லலிதா ஜூவல்லரி நகைக் கொள்ளை குற்றவாளி எச்.ராஜாவுடன் நிற்கும் புகைப்படம் உண்மையா?

அரசியல் | Politics சமூக ஊடகம் | Social

‘’லலிதா ஜூவல்லரி நகைக் கொள்ளை குற்றவாளி எச்.ராஜாவுடன் நிற்கும் புகைப்படம்,’’ என்ற பெயரில் ஃபேஸ்புக்கில் வைரலாக பரவி வரும் புகைப்படம் ஒன்றின் உண்மைத்தன்மை பற்றி ஆய்வு செய்ய தீர்மானித்தோம்.

தகவலின் விவரம்:

Facebook Link Archived Link

நையாண்டி மேளா எனும் ஃபேஸ்புக் ஐடி இந்த பதிவை வெளியிட்டுள்ளது. இதில் எச்.ராஜாவுடன் நிற்கும் ஒரு நபரை குற்றவாளி எனக்கூறி, அதன் மேலே, ‘’விதை எங்கிருந்து போட்டதுனு தெரியுதா அப்பு????திருவாரூர் விளம்மல் தொகுதி பாஜக பொருளாளர்?????,’’ என்று எழுதியுள்ளனர். இதனை பலரும் உண்மை என நம்பி வைரலாக ஷேர் செய்து வருகின்றனர்.

உண்மை அறிவோம்:

சில நாட்கள் முன்பாக, திருச்சி சத்திரம் பேருந்து நிலையம் அருகில் உள்ள லலிதா ஜூவல்லரி நகைக் கடையில் சுவரை ஓட்டை போட்டு, நகைகளை மர்ம நபர்கள் திருடிச் சென்றனர். இந்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்திய நிலையில், இதில் தொடர்புடைய குற்றவாளிகளில் ஒருவரை போலீசார் கைது செய்ததாக, ஊடகங்களில் தகவல் வெளியானது. இதுபற்றிய செய்தியை படிக்க இங்கே கிளிக் செய்யவும்.

இவ்வாறு கைது செய்யப்பட்ட மணிகண்டன் என்பவர், பாஜக.,வில் திருவாரூர் பகுதி பொருளாளராக உள்ளார் என, சமூக ஊடகங்களில் வைரலாக தகவல் பகிரப்பட்டு வருகிறது. இதன்பேரிலேயே, மேற்கண்ட ஃபேஸ்புக் பதிவும் பகிரப்பட்டுள்ளது. ஆனால், அந்த புகைப்படத்தில் மணிகண்டனுடன் இருப்பவர் எச்.ராஜா இல்லை. அதில் இருப்பவர் சசிகலா உறவினர் திவாகரன் ஆவார்.

இந்த புகைப்படம் பற்றிய தகவல் ஆதாரம் தேடியபோது பேஸ்புக் பதிவு ஒன்றின் விவரம் கிடைத்தது. அதில்தான், குறிப்பிட்ட மணிகண்டனுடன் திவாகரன் நிற்பதை காண முடிகிறது. 

Facebook LinkArchived Link

இதுதவிர திருச்சி நகைக்கடை கொள்ளையில் கைது செய்யப்பட்டவர்கள் பற்றி திருச்சி காவல்துறை இதுவரை எந்த விளக்கமும் அளிக்கவில்லை. இதுபற்றி ஏற்கனவே நமது குழுவினர் திருச்சி போலீசாரிடம் பேசியபோது, விசாரணை நடைபெற்று வருவதாக மட்டுமே போலீசார் குறிப்பிட்டிருக்கிறார்கள். அவர்களாக எதுவும் சொல்லும் வரையில் நாம் எந்த முடிவும் எடுக்க முடியாது.

தற்போதைய சூழலில், மேற்கண்ட ஃபேஸ்புக் பதிவில் கூறப்பட்டுள்ளதுபோல, மணிகண்டன் என்பவர் எச்.ராஜாவுடன் நிற்பதாகக் கூறப்படும் புகைப்படம் தவறு என தெரியவருகிறது. திவாகரனுடன் நிற்கும் புகைப்படத்தை எச்.ராஜா புகைப்படத்தை போலியாகச் சித்தரித்து வதந்தி பரப்பியுள்ளனர். அத்துடன், அவர் பாஜக.,வைச் சேர்ந்தவரா என்பதும் இன்னும் தெளிவுபடுத்தப்பட வில்லை.

எனவே, சம்பந்தப்பட்ட விவகாரம் போலீஸ் விசாரணையில் இருக்கும் சூழலில், அதில் கைது செய்யப்பட்டவர் இவர்தான், இவர் இந்த கட்சியை சேர்ந்தவர் என்றெல்லாம் வதந்தி பகிரப்படுவது தவறான செயலாகும். சமூக ஊடக வாசகர்களை குழப்பக்கூடியதாகும்.

முடிவு:

உரிய ஆதாரங்களின்படி நாம் ஆய்வு செய்த ஃபேஸ்புக் புகைப்படம் தவறானது என நிரூபிக்கப்பட்டுள்ளது. நமது வாசகர்கள் இத்தகைய தவறான செய்தி, புகைப்படம் மற்றும் வீடியோவை பகிர வேண்டாம் என கேட்டுக் கொள்கிறோம்.

Avatar

Title:லலிதா ஜூவல்லரி நகைக் கொள்ளை குற்றவாளி எச்.ராஜாவுடன் நிற்கும் புகைப்படம் உண்மையா?

Fact Check By: Pankaj Iyer 

Result: False