைத்தன. ப்ளூம்பெர்க் டிக்டொக் மூலமாக தனக்குக் கிடைத்த வீடியோ ஆதாரத்தை ட்விட்டரில் பகிர்ந்திருந்தது.
Police in Sri Lanka appear to make at least one arrest Sunday near the New Tropical Inn guest house after a blast went off in the Dehiwala suburb of the capital pic.twitter.com/TrhjPkPsJU
— TicToc by Bloomberg (@tictoc) April 21, 2019
இதில், நாம் குறிப்பிடும் ஃபேஸ்புக் பதிவில் உள்ள அதே நபரை போலீசார் கைது செய்து, அழைத்துச் செல்கின்றனர். அவரை சில பொதுமக்கள் தாக்கவும் முயற்சிக்கின்றனர். இதையடுத்து, ஏப்ரல் 21ம் தேதியன்று, தெஹிவாளை பகுதியில் நடைபெற்ற சம்பவம் என்ன என்பது பற்றி மீண்டும் ட்விட்டரில் தேடினோம். அப்போது TheQuint வெளியிட்ட ட்விட்டர் பதிவு ஒன்றின் ஆதாரம் கிடைத்தது.
அதாவது, ஏப்ரல் 21ம் தேதி ஈஸ்டர் பண்டிகை நாளில், கொழும்பு உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் குண்டுவெடிப்பு நிகழ்ந்தது. இதனை முஸ்லீம் அடிப்படைவாத குழுவைச் சேர்ந்தவர்கள் நிகழ்த்தியுள்ளனர். இதன்போது, இலங்கையின் தெஹிவாளை பகுதியிலும் ஒரு குண்டுவெடிப்பு நிகழ்ந்துள்ளது. இதுதொடர்பாக, ஒருவரை போலீசார் கைது செய்திருக்கிறார்கள். அவர்தான், நாம் ஆய்வு செய்யும் புகைப்படத்தில் உள்ள நபர். ஆனால், அவர் உள்பட, இந்த குண்டுவெடிப்பு தொடர்பாக, கைது செய்யப்பட்ட யாரும் பவுத்த தீவிரவாதிகள் இல்லை. அனைவருமே, முஸ்லீம் அடிப்படைவாத சிந்தனை உள்ள தற்கொலைப்படையினர்தான். இதனை இலங்கை அரசே அறிவித்துள்ளது. மேலும், குண்டுவெடிப்பில் ஈடுபட்ட தீவிரவாத முஸ்லீம் அமைப்புகளை தடை செய்வதாக, அந்நாட்டு அதிபர் சிறிசேனா அறிவித்தும் உள்ளார். இதுபற்றிய செய்தியை படிக்க இங்கே கிளிக் செய்யவும்.
உண்மை இப்படியிருக்க இவர்கள், கைது செய்யப்பட்டவர்கள் அனைவரும் பவுத்த தீவிரவாதிகள் எனக் கூறியுள்ளனர். அனைவருமே, முஸ்லீம் தீவிரவாத இயக்கத்தைச் சேர்ந்தவர்கள்தான் என இலங்கை போலீசாரே உறுதி செய்துள்ளனர். இதுபற்றி தி இந்து வெளியிட்ட செய்தியை படிக்க இங்கே கிளிக் செய்யவும். ஆதாரப் படம் கீழே தரப்பட்டுள்ளது.
இதுவரை கிடைத்த ஆதாரங்களின்படி, நாம் ஆய்வுக்கு எடுத்துக் கொண்ட ஃபேஸ்புக் பதிவில் கூறப்படுவதுபோல, பவுத்த தீவிரவாதிகள் யாரும், சமீபத்தில் நிகழ்ந்த இலங்கை குண்டுவெடிப்பில் கைது செய்யப்படவில்லை. அனைவருமே, முஸ்லீம் அடிப்படைவாத குழுவைச் சேர்ந்தவர்கள் என உறுதி செய்யப்படுகிறது.
முடிவு:
உரிய ஆதாரங்களின் அடிப்படையில், நாம் ஆய்வுக்கு எடுத்துக் கொண்ட ஃபேஸ்புக் பதிவு தவறான ஒன்று என உறுதி செய்யப்படுகிறது. நமது வாசகர்கள் யாரும் இத்தகைய உறுதிப்படுத்தப்படாத செய்தி, புகைப்படம் மற்றும் வீடியோ எதையும் சமூக ஊடகங்களில் பகிர வேண்டாம் என கேட்டுக் கொள்கிறோம். அவ்வாறு நீங்கள் பகிர்ந்தது பற்றி யாரேனும் புகார் அளித்தால் உரிய சட்ட நடவடிக்கையை நீங்கள் சந்திக்க நேரிடும் என்பதை நினைவில் கொள்ளுங்கள்.

Title:இலங்கை குண்டுவெடிப்பில் 7 பவுத்த தீவிரவாதிகள் கைது?- உண்மை அறிவோம்!
Fact Check By: Parthiban SResult: False
