
‘’மோடி அரசின் பண மதிப்பிழப்பு நடவடிக்கையால் பாதிக்கப்பட்ட ஏழை, எளிய நடுத்தர மக்களே – நடிகர் விஜய்,’’ என்ற தலைப்பில் ஒரு ஃபேஸ்புக் வைரல் வீடியோ செய்தி காண நேரிட்டது. இதன் உண்மைத்தன்மை பற்றி ஆய்வு செய்தோம்.
தகவலின் விவரம்:
மோடி அரசின் பண மதிப்பிழப்பு நடவடிக்கையால் பாதிக்கப்பட்ட ஏழை எளிய நடுத்தர மக்களே! – நடிகர் விஜய்.
ஏப்ரல் 4ம் தேதி தமிழன் டா – Thamilan Da என்ற ஃபேஸ்புக் குழு இதனை பகிர்ந்துள்ளது. இதில், நடிகர் விஜய் பணமதிப்பிழப்பு நடவடிக்கை பற்றி விமர்சித்துப் பேசுகிறார். அதன் மேலேயே, பணமதிப்பிழப்பால் பாதிக்கப்பட்டு இறந்த பொதுமக்கள் இந்த சர்க்காரை மாற்றுவோம், ஒரு விரல் புரட்சி செய்வோம் என்று எழுதி, பகிர்ந்துள்ளனர். உண்மையில் நடிகர் விஜய் பேசியதன் முழு விவரம் தெரியாமல் பலரும் இந்த வீடியோவை ஷேர் செய்து வருகின்றனர்.
உண்மை அறிவோம்:
கடந்த 2016ம் ஆண்டு நவம்பர் 8ம் தேதியன்று மத்திய அரசு, பண மதிப்பிழப்பு நடவடிக்கையை அறிவித்தது. இதன்படி, ரூ.500, ரூ.1000 நோட்டுகள் செல்லாது என அறிவிக்கப்பட்டு, நாடு முழுவதும் பொதுமக்கள் தங்களிடம் உள்ள பழைய ரூபாய் நோட்டுகளை வங்கிகளில் சமர்ப்பித்து, புதிய நோட்டுகளை பெற்றுக் கொள்ளும்படி, பிரதமர் மோடி அதிரடியாக அறிவித்தார். இதனால், பலர் உயிரிழக்க நேரிட்டதுடன், நாட்டு மக்களிடையே கடும் அதிருப்தியையும் இந்த நடவடிக்கை ஏற்படுத்தியது. இதுபற்றிய முழு விவரம் இங்கே இணைக்கப்பட்டுள்ளது.
இந்த பணமதிப்பிழப்பு நடவடிக்கை பற்றி, அப்போதே நடிகர்கள், அரசியல்வாதிகள் என பலரும் கருத்துகளை பகிர்ந்திருந்தனர். இப்படித்தான் நடிகர் விஜயும் பேசியிருக்க வாய்ப்புள்ளது. ஆனால், மேற்கண்ட ஃபேஸ்புக் வீடியோவில் உள்ளது போல, அவர் முற்றிலும் மத்திய அரசை கண்டிப்பதுபோல பேசியதாக தெரியவில்லை. எனவே, இதன்பேரில், வீடியோவின் ஒரு ஃபிரேமை மட்டும் பிரித்தெடுத்து, அதனை Yandex இணையதளம் உதவியுடன் ரிவர்ஸ் இமேஜ் தேடல் செய்தோம்.
அப்போது இந்த வீடியோ தொடர்பான செய்தி ஆதாரங்கள் பல கிடைத்தன. ஆதார படம் கீழே தரப்பட்டுள்ளது.

இதில், புதிய தலைமுறை வெளியிட்ட செய்தி இணைப்பும் ஒன்றும் கிடைத்தது. அதனை திறந்து பார்த்தோம். அப்போது, பண மதிப்பிழப்பு நடவடிக்கை தொடர்பாக, விஜய் பேசிய வீடியோவும், அதுபற்றிய செய்தி விவரமும் கிடைத்தது. புதிய தலைமுறை இணையதளத்தில் வெளியான அந்த செய்தியை படிக்க இங்கே கிளிக் செய்யுங்கள்.

கடந்த நவம்பர் 15, 2016ம் தேதியன்று, நடிகர் விஜய் ஊடகங்களுக்கு இந்த பேட்டியை அளித்துள்ளார். அதில், பண மதிப்பிழப்பு பற்றியும், அதனால் இந்திய மக்கள் சந்திக்கும் பிரச்னைகள் பற்றியும் அவர் குறிப்பிட்டுள்ளார். மேலும், ‘’பண மதிப்பிழப்பு நடவடிக்கையால் இந்திய பொருளாதாரம் நிச்சயமாக உயரும், பிரதமர் மோடியின் அறிவிப்பு பாராட்ட வேண்டிய ஒன்றுதான். அதன் நோக்கம் உயர்வானது. அதேசமயம், 20 சதவீத பணக்காரர்களுக்காக, 80 சதவீத மக்கள் மீது பாதிப்பை ஏற்படுத்துவது நியாயமா? நோக்கம் உயர்வானதாக இருந்தாலும், அதனால் ஏற்படும் பாதிப்பு அதிகமாக இருந்துவிடக்கூடாது. பண மதிப்பிழப்பால் பலரது திருமணம் நின்று, அன்றாட பிழைப்பு நடத்த முடியாத நிலை உள்ளது. இதனை கவனிக்க வேண்டும்,’’ இப்படித்தான் நடிகர் விஜய் பேசியுள்ளார். அவர் எந்த இடத்திலும், மத்திய அரசை நேரடியாக தாக்கிப் பேசவில்லை. எனவே, அவரது பேட்டி வீடியோவில் உள்ள பாதியை மட்டும் எடிட் செய்து, மேற்கண்ட ஃபேஸ்புக் குழு தங்களது கருத்துக்கு ஏற்ப சித்தரித்து பகிர்ந்துள்ளது உறுதியாகிறது.
இதையடுத்து, இந்த வீடியோவின் உண்மையான ஆதாரம், புதிய தலைமுறை தொலைக்காட்சியின் யூ டியூப் பக்கத்தில் உள்ளதா என தேடிப் பார்த்தோம். நீண்ட நேரம் தேடியும் கிடைக்கவில்லை.

எனவே, இதே செய்தித் தலைப்பில், கூகுளில் வேறு ஏதேனும் வீடியோ ஆதாரம் உள்ளதா என தேடிப்பார்த்தோம். அப்போது, புதிய தலைமுறையின் இதே வீடியோவை வேறு ஒரு நபர் தனது யூ டியூப் பக்கத்தில் பகிர்ந்திருந்த ஆதாரம் கிடைத்தது. புதிய தலைமுறையின் யூ டியூப் பக்கத்தில் இல்லாவிட்டாலும், அதன் லோகோவுடன், மற்றொரு நபர் பகிர்ந்திருந்தது நமது தேடலுக்கு மேலும் வலு சேர்ப்பதாக அமைந்தது. முழு வீடியோ கீழே தரப்பட்டுள்ளது.
இந்த வீடியோவில் 46வது விநாடியில் இருந்து, விஜய் பேசுவது அப்படியே, நாம் ஆய்வுக்கு எடுத்துக் கொண்ட வீடியோவில் உள்ள கருத்துடன் ஒத்துப் போகிறது.

விஜய் பேசியதை பாதி எடிட் செய்துவிட்டு, மீதியை மட்டும் இவர்கள் எடுத்து பகிர்ந்துள்ளது உறுதியாகிறது. எனவே, விஜய் பேசியது உண்மைதான், ஆனால், சர்காரை மாற்றுவோம், புரட்சி செய்வோம் என்பது எல்லாம், இந்த வீடியோவை ஃபேஸ்புக்கில் பகிர்ந்தவர்களின் சொந்த கருத்து என உறுதியாகிறது.
முடிவு:
உரிய ஆதாரங்களின்படி, நாம் ஆய்வுக்கு எடுத்தக் கொண்ட ஃபேஸ்புக் வீடியோ, பாதி உண்மை; பாதி தவறான தகவல்களை கொண்டதாக உள்ளதென்று, நிரூபிக்கப்பட்டுள்ளது. நமது வாசகர்கள் யாரும் இத்தகைய நம்பகத்தன்மை இல்லாத செய்தி, புகைப்படம் மற்றும் வீடியோவை சமூக ஊடகங்களில் பகிர வேண்டாம் என கேட்டுக் கொள்கிறோம். அப்படி நீங்கள் பகிர்ந்தது பற்றி யாரேனும் புகார் அளித்தால், உரிய சட்ட நடவடிக்கையை சந்திக்க நேரிடும் என்பதை நீங்கள் நினைவில் கொள்ளுங்கள்.

Title:மோடி அரசின் பண மதிப்பிழப்பு நடவடிக்கை பற்றி விஜய் பேசியது என்ன?
Fact Check By: Parthiban SResult: Mixture
