ஏப்ரல் 15 முதல் ரயில் டிக்கெட் முன்பதிவு மீண்டும் தொடங்குகிறதா?

Coronavirus இந்தியா | India

‘’ஏப்ரல் 15 முதல் ரயில் டிக்கெட் முன்பதிவை மீண்டும் ரயில்வே தொடங்குகிறது,’’ என்ற தலைப்பில் பகிரப்படும் செய்தியை காண நேரிட்டது. இதன் நம்பகத்தன்மை பற்றி ஆய்வு மேற்கொள்ள தீர்மானித்தோம்.

தகவலின் விவரம்:

FB Claim LinkArchived Link 1GizBotTamil LinkArchived Link 2

இந்த செய்தியில் வரும் ஏப்ரல் 15ம் தேதி முதல் ரயில் பயணச்சீட்டிற்கான முன்பதிவு தொடங்க உள்ளதாகக் கூறியுள்ளனர். இதேபோல, விமான டிக்கெட் பதிவும் தொடங்கப்படுவதாகக் குறிப்பிட்டுள்ளனர். 

இதே செய்தியை, நியூஸ்18 தமிழ்நாடு ஊடகமும் வெளியிட்டிருக்கிறது. 

News18 Tamil Link Archived Link 

உண்மை அறிவோம்:
மேற்கண்ட செய்தி உண்மையா என்ற ஆதாரம் தேடியபோது, சமயம் தமிழ் வெளியிட்டிருந்த ஒரு செய்தியை கண்டோம். அதைப் படித்தபோது நமக்கு தலைசுற்றும் வகையில் இருந்தது. 

FB Post Link Archived Link 1Samayam Tamil LinkArchived Link 2

ஆம். சமயம் தமிழ் செய்தியில், முதலில் ரயில் டிக்கெட் முன்பதிவு வரும் ஏப்ரல் 15 முதல் தொடங்கப்படுகிறது எனக் கூறியுள்ளனர். இந்த தகவலை ரயில்வே நிர்வாகமே வெளியிட்டுள்ளதாகவும் குறிப்பிடுகின்றனர். ஆனால், இவர்கள் ஆதாரத்திற்காக செய்தியின் உள்ளே இணைத்துள்ள ரயில்வே ட்விட்டர் பதிவின் லிங்கை பார்த்தால், அதில் வேறு ஒரு தகவல் உள்ளது.

அதனைக் கூட கவனம் செலுத்தி படித்து பார்க்காமல், அசட்டையாக மொழிபெயர்ப்பு செய்து, செய்தியின் உள்ளே சேர்த்துள்ளனர். இதனை படிக்கும் வாசகர்கள் தேவையின்றி குழம்பும் நிலை உள்ளது. ஒரு முன்னணி ஊடகம் இப்படி அவசர கதியில் ஒரு செய்தி வெளியிடுவார்களா என்றும் நமக்குள் கேள்வி எழுகிறது. ஆதார ஸ்கிரின்ஷாட் கீழே தரப்பட்டுள்ளது. 

அதாவது, ‘’ரயில் டிக்கெட் முன்பதிவு ஏப்ரல் 15 முதல் மீண்டும் தொடங்குவதாகக் கூறப்படும் தகவல் தவறு. டிக்கெட் முன்பதிவு ஒருபோதும் நிறுத்தப்படவில்லை. டிக்கெட் முன்பதிவு என்பது ஒருவர் பயணம் மேற்கொள்வதற்கு 120 நாளுக்கு முன்பிருந்தே செய்யப்படக்கூடியதாகும். கொரோனா வைரஸ் ஊரடங்கு காரணமாக, மார்ச் 24 முதல் ஏப்ரல் 14 வரையான காலத்தில் மட்டுமே முன்பதிவு செய்யப்பட்ட டிக்கெட்கள் ரத்து செய்யப்பட்டுள்ளன. ஏப்ரல் 15ம் தேதிக்கான டிக்கெட் முன்பதிவு ஏற்கனவே நடைமுறையில்தான் உள்ளது,’’ என்று   ரயில்வே அமைச்சகம் வெளியிட்ட செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளது.

Archived Link

இதன்படி, ‘’ரயில் டிக்கெட் முன்பதிவு நடைமுறை எப்போதும் போலவே உள்ளது. அதனை தற்காலிகமாக ரயில்வே நிர்வாகம் நிறுத்தி வைக்கவில்லை. கொரோனா ஊரடங்கு காரணமாக, மார்ச் 24 முதல் ஏப்ரல் 14 வரையான காலத்திற்கு மட்டும் முன்பதிவு செய்த டிக்கெட்கள் மட்டுமே ரத்து செய்யப்பட்டிருக்கின்றன. ஏப்ரல் 15 மற்றும் அதற்கு பிந்தைய நாட்களுக்கான டிக்கெட் முன்பதிவு ஏற்கனவே நடைமுறையில்தான் உள்ளது,’’ என்று தெளிவாகிறது.

இந்த அர்த்தம் புரியாமல் மேற்கண்ட ஊடகங்கள் முழு விவரத்தை வெளியிடாமல் அவசர கதியில் செய்தி வெளியிட்டுள்ளதாக தெளிவாகிறது.

இதே செய்தியை புதிய தலைமுறை ஊடகம் எப்படி வெளியிட்டுள்ளது என்பதை கீழே பாருங்கள். 

Puthiyathalaimurai News Link Archived Link

இதுதவிர, விமான பயணத்திற்கான டிக்கெட் முன்பதிவு தற்காலிகமாக நிறுத்தி வைக்கப்பட்டதா, எப்போது தொடங்குகிறது, என தகவல் தேடினோம். அப்போது விமான டிக்கெட் முன்பதிவு ஏப்ரல் 14க்குப் பின் வழக்கம் போல தொடங்கும் என்றும், ஒருவேளை கொரோனா ஊரடங்கு நீட்டிக்கப்பட்டால், முன்பதிவு ரத்து செய்யப்படும் என்றும் விமானப் போக்குவரத்து அமைச்சகம் கூறியுள்ளதாக, தெரியவந்தது. எனவே, இந்த செய்தியிலும் முழு உண்மை இல்லை என்றாகிறது.

TOI Link Archived Link 

எனவே, ரயில் டிக்கெட் முன்பதிவு எப்போதும் போல தொடர்கிறது. கொரோனா ஊரடங்கு காரணமாக பயணிகள் ரயில் சேவைகள் மட்டுமே நிறுத்தப்பட்டுள்ளன. அதேசமயம், விமான டிக்கெட் முன்பதிவும் கொரோனா ஊரடங்கு முடிவுக்கு வந்தால் மட்டுமே தொடரப்படும்.     இதுவரை கிடைத்த ஆதாரங்களின் அடிப்படையில், நாம் ஆய்வு மேற்கொண்ட செய்தியில், ‘விமானம் மற்றும் ரயில் டிக்கெட் முன்பதிவு பற்றிய தகவலில் முழு உண்மை இல்லை,’ என்று தெளிவாகிறது.

முடிவு:
உரிய ஆதாரங்களின்படி, நாம் ஆய்வு மேற்கொண்ட செய்திகளில், முழு உண்மை இல்லை என்று நிரூபித்துள்ளோம். நமது வாசகர்கள் இத்தகைய குழப்பமான செய்தி, புகைப்படம் மற்றும் வீடியோவை மற்றவர்களுக்கு பகிர வேண்டாம் என கேட்டுக் கொள்கிறோம். 

Avatar

Title:ஏப்ரல் 15 முதல் ரயில் டிக்கெட் முன்பதிவு மீண்டும் தொடங்குகிறதா?

Fact Check By: Pankaj Iyer 

Result:Partly False