பசு மாடு சொந்த பாலையே குடிப்பதால் கலியுகம் முடிவதாக அர்த்தமா?

சமூக ஊடகம் | Social மருத்துவம் I Medical

‘’ஒரு பசுமாடு தனது காம்பிலேயே பால் குடிப்பது, கலியுகம் முடிவதற்கான அறிகுறி,’’ என்று கூறி சமூக ஊடகங்களில் வைரலாக பகிரப்படும் வீடியோ ஒன்றை காண நேரிட்டது. இதன் நம்பகத்தன்மை பற்றி ஆராய தீர்மானித்தோம்.

தகவலின் விவரம்: 

Facebook Claim LinkArchived Link

இந்த ஃபேஸ்புக் பதிவில், மாடு ஒன்று தனது சொந்த மடியில் பால் குடிக்கும் வீடியோவை இணைத்து, அதன் மேலே ‘’சென்னையில் சாலையில் சென்ற பசு மாடு செய்த செயல் அனைவரையும் ஆழ்த்தியது, ஒரு மாடு தனது சொந்த பால் குடிக்க ஆரம்பிக்கும்போது அது கலியுகத்தின் கடைசி காலம் என்பதை புரிந்துகொள்ளுங்கள், இது சாஸ்திரங்களில் எழுதப்பட்டுள்ளது,’’ என்று எழுதியுள்ளனர்.

உண்மை அறிவோம்:
இவர்கள் சொல்வது போல, ஒரு பசு மாடு தனது சொந்த காம்பில் பால் குடிப்பது உலக அழிவின் அறிகுறியா என்று தகவல் தேட தொடங்கினோம். முதலில் ஒரு விசயம், இதுபோன்ற பல வீடியோக்கள் கூகுளில் காண கிடைக்கின்றன. அவை இந்தியா மட்டுமின்றி வெளிநாடுகளிலும் எடுக்கப்பட்டதாக உள்ளன.

Youtube Video Link 1Youtube Video Link 2

இதுபற்றி நமக்குத் தெரிந்த விவசாய நண்பர்களிடம் பேசியபோது, ‘’மடியில் பால் சுரப்பு அதிகமாகி, பால் கறக்கப்படாமல் நிறைந்து கனமாக இருக்கும்பட்சத்தில், பசு மாடு தனது பாலையே குடித்து விடும்,’’ எனக் குறிப்பிட்டனர். 

இது மட்டுமல்ல, இளம் வயதிலேயே கன்று போடும் பசு மாடுகளில், சொந்த பாலை குடிக்கும் பழக்கம் அதிகளவில் காணப்படுகிறது. பசு மாடு மட்டுமல்ல, எருமை மாடுகளிலும் இந்த வழக்கம் உள்ளதாகச் சொல்லப்படுகிறது. இதற்கு, மாலை நேரங்களில் அவற்றுக்கு ஏற்படும் பசி, மரபணு ரீதியான பிரச்னை போன்றவை முதன்மை காரணமாகக் கூறப்படுகிறது. 

Dairyfarmguide linkArchived Link

இத்தகைய பழக்கத்தை மாடுகள் பின்பற்ற என்ன காரணம் என்று கூறி US National Library of Medicine National Institutes of Health ஒரு விரிவான ஆராய்ச்சி நடத்தி அதன் முடிவுகளை 2016ம் ஆண்டில் சமர்ப்பித்துள்ளது. 

Ncbi.nlm.nih.gov Research Report LinkArchived Link

சொந்த பால் குடிப்பதை தடுத்து, பசுக்களுக்கு வளையம் போன்றவற்றை அணிவித்தாலும், அவை தன் வயதை ஒத்த மற்ற மாடுகளின் மடியில் சென்று பால் குடிக்கச் செய்கின்றன.

இதுவரை கிடைத்த ஆதாரங்களின்படி நமக்கு தெரியவந்த உண்மையின் விவரம்,

குட்டி நிலையில் இருந்து வளர் இளம் பருவத்திற்கு மாறும் சூழலில் சில பசுக்கள் இத்தகைய பால் குடிக்கும் பழக்கத்தை பின்பற்றுகின்றன. சிலவற்றில் பால் சுரப்பு அதிகமாக இருந்தால் இந்த பிரச்னை நேரிடுகிறது. சில பசுக்களில், மாலை நேரப் பசி மற்றும் மரபணு ரீதியாகவும் இத்தகைய பிரச்னையை காண நேரிடுகிறது. இதனால், மாடு வளர்ப்பவர்களுக்கு பால் கறக்கும்போது பற்றாக்குறை ஏற்படுகிறது. மேலும், சொந்த பாலை குடிப்பதால், மாடுகளுக்கு அவற்றின் மடியில் காயங்களும் ஏற்படுகிறது. இதுபற்றி அமெரிக்க அரசு அதிகாரப்பூர்வமான ஆய்வு நடத்தி முடிவை வெளியிட்டும் உள்ளது.

எனவே, ‘பசு மாடுகள் தங்களது சொந்த பாலை குடிப்பது, கலியுகம் முடிவதன் அறிகுறி; பேரழிவின் அறிகுறி’ என்று சொல்வது தவறாகும். இது பல ஆண்டுகளாக பசு மாடுகளிடையே காணப்படும் சாதாரண நிகழ்வாகும். இதன் பின்னணியில் அறிவியல் ரீதியான காரணமே உள்ளது. ஆனால், நகர்ப்புற மக்கள் பலர், பசு மாடு வளர்ப்பில் நேரடியாக ஈடுபடாதவர்கள் என்பதால், இதுபோன்ற சாஸ்திரம், சம்பிரதாய கதைகளை எளிதில் நம்பி ஏமாற நேரிடுகிறது. 

முடிவு:
உரிய ஆதாரங்களின்படி நாம் ஆய்வு மேற்கொண்ட பதிவில் தவறான தகவல் உள்ளதாக நிரூபித்துள்ளோம். நமது வாசகர்கள் பலரும் இத்தகைய தவறான செய்தி, புகைப்படம் மற்றும் வீடியோவை காண நேரிட்டால், எமது வாட்ஸ்ஆப் எண்ணிற்கு (+91 9049044263) தகவல் தெரிவியுங்கள்.

Avatar

Title:பசு மாடு சொந்த பாலையே குடிப்பதால் கலியுகம் முடிவதாக அர்த்தமா?

Fact Check By: Pankaj Iyer 

Result: False