
‘’மாட்டுக்கறியை விட மலம் சுவையானது என்று அர்ஜூன் சம்பத் சொன்னார்,’’ எனும் தலைப்பில் ஃபேஸ்புக்கில் ஒரு தகவல் வைரலாகப் பரவி வருகிறது. இதன்பேரில் உண்மை கண்டறியும் சோதனை நடத்த தீர்மானித்தோம்.
தகவலின் விவரம்:

Abdul Haleem என்பவர் ஜூலை 14, 2019 அன்று இந்த ஃபேஸ்புக் பதிவை பகிர்ந்துள்ளார். இதில், ‘’மாட்டுக்கறியை விட மலம் சுவையானது – அர்ஜூன் சம்பத் (பயபுள்ள.. டேஸ்ட் பாத்துருக்கான்),’’ என எழுதியுள்ளார். இதனை உண்மை என நம்பி பலரும் வைரலாக ஷேர் செய்து வருகின்றனர்.
உண்மை அறிவோம்:
மேற்கண்ட ஃபேஸ்புக் பதிவில் கூறியுள்ளதுபோலவே, வேறு யாரேனும் ஃபேஸ்புக்கில் தகவல் பதிவிட்டுள்ளார்களா என தேடிப் பார்த்தோம். அப்போது நிறைய பேர் இதே தகவலை பகிர்ந்திருந்த விவரம் கிடைத்தது.

இதன்பேரில், கூகுள் சென்று ஏதேனும் செய்தி ஆதாரம் வெளியாகியுள்ளதா என தேடிப் பார்த்தோம். ஆனால், அப்படி எந்த செய்தியும் கிடைக்கவில்லை. அர்ஜூன் சம்பத் தொடர்பான சமீபத்தில் வெளியிடப்பட்ட செய்திகள் ஒவ்வொன்றும் வேறு வேறாக இருந்தன. ஆனால், அவர் இப்படி சொன்னதாக எதிலும் குறிப்பிடவில்லை. அர்ஜூன் சம்பத் பேட்டி ஒன்றை நியூஸ்18 ஜூன் 15ம் தேதி வெளியிட்டுள்ளது. அதனை படிக்க இங்கே கிளிக் செய்யவும்.

இப்படி எல்லாமே முரண்பாடான தகவலாக இருக்க, சர்ச்சைக்கு முற்றுப்புள்ளி வைக்கும் வகையில் நமது பத்திரிகை நண்பர் ஒருவரின் உதவியுடன் இந்து மக்கள் கட்சித் தலைவர் அர்ஜூன் சம்பத்தை தொடர்பு கொண்டு, இதுதொடர்பாக விளக்கம் கேட்டோம்.
இதற்குப் பதில் அளித்த அர்ஜூன் சம்பத், ‘’எந்த இடத்திலும் நான் இப்படி பேசவில்லை. இந்துக்கள் தெய்வமாக வணங்கும் பசு மாட்டின் இறைச்சியை சாப்பிடக்கூடாது என்றுதான் எதிர்த்து வருகிறேன். மாட்டிறைச்சி சாப்பிடுவோர் இதேபோல பன்றி உள்ளிட்டவற்றின் இறைச்சியையும் சாப்பிடலாமே என்று கூட சமீபத்தில் விமர்சித்திருக்கிறேன். ஆனால், எந்த இடத்திலும் மாட்டிறைச்சியை விட மலம் சுவையானது என்று நான் கூறவே இல்லை. என் மீது தவறான வகையில் இப்படி ஒரு வதந்தியை எதிர்க்கட்சியினர் சமூக ஊடகங்களில் திட்டமிட்டு பரப்பி வருவது வேதனை அளிக்கிறது,’’ என்று மறுப்பு தெரிவித்தார்.

எனவே, சம்பந்தப்பட்ட நபரே இதுபற்றி மறுப்பு கூறியுள்ளதால், நாம் ஆய்வுக்கு எடுத்துக் கொண்ட ஃபேஸ்புக் பதிவில் உள்ள தகவல் தவறான ஒன்று என சந்தேகமின்றி உறுதி செய்யப்படுகிறது.
முடிவு:
உரிய ஆதாரங்களின்படி மேற்கண்ட ஃபேஸ்புக் பதிவு தவறான ஒன்று என நிரூபிக்கப்பட்டுள்ளது. நமது வாசகர்கள் யாரும் இத்தகைய தவறான செய்தி, புகைப்படம் மற்றும் வீடியோ போன்றவற்றை உறுதிப்படுத்தாமல் மற்றவர்களுக்கு பகிர வேண்டாம் என கேட்டுக் கொள்கிறோம்.

Title:மாட்டுக்கறியை விட மலம் சுவையானது என்று அர்ஜூன் சம்பத் சொன்னாரா?
Fact Check By: Pankaj IyerResult: False
