FACT CHECK: வங்கதேசத்தில் இஃப்தார் விருந்து வழங்கிய இஸ்கான் துறவி படுகொலை செய்யப்பட்டாரா?

அரசியல் | Politics சமூக ஊடகம் | Social சர்வதேசம் | International

வங்கதேசத்தில் கடந்த ரம்ஜான் மாதத்தின் போது 30 நாட்களும் இஸ்லாமியர்கள் நோன்பு திறப்பின்போது உணவளித்த இஸ்கான் வைஷ்ணவ துறவியை இஸ்லாமியர்கள் படுகொலை செய்தார்கள் என்று ஒரு படம் சமூக ஊடகங்களில் வைரலாக பகிரப்பட்டு வருகிறது. அது பற்றி ஆய்வு செய்தோம்.

தகவலின் விவரம்:

அசல் பதிவைக் காண: Facebook I Archive

யாரோ வெளியிட்ட ஃபேஸ்புக் பதிவின் மொழி பெயர்ப்பை புகைப்படமாக எடுத்து பதிவிட்டுள்ளனர். அதில், இந்து துறவி ஒருவர் இஸ்லாமியர்களுக்கு உணவு வழங்கும் புகைப்படம் உள்ளது. அதனுடன், “பங்களாதேஷ் இஸ்கான் கோவில் மீது சமீபத்திய தாக்குதலில் இறந்த சுவாமி நிதிதாஸ் பிரபு இவர்தான். கடந்த ரமலான் 30 நாட்களும் ரோசாவிற்கு பிறகு இஃப்தார் ஏற்பாடு செய்து முஸ்லிம்களுக்கு உணவளித்தார். கதையின் நீதி – பாம்புக்கு பால் சார்த்தான். விஷத்தால் மாண்டான்” என்று இருந்தது.

இந்த பதிவை Om Namasivaya என்ற ஃபேஸ்புக் ஐடி கொண்ட நபர் 2021 அக்டோபர் 22ம் தேதி பதிவிட்டுள்ளார். பலரும் இதை ஷேர் செய்து வருகின்றனர்.

உண்மை அறிவோம்:

வங்கதேசத்தில் இஸ்கான் கோவியில் மீது தொடர் தாக்குதல் நடத்தப்பட்டதில் இரண்டு பக்தர்கள் உயிரிழந்தனர். வங்கதேசத்தின் கொமிலா என்ற பகுதியில் அமைக்கப்பட்ட துர்கா பூஜை பந்தலில் குரான் அவமரியாதை செய்யப்பட்டதாக தகவல் பரவ இந்து கோவில்கள் மீது தாக்குதல் நடத்தப்பட்டதாக அங்கிருந்து வரும் செய்திகள் தெரிவிக்கின்றன.

இந்த சூழலில் கடந்த ரம்ஜான் மாதத்தின் போது 30 நாட்களும் இஸ்லாமியர்கள் நோன்பு திறக்க உணவு வழங்கிய சாமியாரை இஸ்லாமியர்கள் அடித்து கொலை செய்துவிட்டார்கள் என்று படத்துடன் செய்தி பகிரப்பட்டுள்ளது. இது உண்மையா என்று ஆய்வு செய்தோம். 

அசல் பதிவைக் காண: ucanews.com I Archive

படத்தை ரிவர்ஸ் இமேஜ் தேடலில் பதிவேற்றித் தேடியபோது, அந்த புகைப்படம் 2016ம் ஆண்டில் பல இணைய ஊடகங்களில் பயன்படுத்தப்பட்டிருப்பது தெரிந்தது. மேலும் இந்த புகைப்படம் 2016ம் ஆண்டு இந்தியாவின் மேற்கு வங்கத்தில் உள்ள மாயாபூர் என்ற இடத்தில் எடுக்கப்பட்டது என்று குறிப்பிடப்பட்டிருந்தது.

அதே நேரத்தில் மாயாபூரில் இஸ்லாமியர்களுக்கு இஃப்தார் விருது வழங்கப்பட்டது என்று அந்த செய்தியில் குறிப்பிடப்பட்டு இருந்தது. ஆனால், படத்தில் இருக்கும் துறவியில் பெயரை அந்த செய்தியில் அவர்கள் குறிப்பிடவில்லை.

அசல் பதிவைக் காண: google.com

வங்கதேச இஸ்கான் தாக்குதலில் கொல்லப்பட்ட இஸ்கான் பக்தர்களின் பெயரைத் தேடிப் பார்த்தோம். பார்த்தா சந்திர தாஸ் என்றும் ஜாதன் சந்திர சாஹா என்றும் பல செய்திகளில் குறிப்பிடப்பட்டிருந்தது. இஸ்கான் வெளியிட்டிருந்த செய்திக் குறிப்பிலும் கூட கொல்லப்பட்ட வைஷ்ணவ பக்தர்களின் பெயர் பிரந்த சந்திரதாஸ் மற்றும் ஜாதன் சந்திர சாஹா என்று குறிப்பிடப்பட்டிருந்தது.

மேலும் இந்த தாக்குதலில் நிமாய் சந்திர தாஸ் என்பவர் படுகாயம் அடைந்து உயிருக்கு ஆபத்தான நிலையில் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார் என்றும் குறிப்பிட்டிருந்தனர். 

நம்முடைய ஃபேக்ட் கிரஸண்டோ வங்கமொழி பிரிவிலும் இது தொடர்பான உண்மை கண்டறியும் ஆய்வு வெளியிடப்பட்டிருந்தது. அதிலும், இஸ்கான் வெளியிட்டிருந்த அறிக்கையை ஆதாரமாக அளித்திருந்தனர். மேலும், இஸ்கான் தகவல் தொடர்பு இயக்குநர் யுதிஷ்ட்ர கோவிந்த் தாஸை தொடர்புகொண்டு படத்தில் உள்ள நபர் நிதிதாஸ் பிரபுவா என்று விசாரித்துள்ளனர்.

அதற்கு அவர், “இந்த புகைப்படம் 2016ல் எடுக்கப்பட்டது. படத்தில் உள்ளவரின் பெயர் Ivan Antić. குரோஷியாவைச் சார்ந்தவர். இஸ்கானில் இணைந்து தீக்‌ஷை பெற்ற பிறகு பலரும் தங்கள் பெயரை மாற்றிக்கொள்வது வழக்கம். அதன்படி அவர் தன்னுடைய பெயரை சைத்தன்யா நிதி தாஸ் என்று மாற்றிக்கொண்டுள்ளார். கொரோனாவுக்கு முன்னதாக அவர் தன்னுடைய சொந்த நாட்டுக்குத் திரும்பிவிட்டார். அங்கு அவர் நலமுடன் உள்ளார். சம்பவம் நடந்த போது அவர் வங்கதேசத்தில் இல்லை” என்று கூறியுள்ளார்.

Archive

நாம் ஆய்வுக்கு எடுத்துக்கொண்ட பதிவில் உள்ள புகைப்படம் 2016ம் ஆண்டு எடுக்கப்பட்டது என்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. மேலும் இந்த புகைப்படம் இந்தியாவில் எடுக்கப்பட்டது என்பதும் உறுதி செய்யப்பட்டுள்ளது.

வங்கதேச தாக்குதலில் நிதிதாஸ் பிரபு என்ற பெயர் கொண்ட துறவி கொல்லப்பட்டதாக எந்த ஒரு செய்தியும் இல்லை. இஸ்கான் வெளியிட்ட அறிக்கையில் கொல்லப்பட்ட பக்தர்களின் பெயர்கள் குறிப்பிடப்பட்டுள்ளது.

படத்தில் உள்ளவர் தற்போது குரோஷியாவில் நலமுடன் உள்ளார் என்று இஸ்கான் தரப்பில் உறுதி செய்யப்பட்டுள்ளது.

இதன் மூலம் இஃப்தார் விருந்து வழங்கிய வைஷ்ணவ துறவியை இஸ்லாமியர்கள் கொலை செய்தார்கள் என்று பகிரப்படும் தகவல் உண்மையில்லை என்பது உறுதி செய்யப்படுகிறது.

முடிவு:

ரம்ஜானின்போது இஸ்லாமியர்கள் நோன்பு திறக்க உணவு வழங்கிய இந்து துறவி கொல்லப்பட்டார் என்று பகிரப்படும் தகவல் தவறானது என்பதை தகுந்த ஆதாரங்களுடன்  ஃபேக்ட் கிரஸண்டோ தமிழ் உறுதி செய்துள்ளது. எனவே, நமது வாசகர்கள், இத்தகைய தவறான செய்தி, புகைப்படங்கள், வீடியோ போன்றவற்றை உறுதி செய்யாமல் மற்றவர்களுக்குப் பகிர வேண்டாம் என கேட்டுக் கொள்கிறோம். வாசகர்கள் தங்களுக்கு சந்தேகம் என்று தோன்றும் தகவல், பதிவு, புகைப்படம், வீடியோவை எங்களது வாட்ஸ் ஆப் எண்ணிற்கு (+91 9049053770) அனுப்பினால், அதுபற்றி ஆய்வு செய்து உண்மை விவரத்தை வெளியிடுகிறோம்.

சமூக ஊடகங்களில் எங்களை பின் தொடர விரும்பினால்…

Facebook I Twitter I Google News Channel

Avatar

Title:வங்கதேசத்தில் இஃப்தார் விருந்து வழங்கிய இஸ்கான் துறவி படுகொலை செய்யப்பட்டாரா?

Fact Check By: Chendur Pandian 

Result: False