
‘’குஜராத்தில் சாக்கடையில் விழுந்த மாவட்ட ஆட்சியர்,’’ என்ற தலைப்பில் ஒரு ஃபேஸ்புக் வீடியோ வைரலாக பரவி வருகிறது. இதன்பேரில் உண்மை கண்டறியும் சோதனை செய்ய தீர்மானித்தோம்.
தகவலின் விவரம்:

Facebook Link I Archived Link
Vaithialingam Natarajan என்பவர் இந்த பதிவை ஜூலை 28, 2019 அன்று பகிர்ந்துள்ளார். அதில், பெண் ஒருவர் பேசிக் கொண்டிருக்கும்போதே திடீரென நின்றுகொண்டிருந்த பலகை சரிந்து, சாக்கடையில் விழுகிறார். அவருடன் நின்றவர்களும் கீழே விழ, சுற்றி நிற்கும் அதிகாரிகள், போலீசார் அந்த பெண்ணை ரத்தக் காயங்களுடன் மீட்பது போன்ற காட்சி இடம்பெற்றுள்ளது. இந்த வீடியோவின் மேலே, ‘’ மாவட்ட ஆட்சியர் சாக்கடையில் விழுந்தார் குஜராத்தில். வாழ்க மோடியின் சுவாச் பாரத் டிஜிடல் இந்தியா,’’ என எழுதியுள்ளார். இதனை பலரும் உண்மை என நம்பி வைரலாக ஷேர் செய்து வருகின்றனர்.
உண்மை அறிவோம்:
இவர்கள் சொல்வது போல, குறிப்பிட்ட வீடியோ சம்பவம் நிகழ்ந்தது குஜராத்தில்தான். ஆனால், அதில் இருப்பவர் மாவட்ட ஆட்சியர் அல்ல. அவர் பாஜக.,வைச் சேர்ந்த எம்பி பூனம்பென் மாதம் ஆவார்.
அத்துடன் அவர் சாக்கடையில் விழுந்தது தற்போது அல்ல. அது 2016ம் ஆண்டு மே மாதம் 16ம் நிகழ்ந்த சம்பவமாகும்.

இதுபற்றி பல்வேறு ஊடகங்களும் செய்தி வெளியிட்டுள்ளன. இந்தியன் எக்ஸ்பிரஸ் வெளியிட்ட செய்தியை படிக்க இங்கே கிளிக் செய்யவும். இதேபோல, டைம்ஸ் நவ் தொலைக்காட்சி வெளியிட்ட வீடியோ ஆதாரம் கீழே இணைக்கப்பட்டுள்ளது.
இதுவரை கிடைத்த ஆதாரங்களின் அடிப்படையில் மேற்கண்ட ஃபேஸ்புக் வீடியோ நிகழ்ந்தது குஜராத் மாநிலம் ஜாம் நகரில்தான். ஆனால், அது 2016ம் ஆண்டு நிகழ்ந்தது, அதில் இருப்பவர் பாஜக எம்பி ஆவார். மாவட்ட ஆட்சியர் அல்ல.
எனவே, குறிப்பிட்ட ஃபேஸ்புக் பதிவில் கூறியுள்ள தகவல், பாதி உண்மை, பாதி தவறான தகவல் என உறுதி செய்யப்படுகிறது.
முடிவு:
உரிய ஆதாரங்களின்படி நாம் ஆய்வு செய்த ஃபேஸ்புக் பதிவில் பாதி உண்மை, பாதி தவறான தகவல் உள்ளதாக, நிரூபிக்கப்பட்டுள்ளது. நமது வாசகர்கள் இத்தகைய தவறான செய்தி, புகைப்படம் மற்றும் வீடியோவை உறுதிப்படுத்தாமல் மற்றவர்களுக்கு பகிர வேண்டாம் என கேட்டுக் கொள்கிறோம்.

Title:குஜராத்தில் சாக்கடையில் விழுந்த மாவட்ட ஆட்சியர்: உண்மை என்ன?
Fact Check By: Pankaj IyerResult: Mixture
