
‘’லஞ்சம் கேட்ட போலீஸ் ஏட்டை மீன் வியாபாரி வெட்டினார்,’’ என்ற தலைப்பில் ஒரு வைரல் ஃபேஸ்புக் பதிவை காண நேரிட்டது. இதன்பேரில் உண்மை கண்டறியும் சோதனை செய்ய தீர்மானித்தோம்.
தகவலின் விவரம்:
Facebook Link I Archived Link
Gulam Nabi Azath என்பவர் மேற்கண்ட ஃபேஸ்புக் பதிவை, ஜூலை 11, 2019 அன்று வெளியிட்டுள்ளார். இதில், போலீஸ் ஒருவர் ரத்தக் காயங்களுடன் உள்ள புகைப்படத்தை பகிர்ந்து அதன் மேலே, ‘’ லஞ்சம் கேட்டவருக்கு அரிவாள் வெட்டு. திருச்சி அரியமங்கலம் மீன் வியாபாரியிடம் லஞ்சம் கேட்ட போலிஸ் ஏட்டு. மீன் வியாபாரி ஆத்திரத்தில் அரிவாளால் வெட்டி விட்டார்,’’ என்று கூறியுள்ளார். இதனை பலரும் உண்மை என நம்பி வைரலாக ஷேர் செய்து வருகின்றனர்.
உண்மை அறிவோம்:
முதலில், இந்த பதிவில் பதிவிடப்பட்டுள்ள கமெண்ட்களை படித்து பார்த்தோம். அவை அனைத்தும் மிகவும் கீழ்த்தரமாகவும், ஒரு நபரின் காயத்தை கொண்டாடும் மனநிலையிலும் இருந்தன. இதுதவிர, இதில் கமெண்ட் இடுபவர்கள் பலரும் முஸ்லீம்களாகவே காணப்படுகின்றனர். இது மிகவும் சந்தேகத்தை ஏற்படுத்தும் வகையில் இருந்தது.
முஸ்லீம்கள் என்றில்லை. பொதுவாக, ஒரு குறிப்பிட்ட சமூகத்தினர் அதிகளவில் ஒரு விசயத்தில் ஆர்வம் காட்டுகிறார்கள் என்றால், அதில், அவர்களுக்கு ஆதரவாக அல்லது எதிரான விசயம் எதுவோ நடந்துள்ளது என்று அர்த்தம்.
இதன்படி, இவர்கள் குறிப்பிடும் புகைப்படத்தில் இருப்பவர் யார் என்றும், இதுபற்றிய உண்மைச் செய்தி என்ன என்றும் கூகுளில் தகவல் தேடினோம். அப்போது, இதுதொடர்பாக நிறைய செய்தி ஆதாரங்கள் கிடைத்தன.
வெட்டுப்பட்ட நபரின் பெயர் ஹரிஹரன். அவர், திருச்சி அரியமங்கலம் போலீஸ் நிலையத்தில் தலைமைக் காவலராக உள்ளார். இந்நிலையில், கடந்த 8ம் தேதி (திங்கள்கிழமை) உக்கடை பகுதியில் இஸ்மாயில் என்ற மீன் வியாபாரி போதையில் மருந்துக்கடை ஒன்றில் தகராறு செய்வதாக தகவல் கிடைத்துள்ளது. இதன்பேரில், அங்கு விசாரிக்கச் சென்ற ஹரிஹரனை, இஸ்மாயில் அரிவாளால் வெட்டிவிட்டு தப்பியோடியுள்ளார் என்று, அந்த செய்தி ஆதாரங்களில் குறிப்பிடப்பட்டுள்ளது. இதுபற்றி தினமணி வெளியிட்ட செய்தி ஆதாரம் படிக்க இங்கே கிளிக் செய்யவும். இதேபோல, நக்கீரன் வெளியிட்ட செய்தியை படிக்க இங்கே கிளிக் செய்யவும்.
இதே செய்தியை டைம்ஸ் ஆஃப் இந்தியா வெளியிட்டிருந்தது. அதிலும், இதே செய்திதான் குறிப்பிடப்பட்டிருந்தது. அந்த நபரை கைது செய்விட்டதாகவும், டைம்ஸ் ஆஃப் இந்தியா செய்தியில் கூறப்பட்டிருந்தது. அச்செய்தியை படிக்க இங்கே கிளிக் செய்யவும்.
இதுதவிர, இதுபற்றி ஏதேனும் வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளதா என தமிழக போலீசின் இணையதள சேவையில் தேடினோம். ஆனால், எஃப்ஐஆர் எதுவும் பதிவு செய்யப்பட்டதற்கான விவரம் கிடைக்கவில்லை. இதையடுத்து, திருச்சி மாநகர போலீஸ் கமிஷனர் அலுவலகத்தை தொடர்புகொண்டு கேட்டோம். அவர்களிடம் இதுபற்றி கேட்டபோது, லஞ்சம் கேட்டதால் இந்த சம்பவம் நிகழவில்லை என்று மறுத்தனர். அத்துடன், இதுபற்றி சம்பந்தப்பட்ட போலீஸ் நிலையத்தில் கேட்டு தெளிவுபடுத்தக் கூறினர்.
அவர்களின் உதவியுடன், சம்பந்தப்பட்ட திருச்சி மாநகர அரியாமங்கலம் போலீஸ் நிலையத்தை தொடர்பு கொண்டு பேசினோம்.
அப்போது அவர்கள், ‘’இச்சம்பவம் உண்மைதான். போலீஸ் ஏட்டு ஹரிஹரனை வெட்டியவர் ஒரு முஸ்லீம். அவரது பெயர் இஸ்மாயில். மீன் வியாபாரியான அந்த நபர் சம்பவத்தன்று உள்ளூர் மருந்துக் கடையில் தகராறு செய்தார். அதனை தட்டிக் கேட்கச் சென்ற போலீஸ் ஏட்டு ஹரிஹரனை அரிவாளால் வெட்டிவிட்டு தப்பியோடினார். அவரை தற்போது கைது செய்துள்ளோம். அவர் மீது மருந்து கடைக்காரர் அளித்த புகார் அடிப்படையில், Crime Number 348/19 Section 387, 506/2 மற்றும் போலீஸ்காரர் மீது தாக்குதல் நடத்தப்பட்டதன் அடிப்படையில் Crime Number 349/19 Section 294b 324, 353, 307 ஆகிய பிரிவுகளில் வழக்குப் பதிந்துள்ளோம். சமூக ஊடகங்களில் கூறப்படுவதைப் போல, ஏட்டு ஹரிஹரன் யாரிடமும் லஞ்சம் கேட்கவில்லை. இது மிகவும் விஷமத்தனமான தகவல்,’’ என தெரிவித்தனர்.
இதுவரை கிடைத்த ஆதாரங்களின் படி பார்க்கும்போது, சம்பந்தப்பட்ட போலீஸ் ஏட்டு தனது பணியை செய்ய சென்றபோதுதான் வெட்டப்பட்டுள்ளார். அவர் யாரிடமும் லஞ்சம் கேட்கவில்லை என தெரியவருகிறது. அதாவது, அவரை வெட்டியவர் ஒரு முஸ்லீம் என்பதால், அந்த தவறை மறைக்க, மேற்கண்ட ஃபேஸ்புக் பதிவர் உள்ளிட்ட பலர், ‘’லஞ்சம் கேட்டதால் போலீஸ் ஏட்டு வெட்டப்பட்டார்,’’ என்று தவறான தகவலை பகிர்ந்து வருகிறார்கள் என சந்தேகமின்றி உறுதி செய்யப்படுகிறது.
முடிவு:
உரிய ஆதாரங்களின்படி நாம் ஆய்வு செய்த ஃபேஸ்புக் பதிவு தவறான ஒன்று என நிரூபிக்கப்பட்டுள்ளது. நமது வாசகர்கள் யாரும் இத்தகைய தவறான செய்தி, புகைப்படம் மற்றும் வீடியோவை உறுதி செய்யாமல் மற்றவர்களுக்கு பகிர வேண்டாம் என கேட்டுக் கொள்கிறோம்.

Title:லஞ்சம் கேட்டதற்காக வெட்டப்பட்ட போலீஸ் ஏட்டு: பொதுமக்களை குழப்பும் ஃபேஸ்புக் பதிவு
Fact Check By: Pankaj IyerResult: False
