
உலக வங்கியிடம் 3.5 லட்சம் கோடி டாலர் கடன் உதவி கோரி பிரதமர் மோடி அமெரிக்கா சென்றார் என்று ஒரு நியூஸ் கார்டு சமூக ஊடகங்களில் பகிரப்பட்டு வருகிறது. இது பற்றி ஆய்வு செய்தோம்.
தகவலின் விவரம்:

அசல் பதிவைக் காண: Facebook I Archive
பிரதமர் மோடி அமெரிக்கா புறப்பட்டுச் சென்ற புகைப்படத்துடன் கூடிய புதிய தலைமுறை நியூஸ் கார்டு பகிரப்பட்டுள்ளது. அதில், “இன்று அமெரிக்கா புறப்படுகிறார் பிரதமர் மோடி. இந்திய பொருளாதாரம் வரலாறு காணாத அளவிற்கு சரிந்திருக்கும் நிலையில் உலக வங்கியிடம் மூன்றரை லட்சம் கோடி டாலர்கள் கடனுதவி கோருவதற்காக பிரதமர் மோடி அமேரிக்கா பயணம்” என்று இருந்தது.
இந்த பதிவை பி. ஜோதி எம் இ என்ற ஃபேஸ்புக் ஐடி-யைக் கொண்டவர் 2021 செப்டம்பர் 23ம் தேதி பதிவிட்டுள்ளார். பலரும் இதை ஷேர் செய்து வருகின்றனர்.

உண்மை அறிவோம்:
பிரதமர் மோடி ஐநா பொது சபைக் கூட்டத்தில் பங்கேற்பதற்காக அமெரிக்கா சென்றார். அங்கு அவர் அமெரிக்க அதிபர் உள்ளிட்ட உலகத் தலைவர்கள், பல்வேறு நிறுவனங்களின் சி.இ.ஓ-க்களை சந்திப்பதாக அறிவிக்கப்பட்டிருந்தது. ஆனால், 3.5 லட்சம் கோடி டாலர் கடன் உதவி கேட்டு உலக வங்கி நிர்வாகிகளை சந்திக்கிறார் என்று எந்த ஒரு தகவலும் வெளியாகவில்லை.
இதுதொடர்பாக பிரதமர் மோடியின் வெளிநாட்டு பயண நிகழ்ச்சி நிரல் விவரங்களைத் தேடினோம். அப்போது நியூயார்க்கை தலைமையிடமாகக் கொண்டு செயல்படும் தனியார் நிதி அமைப்பான பிளாக்ஸ்டோன் சி.இ.ஓ-வை சந்திப்பதாகக் கூட குறிப்பிட்டிருந்தனர். ஆனால், உலக வங்கி நிர்வாகிகளை சந்திப்பதாக எந்த ஒரு தகவலும் இல்லை. அப்படியே சந்தித்தாலும் அதில் தவறும் இல்லை.

அசல் பதிவைக் காண: pmindia.gov.in I Archive 1 I indiatoday.in I Archive 2
பிரதமர் மோடி 3.5 லட்சம் கோடி டாலர் கடன் வாங்குவதற்காக அமெரிக்கா சென்றார் என்று ஏதேனும் செய்தி வெளியாகி உள்ளதா என்று பார்த்தோம். எந்த ஒரு செய்தியும் கிடைக்கவில்லை. பிரதமர் நிகழ்ச்சி நிரலிலும் அந்த தகவல் இல்லை. எனவே, கடன் வாங்கி அமெரிக்கா செல்கிறார் என்ற தகவல் உண்மையில்லை என்பது உறுதியானது.
அடுத்ததாக, இந்த நியூஸ் கார்டு பற்றி ஆய்வு செய்தோம். பின்னணி லோகோவோடு பார்க்க புதிய தலைமுறை வெளியிட்டது போல உள்ளது. ஆனால், இதில் உள்ள தமிழ் ஃபாண்ட் வழக்கமாக புதிய தலைமுறை பயன்படுத்தும் ஃபாண்ட் இல்லை. மேலே அமெரிக்கா என்று சரியாக குறிப்பிட்டுவிட்டு கீழே அமேரிக்கா என்று தவறாக எழுதப்பட்டிருந்தது. இவை எல்லாம் இந்த நியூஸ் கார்டு உண்மையானது இல்லை என்பதை உறுதி செய்தன.
புதிய தலைமுறை 2021 செப்டம்பர் 22ம் தேதி வெளியிட்ட நியூஸ் கார்டுகளை அதன் ஃபேஸ்புக் பக்கத்தில் பார்வையிட்டோம். அப்போது பிரதமர் மோடி புகைப்படத்துடன் புதிய தலைமுறை வெளியிட்ட உண்மையான நியூஸ் கார்டு கிடைத்தது.
அதில், “4 நாள் அரசு முறை பயணமாக இன்று காலை அமெரிக்கா புறப்படுகிறார் பிரதமர் நரேந்திர மோடி; அமெரிக்க அதிபர் ஜோ பைடன் உள்பட பல முக்கிய தலைவர்களை சந்திக்கிறார்” என்று இருந்தது. இந்த நியூஸ் கார்டை எடிட் செய்து தவறாக வதந்தி பரப்பிவருவது தெரியவந்தது. இதை மேலும் உறுதி செய்ய, புதிய தலைமுறை டிஜிட்டல் பிரிவு நிர்வாகியைத் தொடர்புகொண்டு கேட்டோம். அவரும் இது போலியானது என்றார்.

அசல் பதிவைக் காண: Facebook
நம்முடைய ஆய்வில்,
பிரதமர் மோடி கடன் வாங்குவதற்காக அமெரிக்கா செல்கிறார் என்று எந்த ஒரு செய்தியும் நமக்குக் கிடைக்கவில்லை.
பிரதமர் மோடியின் நிகழ்ச்சி நிரலில் உலக வங்கி அதிகாரிகளை சந்திப்பதாக எந்த ஒரு தகவலும் இல்லை.
புதிய தலைமுறை வெளியிட்டது போன்று பகிரப்படும் நியூஸ் கார்டு போலியானது என்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
இந்த ஆதாரங்கள் அடிப்படையில், கடன் வாங்குவதற்காக பிரதமர் மோடி அமெரிக்கா செல்கிறார் என்று பகிரப்படும் நியூஸ் கார்டு போலியானது என்று உறுதி செய்யப்படுகிறது.
முடிவு:
உலக வங்கியில் கடன் வாங்குவதற்காக பிரதமர் மோடி அமெரிக்கா செல்கிறார் என்று பரவும் நியூஸ் கார்டு போலியானது என்பதை தகுந்த ஆதாரங்களுடன் ஃபேக்ட் கிரஸண்டோ தமிழ் உறுதி செய்துள்ளது. எனவே, நமது வாசகர்கள், இத்தகைய தவறான செய்தி, புகைப்படங்கள், வீடியோ போன்றவற்றை உறுதி செய்யாமல் மற்றவர்களுக்குப் பகிர வேண்டாம் என கேட்டுக் கொள்கிறோம். வாசகர்கள் தங்களுக்கு சந்தேகம் என்று தோன்றும் தகவல், பதிவு, புகைப்படம், வீடியோவை எங்களது வாட்ஸ் ஆப் எண்ணிற்கு (+91 9049053770) அனுப்பினால், அதுபற்றி ஆய்வு செய்து உண்மை விவரத்தை வெளியிடுகிறோம்.
சமூக ஊடகங்களில் எங்களை பின் தொடர விரும்பினால்…
Facebook I Twitter I Google News Channel

Title:உலக வங்கியில் கடன் வாங்க அமெரிக்கா சென்ற மோடி என பரவும் போலியான நியூஸ் கார்டு!
Fact Check By: Chendur PandianResult: False
